நம் கலாச்சாரத்தில் விபூதி பூசும் பழக்கம் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் பரவலாக சந்தனம் பூசிக் கொள்ளும் பழக்கமும் இருந்து வருகிறது. இதனால் என்ன நன்மை?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

சக்தியை கிரகித்துக்கொள்ளும் பொருட்டு விபூதி பூசப்படுகிறது. ஆனால் சந்தனம் குளிர்ச்சிக்காக உடலில் பூசிக்கொள்ளப்படுகிறது. அதிக உஷ்ணம் கொண்ட உடலில் சில இடங்களில் சந்தனம் வைத்துக்கொண்டால், குளிர்ச்சி உண்டாகும். மேல் தோலுக்கும் சுகமாக இருக்கும். நமது கலாச்சாரத்தில் ஒருவருக்கு முடி இறக்கினால் கூட, முடி இறக்கிய பின்பு, தலையில் சந்தனத்தை குழைத்துப் பூசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் தோலுக்குக் குளிர்ச்சியும், சுகமும் கிடைக்கிறது. நேரடியாக சந்தனக்கட்டையை இழைத்துப் பூசும்போது உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கிறது.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் திருநீறு வைத்துக் கொள்வதைப்போல், வியாபாரம் மற்றும் தொழில்துறையில் இருக்கும் பிரிவினர் குறிப்பாக சந்தனம் வைத்துக்கொள்வார்கள்.

பொதுவாக சந்தனத்தை நெற்றியிலும், தொண்டைக் குழியிலும் வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ஏனென்றால் உடலின் உஷ்ணம் தொண்டைக் குழியில் சேர்ந்துவிட்டால், நமக்கு உணவு ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும். இந்த இடத்தில் வெப்பம் சேர்ந்துவிட்டால் நமக்கு யாரைப் பார்த்தாலும் வெறுப்பு உண்டாகும். உடலில் உஷ்ணம் என்பது பல இடங்களில் உண்டாகலாம். தொப்புள் பகுதியின் மணிப்பூரகத்தில் சேர்ந்தால் ஒருவிதமான விளைவு ஏற்படும். சுவாதிஷ்டானத்தில் சேர்ந்தால் வேறு விளைவு உண்டாகும். அநாகதத்தில் சேர்ந்தால் இன்னொரு விதமாக நிகழும். விசுக்தியில் சேர்ந்தால் மற்றொரு விளைவு உண்டாகும்.

வெளி உலகத்தில் மற்றவர்களோடு இணைந்து செயல் செய்ய வேண்டியிருக்கும்போது, நாம் குளிர்ந்த தன்மையோடு இருந்தால், எந்த செயலும் நல்லவிதமாக நிகழும் என்ற புரிதல் இருந்ததால், தொழிலில் இருப்பவர்கள் சந்தனம் வைத்துக்கொள்வார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் திருநீறு வைத்துக் கொள்வதைப்போல், வியாபாரம் மற்றும் தொழில்துறையில் இருக்கும் பிரிவினர் குறிப்பாக சந்தனம் வைத்துக்கொள்வார்கள். உங்களது உடலின் உஷ்ண மிகுதியால் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டால், சந்தனம் குழைத்து தொப்புளில் சிறிது வைத்துவிட்டால், 5 - 10 நிமிடங்களில், வயிற்று வலி பறந்து விடுவதை கவனித்திருப்பீர்கள். 5 நிமிடங்களில் உடல் குளிர்ந்து விடும்.

கோவிலில் உள்ள சக்தி ரூபங்களுக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை உபயோகிக்கும் வழக்கம் நமது கலாச்சாரத்தில் உள்ளது. அந்த சக்தி ரூபங்களுக்கு சந்தனம் சாற்றும்போது, அந்த சந்தனத்திற்கும் சக்தி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்பதால் அதை எடுத்துவைத்துக் கொண்டு தினமும் உபயோகிப்பார்கள்.

சந்தனம் தவிர அதே விதமான பொருட்கள் அநேகம் உண்டு. ஆனால் அவை அனைத்திலும் முதன்மை இடம் வகிப்பது சந்தனம்தான். ஆனாலும் ஆன்மீக நோக்கத்தில் தீவிரமாக இருப்பவர்களுக்கு திருநீறு போதும்!