பற்றுகொள்ளாமல் இருப்பது சாத்தியமா?
‘எதன்மீதும் பற்று வைக்காமல் இருப்பதெல்லாம் சும்மா... அது நமக்கு சாத்தியமே இல்லை!’ எனச் சொல்பவர்கள்தான் நமது வீடு முதல் நாடெங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் பற்றுகளால் ஏன் முழுமையான ஆனந்தம் கிட்டுவதில்லை? தவறு எங்கே நிகழ்கிறது... சத்குருவின் இந்த பதில் விடை தருகிறது!
சத்குரு:
யாரையோ அல்லது எதையோ ஏன் நீங்கள் உடைமைகொள்ள விரும்புகிறீர்கள்? ஏனென்றால், உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய ஒரு பகுதியாக, யாரையோ அல்லது எதையோ நீங்கள் இணைத்துக்கொள்வதற்கான ஒரு வழியாக அது இருக்கிறது. யோகா என்றால் அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் நிலையை அடைவது. உங்களது உடைமைத் தன்மையும் கூட யோகாதான். ஆனால் அது மிகவும் முட்டாள்தனமான, வலி நிரம்பிய ஒரு யோகா. மேலும், அது எப்போதும் முடிவில்லாததாகவும், ஏமாற்றம் தருவதாகவும் இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் நீங்கள் நினைக்கும் எல்லாவற்றையும் நீங்கள் ஒருக்காலும் உடைமை கொள்ளப் போவதில்லை. உங்களால் உடைமைப்படுத்த முடியாதவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆக அதன் இலக்கு ஒருபோதும் நிறைவேறாது. ஆகவே உடைமை கொள்வதற்கான அவசியமில்லாமலே, எல்லாவற்றையும் உங்களில் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
Subscribe
துரதிருஷ்டவசமாக 95 சதவீத மக்கள் உளவியல்ரீதியாக நோயுற்றிருக்கின்றனர். அவர்கள் உடுத்தியிருப்பது போன்ற ஆடைகளை வேறு ஒருவரும் அணிந்திருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்களால் அந்த ஆடையை அனுபவிக்க முடிகிறது. அனைவருமே அதை அணிந்திருக்கின்றனர் என்றால், அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. அவர்கள் ஒரு வீடு கட்டினால், வேறு எவரும் அந்த விதமான வீடு வைத்திருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்களால் அதை அனுபவிக்க முடியும். எந்த ஒரு விஷயத்திலும் எல்லாவற்றிலும் இதுதான் நிகழ்கிறது. இது மகிழ்ச்சியல்ல, இது நோய்தான்.
இப்போது நான் “உடைமைத்தனம் வேண்டாம்” என்று உங்களிடம் கூறினால், எந்தவிதத்திலும் நீங்கள் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது மிக ஆழமாக வேரூன்றிவிட்ட ஒரு பிரச்சனை. யாரோ ஒருவருடைய அறிவுரையினால் இது விலகப் போவதில்லை. வேண்டுமானால் உங்கள் உடைமை விருப்பம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறக்கூடும். ஆனால் உடைமையாக்கிக்கொள்ளும் ஏக்கம் அல்லது தேவை மறைவதில்லை. எப்படியாவது நிறைவுபெற வேண்டும் என்பதுதான் உங்கள் எல்லா முயற்சிக்கும் காரணம். ஏனெனில், உங்களது முழுமையற்ற தன்மையை உங்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் முயற்சியுங்கள், அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது.
நீங்கள் அதில் தெளிவுபெற்றுவிட்டால், நிச்சயமாக பாதை மாறுவீர்கள். உங்களது புத்திசாலித்தனம் மலர்ச்சி பெறும். நம்பிக்கை கொள்ளக் கூடிய ஒரே விஷயம் புத்திசாலித்தனம் மட்டுமே. ஏனெனில் உயிர் என்பது புத்திசாலித்தனம்தான். ஒரு மரம் பூக்கிறது, அது ஒருவிதமான புத்திசாலித்தனம். நீங்கள் கால் பதிக்கும் பூமியே புத்திசாலிதான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும் புத்திசாலிதான். உயிர் என்பதே ஒரு வகையில் ஒரு வெடித்தெழும் புத்திசாலித்தனம்தான். நீங்கள் எதைப் படைத்தல் என்று அழைக்கிறீர்களோ அதுவும், படைத்தவன் என்று நீங்கள் குறிப்பிடுவதும் உச்சபட்ச புத்திசாலித்தனம்தான். நீங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரே விஷயம் அதுதான். ஆனால் நீங்கள் முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே அந்த புத்திசாலித்தனம் இயங்கும்.
படைப்பின் ஒரு உயிர்த்துளியாக, நீங்கள் முழுமையான உயிர்ப்புடன் இருக்கும்போது மட்டுமே உச்சபட்ச நிலை நிகழும். நீங்கள் அதை அடையும்போதுதான் எல்லாம் இன்பமயம் என்பதைக் காண்பீர்கள். அதன்பிறகு எப்போதும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு கால்பந்து விளையாட்டு போல ஆட முடியும். அந்த நிலையில், விரும்பும்போது விளையாடவோ, விரும்பும்போது நிறுத்தவோ முடியும். அப்போது எதுவும் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.