வெள்ளை நிறம் அமைதி சமாதானத்திற்கான அடையாளமாகவும், தூய்மை-நேர்மைக்கான அடையாளமுமாகப் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் உள்ள ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இதோ சத்குருவின் வாயிலாக இங்கே தெரிந்துகொள்ளலாம்!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெண்மை - நிறம் அற்ற நிலை

வெண்மை அல்லது அத்வாரங் என்பது எட்டாவது நிறம். ஏழு நிறங்கள் உள்ளன. வெண்மை தான் எட்டாவது நிறம். வெண்மை அல்லது அத்வாரங் என்றால், நம்மைக் கடந்திருக்கிற வாழ்க்கையின் பரிமாணம் என்று அர்த்தம். அது அடிப்படையில் ஒரு நிறம் அல்ல, நிறம் அற்ற நிலை வெண்மை. நிறங்கள் இல்லாமையே அதை வெண்மையாக்குகிறது. அதே போல வெண்மையில் எல்லா நிறங்களும் உண்டு. அது எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. நீங்கள் பார்க்கிற ஒளி ஏழு நிறங்களைக் கொண்டது. அந்த நிறங்களை அதற்குரிய முறையிலே பிரித்து விடலாம். எனவே வெண்மை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அவை உங்கள் மீது ஒரு நல்ல பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. உஷ்ணமான நாட்டில் வாழுகிறவர்களுக்கு வெண்மை அணிவதற்கேற்ற ஆடை. இந்த சீதோஷ்ண நிலையில் மிக வசதியான ஆடையும் கூட.

ஒருவர் வெள்ளைநிற உடையை அணிகிறார் என்றால் ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டே, வாழ்வின் பிற தன்மைகளோடும், அவர் இயைந்து இருக்கிறார் என்று பொருள்.

இந்தப் பாரம்பரியத்தில் பொதுவான ஒரு மனிதர் காவி ஆடை அணிகிறார் என்றால், குடும்பம் மற்றும் சமூக சூழ்நிலைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறார் என்பது பொருள். ஆனால் ஒருவர் வெள்ளைநிற உடையை அணிகிறார் என்றால் ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டே, வாழ்வின் பிற தன்மைகளோடும், அவர் இயைந்து இருக்கிறார் என்று பொருள். அது தொடக்க நிலையாகக் கூட இருக்கலாம். இதுதான் இங்கு பாரம்பரியமாக இருந்திருக்கிறது. இதுதான் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒருமுறை. இந்த மனிதர் இந்த வகையைச் சார்ந்தவர், அந்த மனிதர் அந்த வகையைச் சார்ந்தவர் என்று அடையாளம் காண்பதற்கு உதவுகிறது. ஆன்மீகப் பாதையில் இருக்கிற மனிதருக்கு ஆடைகள் மாற்றுவது, பெயர்கள் மாற்றவது, தோற்றத்தை மாற்றுவது எல்லாம் அவருடைய அடையாளங்களை அகற்றுவதற்காக. சந்நியாசம் மேற்கொள்ளுகிறபோது, அது எந்த சம்பிரதாயமாக இருந்தாலும் சரி, முதலில் உங்கள் பெயரை அகற்றி விடுவார்கள். பின்பு உங்கள் தோற்றத்தை மாற்றி, உங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி விடுவார்கள்.

உங்கள் பெயர், உங்கள் ஆடை முறை, உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் கணவர் எல்லாவற்றையும் அகற்றுவார்கள். சந்நியாசம் மேற்கொள்ள வேண்டுமானால் பெற்றோருக்கு நீங்கள் கருமகாரியங்களைச் செய்ய வேண்டும். கருமகாரியங்கள் என்றால் என்னவென்று தெரியுமா? நீங்கள் பெற்றோருக்குச் செய்கிற இறுதிச் சடங்குகள். ஏன் இப்போது பெற்றோருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டுமென்றால், சந்நியாசத்திற்குப் பிறகு அதைச் செய்ய முடியாது. இதன் பொருள் அந்த உறவு முடிந்துவிட்டது என்பதுதான். உங்களுக்கும், மற்றவர்களுக்குமான எல்லா உறவும் முடிந்துவிட்டது. நீங்கள் முழுக்க முழுக்க ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இது தேவை. பழையவற்றைச் சுமந்து கொண்டே புதிதாக இருக்க உங்களால் முடியாது. இந்தப் பழைய சுமைகளையும் பற்றுதல் இல்லாமல் சுமந்து கொண்டு விநாடிக்கு விநாடி, புத்துணர்ச்சியுடன் வாழ இயலவில்லை. பழையவற்றிலிருந்து துண்டித்து முற்றிலும் புதியதாக்க வேண்டும். அதனால்தான் இந்த சடங்குகளை வைத்தார்கள்.

சங்கரன்பிள்ளையின் ஆன்மீக தேடுதல்

தீட்சை தருவதெற்கென்று பலமுறைகள் உண்டு. இந்தியாவில் பலபேர் பல வெவ்வேறான முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் குருவையும், ஆன்மீகப் பாதையையும் தேடிக்கொண்டு போகிறவர்கள் எப்போதுமே சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு ஆன்மீகப் பாதையை கண்டுணர வேண்டுமானால் அதைத் தேடிப் போகாதீர்கள். அதற்காக உண்மையாகவும், விருப்பத்தோடும் இருங்கள். குரு உங்களிடமே வருவார். சங்கரன்பிள்ளை ஒருமுறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப் பாதையில் போக விரும்பினார். நீங்கள் ஆன்மீகப் பாதையில் போகும்போது தலைசிறந்த பாதையைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள். தலைசிறந்த குருதான் உங்களுக்குத் தேவை. உங்கள் மனதில் வருகிற தலைசிறந்த குரு யார்? இந்த நாட்டிலேயே மிகவும் பிரபலமான குரு. மிகவும் புகழ்பெற்ற ஒரு ஆன்மீக முறைதான் சிறந்தது என்று கருதுகிறீர்கள். எனவே, அந்தக் காலத்தில், மிகவும் பிரபலமான ஒரு முறையாக, கோரக்நாத் முறையிருந்தது. எனவே கோரக்நாத் முறையைச் சேர்ந்தவர்களிடம் சென்று சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள். பொதுவாகவே கோரக்நாத் வகையைச் சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் ஒரு பெரிய வளையலையே அணிந்திருப்பார்கள். எனவே சங்கரன்பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையைப் போட்டு வளையலை மாட்டி மொட்டையடித்து, காவிநிற ஆடையை அணிவித்தார்கள். அங்கே ஒரு மாதம் இருந்தார். அவருக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் தேடுதலைத் தொடங்கினார்.

அவர் மிகத் தீவிரமாகத் தேடி கொண்டிருந்தபோது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியைச் சந்தித்தார். தீட்சை கேட்டார். அவர் காவி ஆடையைக் கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத் தந்து அணியச் சொல்லி சுன்னத்தும் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை. ஏனென்றால், அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு. எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள்.

அந்தத் துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார். தலைமுடி மட்டுமல்ல, தாடியும் வளர வேண்டும் என்று சொன்னார். எனவே சங்கரன்பிள்ளை அதை வளர்க்கத் தொடங்கினார். அங்கே ஒரு மாதம் இருந்தார். அவருக்கு மனநிறைவு வரவில்லை. அதையும் விட்டுவிட்டு ‘கன்பத்’ என்கிற ஒரு துறவுமுறைக்கு சென்றார். மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை. கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதிலே ஒரு வளையலை அணிவது போல, கன்பத் இனத்தைச் சேர்ந்தவர்கள் இடது காதிலே அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையைப் போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டிவிட்டார்கள். இப்படியே தொடர்கிறது. உங்களுக்குப் புரியும். இது எங்கே போகும் என்று, இல்லையா? எல்லோரும் உங்கள் உடலில் எங்காவது ஒரு துளையைப் போட்டு விடுவார்கள். ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்தால் அது அவனுக்கு கிடைக்கும். அவர் எதையும் தேடிப் போக வேண்டியதில்லை. அது உங்களைத் தேடிவரும். உங்களில் பலருக்குக் கூட, ஈஷா யோகா, உங்கள் வாழ்வின் ஒரு முக்கிய தருணத்தில்தான் வந்திருக்கும். அப்படித்தானே? ஒரு கொதி நிலையையோ, ஒரு எல்லையையோ அடைகிறபோது இயல்பாக ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்திருப்பீர்கள். அப்படித்தான் அது எப்போதுமே இருக்கிறது. அந்த எல்லையைத் தொட்டிராத மனிதனுக்கு இது இன்னுமொரு வேடிக்கையாகத்தான் வாழ்வில் இருக்கும்.