வாழ்க்கை, ஆன்மீகம், காதல், கலாச்சாரம் என்று எதைப்பற்றி கேட்டாலும் சத்குருவிடம் பதில் உண்டு. திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே...

Question: இன்று சினிமாக்கள், திருமணம் செய்யாமல் வாழலாம் என்று சொல்லத் துவங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில், திருமணம் செய்துகொண்டு வாழ்வது எவ்வளவு முக்கியம்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உணர்வுநிலையில், மனநிலையில் மக்கள் போதுமான அளவிற்கு முதிர்ச்சி அடைந்திருந்தால், அவர்கள் இன்னொருவர் தோள்மீது சாய்வதற்கான அவசியம் இருக்காது. 30 சதவிகித மக்களாவது இந்த நிலையில் இருப்பார்கள். 100 ஆண்டுகளுக்கு முன், பெண்களை பாதுகாக்கும் ஒரு விஷயமாக திருமணம் பார்க்கப்பட்டது. திருமணத்தின் மற்றொரு முகம் பாதுகாப்பான சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் கூடினால், கருத்தரித்தல் உடனடியாக நடந்தது, இன்றைக்கோ கருத்தடை சாதனங்கள் வந்துவிட்டன. திருமணம் தேவையா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளை நீங்கள் 5 வயது குழந்தையாய் இருக்கும்போது கேட்டிருக்க மாட்டீர்கள். உங்கள் பெற்றோர் உறுதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது உங்களுக்கு அவசியமானதாய் இருந்தது, இல்லையா?

நீங்கள் 5 வயது குழந்தையாய் இருந்தபோது திருமணம் தேவைப்பட்டது. 3 வயது குழந்தையாய் இருந்தபோதும் திருமணம் தேவைப்பட்டது. ஒரு குழந்தை திடமான ஒரு வாழ்க்கை சூழலில் வளர, திருமண அமைப்பு தேவைப்படுகிறது. பல சூழ்நிலைகளில் பலர், இந்த திருமண அமைப்பை உடைக்க முயன்றிருக்கின்றனர். அதனால் கடுமையான பாதிப்பையும் உருவாக்கி இருக்கின்றனர். திருமணத்திற்கான மாற்று அமைப்பையாவது நாம் உருவாக்கி இருக்கிறோமா? இல்லை. மனிதர்கள், இது-அது என்று பகுத்து பார்க்கும் நிலையில் இல்லாமல், அனைத்தையும் ஒரேவிதமாய் பார்க்கும் விழிப்புணர்வு நிலைக்கு உயர்ந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி இருப்பதுபோல் பாசாங்கு மட்டும் செய்கிறார்கள். இறுதியில் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

அதனால், திருமணம் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தனிப்பட்ட மனிதருடைய கேள்வி, இது சமூகத்திற்கு பொதுவான கேள்வி அல்ல. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதரும் “எனக்கு திருமணம் தேவையா?” என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லோரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காக நீங்களும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவையிருந்து, திருமணம் செய்து கொண்டால், அதில் நிலைத்திருக்க வேண்டும். பிழை செய்துவிட்டு, தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.

Question: ஈஷா யோக மையத்தில் பெண்கள் குளிக்கும் சந்திரகுண்டம், ஆண்கள் குளிக்கும் சூரிய குண்டத்தைவிட குளுமையாக இருப்பது எதனால்?

சத்குரு:

இதற்கு பல பரிமாணங்கள் உள்ளன. சில விஷயங்கள் முழுக்க முழுக்க இயற்பியல் சார்ந்தவை. அதனை நீங்களே அறிந்து கொள்ளலாம். ஆனால், இதற்கு மற்றொரு பரிமாணம் உள்ளது. சந்திரகுண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விதத்தினால், அங்குள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். அது அமைக்கப்பட்டிருக்கும் ஆழம், செம்பில் அமைக்கப்பட்டிருக்கும் தொட்டி போன்ற சில காரணங்களால் இயற்கையாய் தண்ணீர் எவ்வளவு குளிர்ச்சி அடையுமோ அதையும் தாண்டி, நாம் பிரதிஷ்டை செய்துள்ள விதத்தினால் 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் குறையும்.

சூரியகுண்டம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விதத்தின்படி, இயல்பாய் உள்ள வெப்பத்தைவிட 1.5 டிகிரி கூடுதல் வெப்பம் இருக்கும். அதாவது, நீரின் வெப்பம் இப்படியிருக்க வேண்டும் என சில காரணிகள் நிர்ணயிக்கின்றன, அதைவிட 1.5 டிகிரி அதிகமாய் சூரியகுண்டத்தில் வெப்பம் இருக்கும். அதனால், கட்டிட அமைப்பு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விதம், இவற்றால் சந்திரகுண்டத்தில் 2 டிகிரி குறைந்து, சூரியகுண்டத்தில் 1.5 டிகிரியாவது உயர்வதால், சூரியகுண்டத்திற்கும் சந்திரகுண்டத்திற்கும் வெப்பநிலையில் 4 டிகிரி சென்டிகிரேட் வித்தியாசம் எந்த காலகட்டத்திலும் இருக்கும்.