தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 13

விஜி அவர்களின் மஹாசமாதிக்குப் பிறகு, தியானலிங்க பிரதிஷ்டை எப்படி நிகழ்ந்தது? சத்குருவின் உடல்நிலை என்னவானது? என்னென்ன நோய்களுக்கு அவர் ஆளானார்? பிரதிஷ்டையில் ஒருவேளை உயிர் துறந்தால், செய்ய வேண்டிவையாக சத்குரு செய்து வைத்த ஏற்பாடுகள் என்னென்ன? இத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்கிறது இந்த வாரப் பகுதி!

பட்டுக்கோட்டை பிரபாகர்:

பிராணப் பிரதிஷ்டைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சத்குருவின் உடல் ஆரோக்கியம் ஒரு போராட்டமாகவே இருந்து வந்தது. ஒரு சமயம் பலத்தோடு இருப்பார். ஒரு சமயம் மிகவும் பலவீனமாக இருப்பார். அமெரிக்காவில் சத்குருவின் இரத்தம் சோதனை செய்யப்பட்டபோது அங்கிருந்த மருத்துவருக்கு மருத்துவரீதியாக பல விஷயங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன.

பிரதிஷ்டைக்குப் பிறகு சத்குருவுக்கு இனியும் தம் உடலைத் தேக்கி வைத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இல்லை.

உடல் பரிசோதனை முடிவுகள், சத்குருவின் உடலில் பலவிதமான கொடுமையான நோய்கள் இருப்பதாக அடையாளம் காட்டின. குடல் சிதைவுற்றிருந்தது. இதயம் சிக்கலில் இருந்தது. ரத்தம் மோசமாக இருந்தது. பலவிதமான புற்றுநோய்கள் இருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. திடீரென்று உடலில் கட்டிகள் ஏற்படுவதும், எந்தச் சிகிச்சையுமின்றி அவை தானாகக் காணாமல் போவதும் நடந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரதிஷ்டைக்குப் பிறகு சத்குருவுக்கு இனியும் தம் உடலைத் தேக்கி வைத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. அதுவுமில்லாமல் மூவருக்குப் பதிலாக இருவராகச் செயல்படும்போது எந்த நேரமும் உடலைவிட்டு உயிர் விலக நேரிடும் சாத்தியம் இருப்பதாக சத்குரு உணர்ந்தார்.

ஆகவே முறையாக சத்குரு சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுதான் பிரதிஷ்டைப் பணிகளைத் துவங்கினார். தன் மகளை சட்டப்பூர்வமாக சுவீகாரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஈஷா யோக மையத்தை எப்படிநடத்த வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார். அவரின் உடலுக்கென்று ஒரு சமாதியையும் தயார்படுத்தினார். பிரதிஷ்டைப் பணியில் இருக்கும்போது, உடலை மொத்தமாக விட்டுவிட்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். அப்படியில்லாமல், உடல் செயல் மட்டும் இழந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாகச் சொல்லி வைத்தார். அந்த சமயம் தியானலிங்க வளாகத்திற்கு முன்பாக ஒரு கார் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த தியானலிங்கப் பிரதிஷ்டை பற்றி சத்குருவின் வார்த்தைகளிலேயே எளிமையாக விளக்குவதென்றால்...

‘“இந்த பிரதிஷ்டையில் மந்திரங்களோ, சடங்குகளோ கிடையாது, மனிதர்களை உள்ளடக்கிச் செய்கிற சக்தி நிலையிலான பிரதிஷ்டை இது. சக்திநிலை சூட்சுமம் அடைந்து கொண்டே போனால், ஒரு எல்லைக்குப் பிறகு அதனால் ஒரு வடிவத்துக்குள் இருக்க முடியாது, எனவே சூட்சுமத்தின் உச்ச நிலையில் அந்த சக்தி நிலையை அது எப்போதும் நிரந்தரமாக இருக்கும்படி நிலைநிறுத்த வேண்டும். ஒருவிதத்தில் அந்த உச்சமான சக்திநிலை லிங்கத்துக்குள் பூட்டி வைக்கப்படுகிறது.
1

தியானலிங்கத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்வதென்பது, உச்சமான, மேம்பட்ட, சூட்சுமமான ஒரு சக்தி நிலையை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த சக்தி நிலையை நிலை நிறுத்தி வைக்க அதன் சக்கரங்களைப் பூட்ட வேண்டும்.

சுட்ட மண்ணால் ஆன பத்து பானைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது. அவற்றை உடைத்தால் வெறும் துகள்களாகப் போய்விடும். இப்போது இந்த சுட்ட மண் பானைகளை மீண்டும் களிமண்ணாக ஆக்கினால்.. அதாவது அப்படிச் செய்ய ஒருமுறை இருக்கிறதென்று வைத்துக்கொண்டால்.. அப்போது பத்து பானைகளும் மீண்டும் களிமண்ணாகின்றன. இந்த பத்து களிமண்ணின் மூலப் பொருள்களிலிருந்து சிறிது எடுத்து பதினொன்றாக ஒரு பானை உருவாக்க முடியுமல்லவா? அதைப் போல ஆத்ம சாதனைகள் வழங்கப்பட்ட, சக்தி நிலையில் தயார் செய்யப்பட்டவர்களின் உச்சமான சக்தி நிலையை ஒருங்கிணைத்து ஒரு மேம்பட்ட சக்தி நிலையை உருவாக்குதலே பிரதிஷ்டை."

இந்தப் பிரதிஷ்டைக்குத்தான் எழுபது பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டு, பிறகு அவர்களையும் ஒரு நிலைக்குமேல் ஒருங்கிணைக்க இயலாமல் போய்... பிறகு சத்குரு, பாரதி, விஜி என்று மூன்றே பேர் போதும் என்று தீர்மானமாகி... அதிலும் விஜி அவர்கள் திடீரென்று சமாதி அடைந்ததால், இருவர் மட்டும் பிரதிஷ்டையை மேற்கொள்ள வேண்டி வந்ததால்தான் நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன.

தியானலிங்கத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்வதென்பது, உச்சமான, மேம்பட்ட, சூட்சுமமான ஒரு சக்தி நிலையை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த சக்தி நிலையை நிலை நிறுத்தி வைக்க அதன் சக்கரங்களைப் பூட்ட வேண்டும். அதே மூன்று வித பிராண சக்தியை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல, அதை வைத்து ஏழு சக்கரங்களும் பூட்டப்பட்டன. இவை எல்லாமே சூட்சும நிலையில் நிகழும் காரியங்கள்.

விஜி அவர்களின் இல்லாமையைச் சத்குருவே சமாளிக்க வேண்டியிருந்ததால், மிகவும் சிரமப்பட்டார். எந்த விநாடியும் உடலை சத்குரு துறந்துவிடும் வாய்ப்பு இருந்தது. அதை அவரும் எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சக்தி நிலையின் மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு கீழே விழுந்தார்!


அடுத்தவாரம்...

தியானலிங்க பிரதிஷ்டை செயல்முறையில், மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு உடலை விட்டு வெளியேறினாரா? அப்படியானால், எப்படி மீண்டும் உயிர் பெற்றார்?! விடையறிய காத்திருங்கள், அடுத்தவாரம் வரை!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை