தொழில் செய்பவர்களுக்கு யோகா எப்படி உதவும்?
யோகாவின் மூலமும், தியானத்தின் மூலமும் தொழிற்துறையினர் எப்படி பலன் பெறுவது?
சத்குரு:
Subscribe
எப்படிப்பட்டவர்களும் தியானத்தின் மூலம் பலன் பெற முடியும். அவர்கள் தொழில்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் பலன் பெற முடியும். ஏனென்றால் நான் தொழில்துறையினரை ஒரு தனி உலகமாகக் கருதவில்லை. தொழில்துறையினர் என்று நீங்கள் கூறுவது ஏனென்றால் அவர்கள் மிகவும் உச்சபட்ச செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே உச்சபட்ச செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும்போது வாழ்க்கை அதற்கானதை உங்களிடமிருந்து வசூலித்துக் கொள்கிறது. எனவே உடல்நிலையிலும், மனநிலையிலும் தேவையான புத்துணர்வு நிகழாவிட்டால் நீங்கள் அதற்கான பாதிப்பை அனுபவித்தே தீருவீர்கள். ஏற்கனவே நீங்கள் அதைப் பார்த்தும் இருக்கிறீர்கள்.
மக்கள் உடல் ரீதியாக, மனரீதியாக உடைந்து போயிருக்கிறார்கள். ஏனென்றால் உடலியக்க அமைப்பை புத்துணர்வூட்ட எதுவும் செய்யப்படவில்லை. யோகா என்பது அதை செய்வதற்கு மிகவும் உகந்த அறிவியல் ரீதியான வழிமுறையாகும். நாம் யோகா என்று சொல்லும் போது ஒரு குறிப்பிட்ட பயிற்சியைப் பயிற்றுவிப்பதைப் பற்றிப் பேசவில்லை. நாம் யோகாவை எப்படிப் பயிற்றுவிக்கிறோம் என்றால் சுய ஏமாற்றமளிக்கும் ஒரு செயல்முறையாக இல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் வளப்படுத்தும் ஒரு வழிமுறையாகத்தான் யோகாவை பயிற்றுவிக்கிறோம்.
சத்குரு:
செய்யும் தொழிலுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், அடிப்படையாக உங்கள் வாழ்வில் ஒருவிதமான சமநிலையை நீங்கள் தேடுகிறீர்கள். உங்களுடைய தொழிலையும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நீங்கள் உருவாக்கியது உங்களுடைய நலவாழ்விற்காகத் தான். எனவே அடிப்படையாக அது நிகழவேண்டும் இல்லையா? உங்களுடைய நலவாழ்வு என்பது என்ன? உடல்நிலையில் ஆரோக்கியம், மனரீதியில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பது, உணர்ச்சி ரீதியாக அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பது, சக்தி ரீதியாக தீவிரமாகவும் உயிர்ப்போடும் இருப்பது. இதுதான் நலவாழ்வு என்பது. இது இயல்பாகவே நடக்கும்.
யோக அறிவியல் முழுமையும், யோகாவின் தொழில் நுட்பம் முழுமையும், யோகாவின் வழிமுறைகள் அனைத்தும் இதை நோக்கியே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் உடலும், மனமும், உணர்ச்சிகளும், சக்திகளும் அதன் சிறந்த தன்மையில் செயல்படும் விதமாக உங்களுக்குள் ஒரு சரியான வேதியியலை உருவாக்குவது தான் அதன் நோக்கம். அப்படி இருக்கும் போது நலவாழ்வு என்பது நிச்சயமாக நிகழும். உள்நிலையில் நீங்கள் நலமாக இருக்கும் போது, வெளிச்சூழ்நிலையை உங்கள் திறமைக்கு ஏற்றவிதத்தில் சிறப்பாகக் கையாள்வீர்கள்.