தற்போது மேலோங்கி இருப்பது ஆத்திகமா? நாத்திகமா?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை தற்போதும்கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது! ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றிய ஒருவரின் கேள்விக்கு சத்குருவின் பதில் நமக்கு தெளிவைத் தருகிறது!
கேள்வி:
பெரியார் காலத்தில் ஆத்திகம், நாத்திகம் இரண்டுக்கும் பலத்த போட்டிகள், சர்ச்சைகள் எல்லாம் நடந்தன. ஆனாலும் ஆத்திகம்தானே மேலோங்கியுள்ளதுபோல் தெரிகிறது? ஏன்?
சத்குரு:
Subscribe
என்னைப் பொறுத்தவரை நாத்திகம்தான் இன்றைக்கு மேலோங்கி இருக்கிறது. மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அவன் மனதில் பயம் தோன்றாது, அச்சம் தோன்றாது, வெறுப்பு தோன்றாது. இவர்களுக்கு வெறுமனே கடவுள் பற்றி பேசத் தெரிகிறதே தவிர மனதில் நாத்திகம்தான் இருக்கிறது.
இவர்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. ஆதிக்கம் செய்யவும் ஆசைப்பட்டதை அடையவும்தான் நினைக்கிறார்கள். இவர்களின் ஆசைக்கு கடவுளும் ஒரு கருவி, அவ்வளவுதான்.
நமக்குத் தேவை ஆத்திகமும் இல்லை, நாத்திகமும் இல்லை, உண்மையான மனிதர்கள் மட்டும்தான். தங்களுக்குத் தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஒப்புக்கொள்கிற மனிதர்கள்தான் நமக்கு வேண்டும்.
ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மனிதர்களின் அபிப்பிராயங்கள் மட்டும்தான். கடவுள் உண்டா, இல்லையா என்று இரு தரப்பினருக்கும் தெரியாது. ஒருவர் இருப்பதாக நம்புகிறார். இன்னொருவர் இல்லை என்று நம்புகிறார். இரண்டுமே அறியாமையில் ஏற்படுபவைதான்.
இந்த இரண்டு நிலைகளையும் கடந்து இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கு எப்போதும் ஏக்கமும், விருப்பமும் ஏற்படுகிறதோ அப்போதுதான் வாழ்க்கையில் அடுத்தபடி நிலையை நோக்கிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே ஆத்திகம்-நாத்திகம் ஆகிய சண்டைகளை விட்டுவிட்டு எளிய மனிதர்களாக, விழிப்புணர்வுள்ள மனிதர்களாக வாழ்வதே முக்கியம்.