கேள்வியாளர்: சத்குரு, பஞ்சபூதங்களை வணங்கும் தன்மையில் நாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதன் பொருள் என்ன? நமக்குள் இந்த வணங்கும் தன்மையை எப்படி கொண்டு வருவது?

சத்குரு:

இந்த ஐந்து மூலக்கூறுகளின் தன்மையை மாற்றவும் அல்லது நமக்குள் இந்த மூலக்கூறுகள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை நிர்ணயம் செய்யவும் மனிதனால் முடியும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், அது, மனித மனதிற்கும், விழிப்புணர்விற்கும் உட்பட்ட ஒன்றுதான். இது குறித்த விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதன் முழுமையான ஆழத்திற்குக் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தக் கலாச்சாரத்தில் பல தலைமுறைகளாகப் பரிமாறப்பட்டு வந்தது. ஆனால், சென்ற நூறு ஆண்டுகளில், வாழ்க்கை குறித்த மனோபாவம் வெகுவாக மாறிவிட்டதால், நாம் அனேக விஷயங்களையும் இழந்துவிட்டோம். இந்த தேசத்தில் ஏற்கனவே நம்மிடம் உள்ள அறிவுப் பெட்டகத்திடம் நாம் தஞ்சமடைந்தால், அது நமது தேசத்தின் நல்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், உலகத்தினரின் ஒட்டுமொத்த நலனுக்கும் மகத்தான வழிகாட்டுதலாக இருக்கக்கூடும். மேலைநாட்டிலிருந்து வருகின்ற வாழ்க்கை வழிமுறைகள் எல்லாமே பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டும்தான் பயன்படுகின்றன. எல்லாமே - மனிதர்கள் உட்பட - ‘பயன்படுத்தித் தூக்கியெறி’ (Use and Throw ) என்பதாகத்தான் உள்ளன. அரசியல் காரணங்கள் மற்றும் பலவிதமான ஆதிக்க சக்திகள் காரணமாக, மேற்கிலிருந்து வருவதெல்லாம் அறிவியல், கிழக்கிலிருந்து வந்தால் அது மூடநம்பிக்கை என்பதைப் போன்ற ஒரு முடிவிற்கு வந்துள்ளோம்.

உங்கள் பாட்டிமார்கள் ஒரு காலத்தில் உங்களிடம் கூறிய பல விஷயங்களும், இன்றைக்கு முன்னணி விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களில் நிரூபிக்கப்பட்டு, மனித இயல்பைக் குறித்த “மாபெரும்” கண்டுபிடிப்புகளாக பறைசாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான டாலர் செலவில் ஆராய்ச்சிகள் செய்து அவர்கள் கூறும் ஒவ்வொன்றையும், ஏற்கெனவே நமது கலாச்சாரத்தில் நாம் கூறியிருக்கிறோம். ஏனென்றால் இது வாழ்வின் நிர்ப்பந்தங்களிலிருந்து வளர்ச்சியடைந்த கலாச்சாரம் அல்ல. எப்படி உட்காரவேண்டும், எப்படி நிற்கவேண்டும், எப்படி சாப்பிடவேண்டும் என்று விழிப்புணர்வுடன் பார்த்த ஞானிகள் மற்றும் ரிஷிகளால் வளர்ச்சி பெற்ற ஒரு கலாச்சாரம் இது. மனிதகுல நல்வாழ்விற்கு எது சிறந்ததோ அந்தவிதமாக வடிவமைக்கப்பட்டது. அவை அறிவியல் பூர்வமான முறைகளாகவே உள்ளன.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக, நீர் மற்றும் நீராதாரம் உள்ள இடங்கள் குறித்து முனைப்புடன் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே தேவையான குடிநீர் கிடைப்பது குறைந்துகொண்டே செல்வதால் இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளது. உதாரணமாக, இந்தியாவில் 1947ல், ஒரு நபருக்குக் கிடைத்த குடிநீரில் இருபது சதவிகித அளவு நீர்தான் இப்போதைய மனிதருக்குக் கிடைக்கிறது. 2025ம் ஆண்டுவாக்கில், இது மேலும் குறைந்து, ஒரு நபருக்கு ஏழு சதவிகித நீர்தான் கிடைக்கும் என்று கூறுகின்றனர். இதனால் நீர் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள் பல முனைகளிலும் நடக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், இந்த பூமியில் நாம் வாழும் விதத்தையே மாற்றிவிடக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீருக்கு ஞாபகசக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தன்னுடன் தொடர்பு கொள்வது எதுவாக இருந்தாலும் நீர் அதை நினைவில் வைத்துக்கொள்கிறது. இன்றைய நீர் வினியோக அமைப்பில், மிகுந்த ஆற்றல் வாய்ந்த இயந்திரங்கள் மூலம் நீரானது குழாய்களில் ஏற்றப்பட்டு, ஐம்பது வளைவு, நெளிவுகளுக்குப் பிறகே உங்களது வீட்டுக் குழாயை அடைகிறது. இதனால், உங்கள் வீட்டை அடைவதற்குள் அறுபது சதவிகித நீர், விஷத்தன்மை கொள்கிறது என அவர்கள் கூறுகின்றனர். இரசாயன மாற்றங்களால் அல்ல, அத்தனை வளைவுகளுக்கு உட்படுத்தப்பட்டு அதனால் நீர் மூலக்கூறின் கட்டமைப்பு மாறிவிடுவதே இதற்கான காரணம் என்கின்றனர். நுண்கிருமி காரணமாக நீர் மாசுபடுவது நீங்கள் வழக்கமாக அறிந்திருப்பீர்கள். அதற்கு மாறாக, குழாய்களில் பயணிக்கும் வேகத்தின் காரணத்தினால், நீரின் மூலக்கூறு மாறிவிடுகிறது. இதனால், அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லாமல் போவதுடன், விஷத்தன்மையுடையதாகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த மாசுபட்ட நீரை ஒரு தாமிரப் பாத்திரத்தில் சேமித்து, பத்து அல்லது பன்னிரண்டு மணி நேரங்களுக்கு வைத்திருந்தால், நீருக்கு ஏற்பட்ட பாதிப்பு தானாகவே நீங்கிவிடும். இந்த நீரை குழாயிலிருந்து நேரடியாகப் பருகினால், ஒரு குறிப்பிட்ட அளவு விஷம் உங்களுக்குள் செல்கிறது. மக்கள் இத்தகைய அறியாமையில் வாழ்ந்துவிட்டு, பிறகு “எனக்கு ஏன் புற்றுநோய் ஏற்பட்டது? எனக்கு எப்படி இது நடந்தது?” என்று திகைத்து நிற்கின்றனர். வாழ்க்கை குறித்த எந்த அறிதலும் இல்லாமல், உங்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் குறித்த எந்தக் கவனமும் செலுத்தாமல் வாழ்கிறீர்கள். ஆனால் எல்லாம் சுமூகமாக நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?

நீரின் இரசாயனக் கட்ட¬மைப்பை மாற்றாமல், அதன் மூலக்கூறு கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யமுடியும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அப்படி செய்வதால் நீரின் தன்மையையே முற்றிலும் வேறுவிதமாக மாற்றிவிட முடியும். உதாரணமாக, நான் ஒரு குவளை நீரை என் கைகளில் எடுத்து, அதை ஒரு குறிப்பிட்டவிதமாகப் பார்த்து, பிறகு உங்களுக்குக் கொடுத்தால், அதனால் நீங்கள் நலம் அடைவீர்கள். அதையே நான் வேறுவிதமாகப் பார்த்து உங்களுக்குக் கொடுத்தால், நீங்கள் ஒரே இரவில் உடல் நலம் குன்றிவிடுவீர்கள்.

உங்கள் பாட்டி உங்களிடம் கூறியிருப்பார்கள், “நீங்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் நீரைவாங்கிப் பருகுவதும், உணவு வாங்கிச் சாப்பிடுவதும் கூடாது. உங்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்களிடமிருந்தே எப்போதும் இவற்றைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.” உங்கள் பாட்டி இப்படிக் கூறியபோது, அது உங்களுக்கு மூட நம்பிக்கையாகத் தோன்றியது. இதே விஷயத்தை அமெரிக்காவிலிருக்கும் விஞ்ஞானிகள் கூறினால், அப்போது அது உங்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கும். இது ஒருவிதமான அடிமைத்தனம்.

நீர் ஞாபகசக்தி கொண்டது என்பதை இந்தக் கலாச்சாரத்தில் எப்போதும் அறிந்தே வந்திருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் நீர், தீர்த்தம் என்று கூறப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்கு அனைவரும் போட்டியிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கோடீஸ்வரராகவே இருந்தாலும், அந்த ஒரு சொட்டு நீர் கிடைக்க நீங்கள் பிரயத்தனப்படுவீர்கள். ஏனெனில் அந்த நீர் தெய்வீகத்தின் நினைவை சுமந்து வருகிறது.

தமிழ்நாட்டின் எந்த ஒரு பாரம்பரியமான வீட்டிற்கு நீங்கள் சென்றாலும், தண்ணீரை பித்தளை அல்லது செம்புப் பாத்திரத்தில் வைத்திருப்பதைக் காணமுடியும். ஒருகாலத்தில் பாரத தேசம் முழுவதிலும் இந்தப் பாரம்பரியம் இருந்தது. ஆனால் மற்ற இடங்களில் இந்த வழக்கம் பெருமளவு மறைந்துவிட்டது. ஒவ்வொரு நாளும், அந்தப் பாத்திரத்தை புளியினால் தேய்த்து பளபளப்பாக்கி, அதன் மீது விபூதி, குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள். அதன் பிறகே அதில் நீர் நிரப்பப்படுகிறது. அதிலுள்ள நீர் இந்த செயல்முறைகளின் ஞாபகத்தைக் கொண்டிருப்பதால், அந்த சக்தியூட்டப்பட்ட நீரைமட்டும்தான் அவர்கள் பருகுவார்கள்.

சில வருடங்களுக்கு முன், ஒரு தியான அன்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பாரம்பரிய விருந்தோம்பலின் படி, அவரது மனைவி எனக்கு ஒரு குவளையில் தண்ணீர் தந்தார். நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் காளி போன்ற உணர்வில் இருந்தார். பார்த்ததுமே அவர் ஏதோ கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். ஏனெனில், அவரது கணவர் ஆசிரமத்தில் நடக்கவிருந்த 90 நாள் முழுமை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார். அந்த மனைவி நல்லவர்தான். ஆனால் அன்றைக்கு மட்டும் காளி போல இருந்தார். ஆகவே அவர் நீர்க்குவளையை என்னிடம் கொடுத்தபோது நான் கூறினேன், “அம்மா, நீங்கள் இன்றைக்கு மிகவும் கோபமாக இருக்கிறீர்கள். இந்த நீர் எனக்கு இப்போது தேவையில்லை, அதைக் குடிக்க வேண்டிய மோசமான நிலையில் நான் இல்லை.”

அதற்கும் அவர்கள் சற்று விறைப்பாகவே, “அது நல்ல தண்ணீர்தான்” என்றார்கள்.

நானும், ‘அது நல்லதண்ணீர்தான், ஆனால் நீங்கள் இருக்கும் நிலையில், நான் அந்த நீரைப் பருகத் தேவையில்லை” என்றேன்.

வீட்டிற்கு வருகை தந்திருக்கும் சத்குரு நீர் பருகக்கூட மறுத்துவிட்டார் என்பதை அப்பகுதியில் யாரும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அந்த அம்மாவிடம் நான், “அந்த நீரை நீங்கள் எடுத்துப் பருகுங்கள்” என்றேன்.

நான் ஏதோ தண்ணீரின் சுவையைக் குறை கூறுகிறேன் என்று நினைத்த அவர்கள், அந்த நீரை என் முன்னால் எடுத்துப் பருகிவிட்டு, “நன்றாகத்தான் உள்ளது” என்றார்கள்.

அந்த நீர்க்குவளையை நான் வாங்கி, எனது கையில் ஒரு நிமிடம் வைத்திருந்த பிறகு அவர்களிடம், “இப்போது இதை அருந்துங்கள்” என்றேன்.

அந்தநீரை அருந்திய கணமே அவர்கள் கண்ணீர் பெருக, “ஓ, இது இனிக்கிறது, இனிக்கிறது...” என்று கதறிவிட்டார்கள்.

நான் கூறினேன், “வாழ்க்கையே இவ்வளவுதான். நீங்கள் ஒரு குறிப்பிட்டவிதமாக இருந்தால் எல்லாமே இனிமையாக மாறுகிறது. நீங்கள் வேறு ஒரு குறிப்பிட்டவிதமாக இருந்தால், உங்கள் வாழ்வில் எல்லாமே கசப்பாகிவிடும்.”

ஒரு குவளை நீரை, உங்களது ஒரு எண்ணமோ அல்லது பார்வையோ இனிப்பாக மாற்றக்கூடுமென்றால், சரியான மனோபாவம், முனைப்பு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த உடல் என்ற பாத்திரத்தில் உள்ள நீரை உங்களால் இனிப்பாகமாற்ற முடியாதா என்ன? அந்த நீரை நீங்கள் இனிப்பாக மாற்றிவிட்டால், நீங்கள் 72% இனிமையானவராகிறீர்கள். ஏனெனில் உங்கள் உடலில் 72% நீராகத்தான் உள்ளது.