தனிமையை எப்படி வெற்றிகொள்வது?
எவ்வளவு மக்கள் சூழ்ந்திருந்தாலும், தனிமையாக உணர்வது குறித்த ஒரு மாணவரின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
கேள்வி: நமஸ்காரம் சத்குரு. எங்களைச் சுற்றிலும் இத்தனை பேர் இருந்தாலும், நாம் யாரோ ஒருவருக்கு உரியவர்கள், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேசிக்கப்படுபவர்கள் என்ற அந்த உணர்வு இல்லை. அந்தத் தனிமையான, நிறைவற்ற தன்மையை எப்படி எதிர்கொள்வது?
சத்குரு:
உங்கள் வாழ்வில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது? விடுதலையா அல்லது பிணைப்பா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் சுதந்திரமாக இருப்பதையே சுமையாக உணர்வதுதான் பிரச்சனையாக இருக்கிறது. உதாரணமாக, உங்களைச் சுற்றி ஒருவரும் இல்லாமல் மலைகளின் வெற்றுவெளியில் நீங்கள் இருந்தால், சுதந்திரமாக இருப்பதாக உணரமாட்டீர்கள் – நீங்கள் அதையே சுமையாக நினைத்துக்கொள்வீர்கள்.
Subscribe
‘நான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு இரசாயன ரசம். நீங்கள் ஒரு சுவையான ரசமா அல்லது மோசமான ரசமா என்பதே இப்போது கேள்வி(?)!
பெரும்பாலான மக்களால் சுதந்திரத்தைக் கையாள முடிவதில்லை ஏனென்றால் சுதந்திரத்தைக் கையாள்வதற்கு, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தெளிவும், வலிமையும் தேவைப்படுகிறது. மக்கள் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கே எப்போதும் முயற்சிக்கின்றனர், ஆனால் எல்லா நேரமும் அவர்கள் விடுதலையைப் பற்றிப் பேசுகின்றனர். உண்மையிலேயே அவர்களை நீங்கள் விடுவித்தால், அவர்கள் அளவற்ற துன்பம் கொள்வார்கள். இது ஒரு பரிணாம வளர்ச்சி பிரச்சனை, அதாவது, தற்போது மனிதர்கள் ஒரு கூண்டிலடைபட்ட பறவை போன்றவர்கள். ஒரு பறவையை நீங்கள் நீண்ட காலத்திற்குக் கூண்டில் வைத்திருந்து, பிறகு ஒரு நாள் கூண்டின் கதவைத் திறந்துவிட்டால், பறவையானது அப்போதும் பறந்து செல்லாது. கூண்டிற்குள் இருந்துகொண்டேதான் சுதந்திரமாக இல்லை என்பதை அது எதிர்த்துக்கொண்டிருக்கும், ஆனால் வெளியில் பறந்து செல்லாது. மனிதர் நிலையும் அதைப்போன்றதுதான்.
நீங்கள் விடுதலை அடையவேண்டுமென்றால் என்ன நிகழத் தேவைப்படுகிறது என்று நாம் பார்க்கலாம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். எல்லா மனித உணர்வுகளும் அதற்கான ஒரு இரசாயன அடிப்படையைக் கொண்டிருக்கிறது. ஆனந்தம், துயரம், அழுத்தம், பரபரப்பு, கோபம் மற்றும் பரவசம் என்று நீங்கள் கூறுவதெல்லாம் உடலில் நடக்கும் வெவ்வேறு விதமான இரசாயன மாற்றங்கள். இதில் குறைந்தபட்சம், பரவசம் என்பது வேறு ஒருவிதமான இரசாயனம் என்பதாவது உங்களுக்கு தெரிந்திருக்கிறதுதானே. உங்கள் வாழ்வின் அனுபவம் அதற்கென ஒரு இரசாயன அடிப்படையைக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், ‘நான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ஒரு இரசாயன ரசம். நீங்கள் ஒரு சுவையான ரசமா அல்லது மோசமான ரசமா என்பதே இப்போது கேள்வி(?)!
உங்களுக்கு வெளியில் இருக்கும் எதனாலும் உங்களது தன்மை முடிவு செய்யப்படவில்லை என்ற நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், தனிமை என்ற ஒரு விஷயமே இல்லாமல் போகிறது.
இப்போது உங்களுக்குள் பரவசத்தின் இரசாயனம் இருக்குமேயானால், யார் உங்களுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது அற்புதமாக இருக்கும் ஏனென்றால் இனிமேலும் உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதைப் பொறுத்து உங்களுடைய வாழ்வின் அனுபவம் முடிவு செய்யப்படுவதில்லை. உங்களுக்கு வெளியில் இருக்கும் எதனாலும் உங்களது தன்மை முடிவு செய்யப்படவில்லை என்ற நிலையை நீங்கள் அடைந்துவிட்டால், தனிமை என்ற ஒரு விஷயமே இல்லாமல் போகிறது.
உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதானே முக்கியமான விஷயம். உங்களது தேவைகளால் மட்டுமே நீங்கள் உந்தப்பட்டு வாழ்ந்தால், மிகவும் அற்பமான ஒரு வாழ்வை வாழ்வீர்கள். ஆனால் உங்களுக்கென எந்தத் தேவையும் இல்லாதபோதும், சூழ்நிலைக்கு தேவையான எதையும் உங்களால் இங்கே செய்யமுடியும் என்றால், நீங்கள் ஒரு மகத்தான வாழ்வை வாழ்வீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் அற்புதமான ஒரு வாழ்வு அமையவேண்டும் என்பது எனது விருப்பமும், ஆசியுமாக இருக்கிறது. அதனை உங்களுக்கு நிகழச் செய்யுங்கள்.
ஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.