புறக்கடை மூலிகைக்கு வீரியம் கிடையாது!
"கல்லிலும், முள்ளிலும் ஏறிப் பறித்து வந்தால்தான் மூலிகைக்கு மதிப்பா? உங்கள் வீட்டுக் கொல்லையில் அதே மூலிகை மண்டிக் கிடந்தால் அலட்சியமா?" என்று கூறும் சத்குரு, இந்த பழமொழியின் உண்மையைப் பற்றி விளக்குகிறார்.
"கல்லிலும், முள்ளிலும் ஏறிப் பறித்து வந்தால்தான் மூலிகைக்கு மதிப்பா? உங்கள் வீட்டுக் கொல்லையில் அதே மூலிகை மண்டிக் கிடந்தால் அலட்சியமா?" என்று கூறும் சத்குரு, இந்த பழமொழியின் உண்மையைப் பற்றி விளக்குகிறார்.
சத்குரு:
பெரும்பாலான மனிதர்களிடம் சுற்றி உள்ளதைப் பற்றிய நேர்மையான மதிப்பீடு இல்லை. போராடிப் பெற்றால்தான் ஒன்றின் மதிப்பை சற்றாவது உணர்கிறார்கள். தங்களுக்குச் சுலபமாகக் கிடைப்பதன் மதிப்பை உணர அவர்கள் தவறுகிறார்கள்.
Subscribe
தங்கள் வீட்டிலோ, தெருவிலோ இருப்பவர்களை உலகமே மதித்தாலும், தான் மதிக்க மறுப்பது ஒருவித அகங்காரம்.
உங்களுடைய பால்ய நண்பன் இப்போது பெரிய ஆளாக உருவெடுத்திருக்கட்டுமே? உலகமே அவனைப் போற்றிப் புகழட்டுமே? உங்களிடம் ஓர் அலட்சியம் இருக்கும்.
'அவனா? அவன், மூக்கு ஒழுகிக் கொண்டு அரை டிராயருடன் திரிவானே? எத்தனை தடவை நான் கொடுக்கும் வேர்க்கடலைக்காக என் காலடியில் கிடந்தான் தெரியுமா?' என்று பெருமை பீற்றிக் கொள்ளாமல் இருந்திருக்கிறீர்களா?
ஒருவன் நேற்று என்ன செய்தான் என்பதை நினைவில் சுமந்து கொண்டு, அவனுடைய இன்றைய நிலையை எடைபோடுவது அபத்தமான செயல். இது பலரிடம் காணப்படும் குறைபாடு.
அடுத்தவரின் வளர்ச்சியை மனதார ஏற்றுக்கொள்ளத் தெரியாதவர்கள் உண்மையில், வாழ்க்கையைத் தெளிவாகப் பார்க்கும் திறனை இழந்தவர்கள்.
கல்லிலும், முள்ளிலும் ஏறிப் பறித்து வந்தால்தான் மூலிகைக்கு மதிப்பா? உங்கள் வீட்டுக் கொல்லையில் அதே மூலிகை மண்டிக் கிடந்தால் அலட்சியமா?
நேற்று என்பது இறந்த காலம். இக்கணம் என்பதே உயிருள்ள காலம் என்று தெளிவடையுங்கள். ஒரு மரமானாலும், மனிதனானாலும் பழையவற்றின் அடிப்படையில் அணுகுவதை நிறுத்துங்கள்.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெறாத இந்நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்!