உணவு உண்பதிலுள்ள உண்மையான ஆனந்தம்!
உணவை விரும்பாத மனிதர்கள் இல்லையென்றே சொல்லலாம்! சிலர் உணவுப் பிரியர்களாகவும், சிலர் அளவோடு உண்பவர்களாகவும், இன்னும் சிலர் ருசியான உணவென்றால் உலகையே மறந்துவிடுபவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்! ஆனால், இந்த உணவு எப்படி ஆன்மீக சாத்தியமாகிறது? சத்குரு இங்கே உணவு பற்றி...
உணவை விரும்பாத மனிதர்கள் இல்லையென்றே சொல்லலாம்! சிலர் உணவுப் பிரியர்களாகவும், சிலர் அளவோடு உண்பவர்களாகவும், இன்னும் சிலர் ருசியான உணவென்றால் உலகையே மறந்துவிடுபவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்! ஆனால், இந்த உணவு எப்படி ஆன்மீக சாத்தியமாகிறது? சத்குரு இங்கே உணவு பற்றி...
சத்குரு:
ஒருவர் கண்டிப்பாக சாப்பிடத்தான் வேண்டும், அதே சமயம், தான் உண்ணும் உணவு கொடுக்கும் சுவையை ருசித்து, அது வாழ்க்கைக்குக் கொடுக்கும் அர்த்தத்தை எண்ணி, நன்றியுணர்ச்சியுடன் உண்ண வேண்டும். நாக்கின் ருசிக்காக மட்டுமே சாப்பிட்டால், அது நம்மைத்தான் பாதிக்கப் போகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இதன் மூலம் நாம் உண்பதன் இன்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்கவில்லை. வேறு ஒரு உயிர் உங்கள் உயிரின் ஒரு பகுதியாவதை, உங்கள் உயிரோடு ஒன்றிணைந்து, கலந்து, நீங்களாகவே ஆவதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கும்போதுதான் அதன் உண்மையான ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இதுதான் மனிதன் அறிந்ததிலேயே மிகப் பெரிய இன்பம், ஏனென்றால், அவனில் ஒரு பகுதியாக இல்லாத ஒன்று, அவனுள் ஒரு பகுதியாக ஆவதற்கு விரும்புகிறது. இதைத்தான் நீங்கள் அன்பு என்று சொல்கிறீர்கள். இதைத்தான் மக்கள் பக்தி என்று சொல்கிறார்கள். இதுதான் ஆன்மீக செயல்பாடுகளின் இறுதி லட்சியம்.
காமம், தீவிர விருப்பம், பக்தி அல்லது இறுதியான ஞானம் இவை அனைத்துமே ஒன்றுதான்; அவற்றின் அளவுகள்தான் வேறு. இரு நபர்களிடையே இருந்தால் அது தீவிரமான விருப்பம்; ஒரு பெரிய குழுவினரிடையே இருந்தால் அது அன்பு; பாகுபாடின்றி இருந்தால் அதை கருணை என்று சொல்கிறோம்; உங்களைச் சுற்றி ஒரு வடிவம் இல்லாமல் இருந்தாலும் அது நிகழ்ந்தால், அது பக்தி. உச்சகட்ட நிலையில் நிகழ்ந்தால் அதை ஞானம் என்று சொல்கிறோம்.
உணவும், உண்ணுதலும் பிரபஞ்சத்தின் ஒருமைத்தன்மைக்கான எடுத்துக்காட்டுகள். இந்த அற்புதமான செயல்பாடு உங்கள் மதிய உணவின் போது தினசரி நடைபெறுகிறது. ஒரு செடியாக, ஒரு விதையாக, ஒரு விலங்காக, மீனாக, பறவையாக இருந்தது, கரைந்து போய் ஒரு மனிதனாக மாறுவது, பிரபஞ்சத்தின் ஒருமைத்தன்மையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. படைப்பவனின் கைவண்ணம் அனைத்திலும் இருப்பதை அது பறைசாற்றுகிறது.
Subscribe