ருத்ராட்சம் (Ruthratcham) - சில அறியப்படா தகவல்கள்...

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும் சத்குருவின் பகிர்வு...

சத்குரு:

ruthratcham tree, ருத்ராட்ச மரம்

இமாலய பகுதியை சேர்ந்த ஒருசில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட மரங்களின் விதைதான் ருத்ராட்சம். துரதிர்ஷ்டவசமாக இந்த மரங்களை இரயில்வே தண்டவாளங்களில் முன்பு பயன்படுத்தி வந்தார்கள். இதனாலேயே இந்தியாவில் இப்பொழுது வெகுசில மரங்களே மீதம் உள்ளது. இன்று இவை பெரும்பாலும் நேபாள், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை தென் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களில் காணப்பட்டலும், சிறந்த தரம் உள்ளவை உயர்ந்த இமாலய பகுதியில் உள்ளவையே. ஏனெனில் அங்குள்ள நிலம், சூழ்நிலை போன்றவை அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது. இந்த விதைகளுக்கு என்று தனிப்பட்ட அதிர்வு உள்ளது. சாமான்யமாக அளவு பெரிதாக உள்ள விதைகளில் அவ்வளவு அதிர்வு இருக்காது. விதை எவ்வளவு சிறியதோ அந்த அளவுக்கு அதிர்வும் கூடுதலாக இருக்கும்.

ருத்ராட்ச மாலைகள்

சாமான்யமாக இம்மணிகளை மாலையாக கோர்ப்பது வழக்கம். நமது மரபில் 108 + 1 என்ற கணக்கில் மணிகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தனியாக உள்ள ஒரு மணியை "பிந்து" என்கின்றனர். ஒவ்வொரு மாலையிலும் ஒரு பிந்து இருப்பது அவசியம். இல்லையேல் அதன் சக்தி ஒருவித சுழற்சியில் சிக்கிக்கொள்ளும். இதனால் அதை அணிபவர் சிறிது பலவீனமாக இருப்பவரானால் தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள்.

ருத்ராட்ச மணிகளை கோர்க்கும் பொழுது பட்டுநூலோ அல்லது பஞ்சுநூல் கொண்டோ கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை நூலை மாற்றுவது நல்லது, இல்லையென்றால் நூல் ஒரு நாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருள வாய்ப்பு உண்டு. செம்பு, வெள்ளி, தங்க கம்பியிலும் இம்மணிகளை கோர்க்கலாம், ஆனால் பெரும்பாலும் நீங்கள் அதை நகை கடைக்கு கொண்டு செல்வீர்கள். கடைக்காரர் தங்க கம்பியோ அல்லது வேறெதுவோ கொண்டு இறுகக் கட்டி முடிக்கும் போது ருத்ராட்சம் உள்ளே விரிசல் விடலாம். நான் எவ்வளவோ முறை நகைகாரரிடம் சொல்லச்சொல்லியும், அவர்கள் என்னிடம் செய்து கொண்டு வரும்போது பெரும்பாலும் 30 - 40 விழுக்காடு உடைந்து இருக்கும். தளர்ந்த முறையில் கோர்ப்பது சிறந்ததும், முக்கியமும் ஆகும். அழுத்தத்தால் உண்டான விரிசல் உள்ள மாலை நல்லதல்ல.

இந்த மாலையை எந்நேரமும் அணியலாம். குளிக்கும் பொழுது கூட நீங்கள் இதை அணியலாம். நீங்கள் பச்சை தண்ணீரில் குளிப்பவராகவும், இரசாயன சோப்பு பயன் படுத்தாதவராகவும் இருந்தால், தண்ணீர் இதன் மேல் பட்டு உங்கள் உடல் மீது வழிவது மிக்க சிறந்தது. ஆனால் நீங்கள் இரசாயன சோப்பும், சுடு தண்ணீரும் பயன்படுத்துபவரானால், அது விரிசல் விட்டு சுலபமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி சமயங்களில் இதை அணியாமல் இருப்பது நல்லது.

ருத்ராட்சத்தின் பயன்கள் (Benefits of Rudraksha in Tamil)

அதிகமாக பிரயாணம் செய்பவர்கள், பல்வேறு வகைப்பட்ட இடங்களில் சாப்பிட்டு, தூங்குபவர்களுக்கு, ருத்ராட்சம் அவர்களுடைய சக்தியின் கூடாக மாறி ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும். சில நேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் - புது இடமாக இருந்தாலும் சில இடங்களில் உடனே தூக்கம் வரும், ஆனால் வேறு சில இடங்களில், உடம்பு அசதியாக இருந்தாலும் கூட தூக்கம் வராது. பொதுவாக உங்களைச் சுற்றியுள்ள சக்திநிலை உங்கள் சக்திநிலைக்கு சாதகமாக இல்லையென்றால், அந்த இடம் உங்களை நிலைகொள்ள விடாது. சாதுக்களும், சந்நியாசிகளும் ஒவ்வொரு இடமாக சுற்றிகொண்டு இருப்பதால், பல இடங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. அவர்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை தங்கியிருந்து தூங்கக் கூடாது என்று ஒரு விதிமுறை உண்டு. இன்று மறுபடியும் மக்கள் வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், வெளியில் சாப்பிட்டு, தூங்கவும் வேண்யிருப்பதால் ருத்ராட்சம் அணிவது மிகவும் பயனளிக்கும்.

இதில் மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது. காட்டில் வசிக்கும் சாதுக்கள், சந்நியாசிகள், அறியாத ஏதோ ஒரு குளமோ அல்லது குட்டையிலோ நீர் அருந்தக் கூடாது. இயற்கையிலேயே அந்த நீர் விஷ வாயு கொண்டதாகவோ, தூய்மை அல்லாமலோ இருக்கக்கூடும். அந்நீரை குடித்தால் அவர்கள் முடம் ஆகவோ அல்லது உயிர் போகக் கூட வாய்ப்பு ஏற்படும். அந்த சமயங்களில் ருத்ராட்ச மாலையை நீருக்கு மேலாக தொங்க பிடித்தால், நீர் நல்லதாகவும், குடிக்க தகுதியானதாகவும் இருந்தால் - மாலை கடிகார முள் செல்லும் திசையில் (பிரதக்ஷணமாக) சுற்றும். விஷமுள்ளதாக இருந்தால் மாலை எதிர் திசையில்(அப்பிரதக்ஷணமாக) சுற்றும். உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம். எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்து பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர் திசையில் சுழலும்.

தீய சக்திக்கு எதிரான கவசம்!

இது தீய சக்திக்கு எதிராக கவசமாக செயல்படவல்லது. ஒருவருக்கு கேடு செய்ய கூடிய தீய சக்திகளை சிலர் உபயோகப்படுத்துகிறார்கள். அது ஒரு விதமான விஞ்ஞானம். வேதங்களில் ஒன்றான அதர்வண வேதம் என்பதில், சக்தி நிலையை ஒருவருக்கு சாதகமாகவும், இன்னொருவருக்கு பாதகமாகவும் எப்படி உபயோகப்படுத்தலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் ஒருவர் இதில் தேர்ச்சி பெற்றுள்ளாரோ, அவர் இதைப் பயன்படுத்தி எல்லையில்லா துன்பம் உண்டாக்க முடியும். மரணம் கூட சம்பவிக்க முடியும். நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள்.

ஒரு ருத்ராட்சம் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். நமக்கு யாரும் தீவினை செய்ய மாட்டார்கள் என்று நாம் எண்ணலாம். ஆனால் உங்களை நோக்கியே அது குறி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, உங்கள் அருகில் அமர்ந்துள்ளவருக்கு குறி வைத்ததாக எண்ணிக்கொள்வோம், நீங்கள் அருகில் இருப்பதாலேயே அது உங்களை பாதிக்கும். உதாரணமாக தெருவில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் உங்களை குறி வைக்கவில்லை ஆனாலும் உங்கள் மேல் குண்டு பாய வாய்ப்பு உள்ளது அல்லவா? அது போலவே சில விஷயங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. அது உங்களுக்கு குறி வைக்கவில்லை என்றாலும், நீங்கள் தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருப்பதாலேயே பாதிக்கலாம். இதை நினைத்து மிகப்பெரிய பயம் கொள்ள தேவையில்லை அனால் இம்மாலை அவற்றிலிருந்து ஒருவித பாதுகாப்பு கொடுக்கும்.

ஏகமுகியும், பஞ்சமுகியும்

ருத்திராட்ச மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளதால், கடையிலிருந்து எதோ ஒன்றை வாங்கி அணிவது சரியல்ல. தப்பான ஒன்றை அணிவதால் வாழ்கையில் தொல்லைகள் வரலாம். ஏகமுகி மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் அதை அணிவதில் பலருக்கு விருப்பம். நீங்கள் நிறைய முகங்கள் கொண்டவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வளவு முகங்கள் இருக்கையில், ஏகமுகி அணிந்தால் கஷ்டத்தை விலைக்கு வாங்குவது போல ஆகிவிடும்.

ஏகமுகி அணிந்தால் பன்னிரண்டு நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்று மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் குடும்பத்தை விட்டு விலகுவீர்களா இல்லையா என்பது ஒரு பக்கம், ஆனால் நீங்கள் தனியாக இருக்க விருப்பப்படுபவராக இதன் சக்தி நிலை உங்களை மாற்றிவிடும். மற்றவர்களுடன் ஒன்றி வாழ முடியாமல் போகும். வேறு விதமான சிறப்பு மணிகள் அணிய வேண்டுமானால், கடைகளிலிருந்து வாங்கி அணிவதைக் காட்டிலும், இதைப்பற்றி அறிந்தவரிடம் இருந்து பெற்றுக்கொள்வது சிறந்தது.

பஞ்சமுகி எல்லோருக்கும் பொருந்தும், நல்லதும் கூட - ஆண், பெண், குழந்தைகள் உட்பட. பொதுவான நன்மை, உடல் நலம், விடுதலை ஆகியவை கிடைக்கும். இரத்தக்கொதிப்பை சீராக்கும், நரம்புகளை அமைதிப்படுத்தும், நரம்பு மண்டலத்தில் ஒரு வித அமைதியையும், சுறுசுறுப்பையும் அளிக்கும். 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுக மணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி, ஒருமுகப்படுத்தும் தன்மையை கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியோர்களின் சமநிலையான கவனிப்பை ஈர்ப்பார்கள். 

கௌரிஷங்கர்

கௌரிஷங்கர் என்பது உங்கள் ஈடா பிங்களா நாடிகளை ஒருவித சமநிலையை அடையசெய்கிறது. பொதுவாக இது வாழ்வில் செழிப்பு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. செழிப்பு என்பது பணம் மட்டும் அல்ல, பல வேறு விதங்களில் செழிப்பு அடையலாம். உங்களிடம் சொந்தமாக ஒன்றும் இல்லை என்றால் கூட வாழ்வில் செழிப்பாக இருக்கலாம். நீங்கள் ஒரு சமநிலை கொண்ட மனிதராக இருந்தாலோ, புத்திசாலித்தனமாக செயல்பட்டாலோ, செழிப்பு உண்டாகும். உங்கள் சக்திநிலை சீராக இருக்கும்போது இப்படி நடக்கும். கௌரிஷங்கர் உங்கள் ஈடா பிங்களா நாடியை சமன்படுத்தி சீராக்க செய்யும்.

உங்களுக்கு உங்கள் வாழ்கையை தூய்மையாக்க வேண்டுமானால் ருத்ராட்சம் ஒரு நல்ல கருவியாகவும் உதவியாகவும் இருக்கும். யாரோ ஒருவர் ஆன்மிக பாதையில் நடக்க வேண்டும் என்றால், தன்னை உயர்த்திக்கொள்ள, எந்த ஒரு சிறு கருவியாக இருந்தாலும், உபயோகபடுத்த வேண்டும் என்று நினைப்பார். இது ஒரு நல்ல கருவி. ஒரு குரு என்பவர் சாமான்யமாக வெவ்வேறு தரப்பான மனிதருக்கு வெவ்வேறு விதமாக ருத்ராட்சத்தை சக்தியூட்டி கொடுப்பார். ஒரு பிரம்மச்சாரியாகவோ அல்லது சந்நியாசியாகவோ ஆக வேண்டும் என்றால் முற்றிலும் வேறு விதமாக சக்தியூட்டப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக சக்தியூட்டியதை அணியக்கூடாது.

நமது மரபில் மக்கள் ருத்ராட்சத்தை கையாள்வது என்பதை வாழ்வில் ஒரு புனிதமான பணியாக நினைத்தார்கள். வழி வழியாக வந்த தலைமுறைகள் இதே செய்தன. இதை ஒரு தொழிலாக செய்தாலும், அடிப்படியாக ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக நினைத்தார்கள். தேவைகள் அதிகரிக்க இது ஒரு வணிகமாக மாறியது. இன்று இந்தியாவில் பத்ராக்ஷா என்ற ஒரு விஷ விதை உள்ளது. இது அதிகமாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் வளர்கிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். கையில் எடுத்துப்பார்த்து, நுண்ணிய உணர்வுகள் இருப்பவராக இருந்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதை உடலில் அணியக்கூடாது. ஆனால் அவை உண்மையான மணிகள் போல இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையான இடங்களில் இருந்து மாலைகளைப் பெறுவது அவசியம்.

ருத்ராட்சம் திருமணமானவர்கள் அணியலாமா?

ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்குப் பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், சிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றிய கேள்விக்கு சத்குருவின் பதில்...

ருத்ராட்சம் (Ruthratcham) - முக்கியத்துவம் என்ன?

ருத்ராட்சம், Ruthratcham

கேள்வி: மற்ற விதைகளில் இருந்து இந்த ருத்ராட்சம் எந்த வகையில் மாறுபட்டது?

சத்குரு:

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், அதற்கென்று ஒரு அதிர்வு இருக்கிறது. சில குறிப்பிட்ட பொருட்களை, சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக நாம் பயன்படுத்துகிறோம். ருத்ராட்சம் மட்டும் இல்லாமல், செடிகள், பூக்கள், மிருகங்கள் என அனைத்தும் நம்மை ஆன்மிக பாதையில் அழைத்து செல்பவை, செல்லாதவை என பிரிக்க முடியும். உதாரணமாக, ஒரு ஆடு - இது சரியான தேர்வு அல்ல. ஆனால் ஒரு காளை, பாம்பு அல்லது ஒரு மயில் சரியான தேர்வாக இருக்க முடியும். ஏனென்றால் இவை சிறிது நுட்பமானவை.

எனக்கு 11 வயதாக இருக்கும்பொழுது நான் காட்டில் அதிக நேரம் செலவிடுவேன். சாமுண்டி மலையிலும் இதர இடங்களிலும் நேரத்தை கழிப்பேன். மதிய நேரத்தில் சும்மா ஒரு இடத்தில் அமர்ந்தால் 5 லிருந்து 10 நல்ல பாம்புகளை பிடித்து விடுவேன். இதெற்கென்ற திறமையை வளர்த்துக் கொண்டது ஒரு காரணம். ஒரு நல்ல பாம்பு அதிக தடம் விட்டு செல்லாது. ஒரு விதமான வாசனையும், அது நகர்ந்து போனதற்கான சில சுவடுகள் மட்டுமே இருக்கும். நீங்கள் மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே ஒரு பாம்பு சமீபத்தில் நகர்ந்து போனதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த சமயத்தில் எனது திறமை குறித்து எனக்குப் பெருமை இருந்தது. பல நாள் கழித்து, நான் நிஜமாக தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர்தான் அவை என்னை நோக்கி வருகின்றன, நான் அவற்றை தேடிப் பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். பலமுறை நான் காட்டில் சலனம் இல்லாமல் அமர்ந்திருக்கும் பொழுது, குறிப்பாக மதிய வேளையில் சுமார் 2 லிருந்து 5 மணிக்குள், கண் திறந்து பார்க்கும் பொழுது என்னை சுற்றி 5 முதல் 8 நாகங்கள் இருக்கும். நீங்கள் தியானதன்மை அடையும் பொழுது அவை உங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. ஆன்மிகம் என்று கருதப்படும் அதிர்வுகளை நோக்கி இவை போன்ற ஜீவராசிகள் ஈர்க்கப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதேபோல் புனிதத்தன்மை கொண்ட பல மலர்கள் இருக்கின்றன. ஒரு சில பூக்கள் சிவனுக்கு விருப்பமானது, ஒரு சில பூக்கள் விஷ்ணுவுக்கு விருப்பமானது என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். இந்தப் பூக்களின் அதிர்வுகள் சிவா அல்லது விஷ்ணு என்று நாம் குறிப்பிடும் ஒன்றுக்கு நெருக்கமானவை என்று அடையாள படுத்தப்பட்டவை. இந்த பூக்களை தொட்டாலோ, பெற்றுக் கொண்டாலோ ஒரு தாக்கம் இருக்கும். எனவே குறிப்பிட்ட சில பூக்கள் மட்டுமே ஆலயங்களில் அர்ப்பணிக்கப் படுகின்றன.

பல விதமான பூக்களின் மீது ருத்ராக்ஷத்தை பிடித்து இதை நிரூபணம் செய்யலாம். ருத்ராட்சம் நேர்மறையாக (பிரதக்ஷணமாக) சுற்றினால் அந்த பூ சிவனுக்கு அர்ப்பணிக்க உகந்தது. தாழம்பூவை வைத்து இது போல செய்தால், ருத்ராக்ஷத்திற்கு அந்த பூவை பிடிக்கவில்லை என்பதை பார்ப்பீர்கள். தாழம்பூ சிவனுக்கு முன் பொய் சாட்சி சொன்னதால், சிவனுக்கு அர்ப்பணிக்க தடை செய்யப்பட்டது என்று ஒரு கதை இருக்கிறது தெரியுமா? இந்த கதைகள் எல்லாம் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டவை. ஆனால் இதன் சாரம் என்னவென்றால் அதிர்வுகள் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இணைப்பு உறுதிப்படும்.

இது போல அனைத்தும் அதிர்வுகளால் அடையாளப் படுத்தப்பட்டன. ருத்ராட்சம் ஒரு தனித்தன்மையான அதிர்வு கொண்டது. வெறுமனே கையில் அதைப் பிடித்து இருந்தாலே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால் ருத்ராக்ஷத்தை 3 முதல் 6 மாதங்கள் நீங்கள் அணிந்திருந்தால் உங்கள் உடலோடு அது ஒரு வகையில் கலந்து போயிருக்கும். எனவே ஒவ்வொருவரின் ருத்ராக்ஷமும் வித்யாசமாக இருக்கும். அதனால்தான் உங்கள் ருத்ராக்ஷத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை நீங்கள் பெறுவதோ கூடாது. உங்களுக்கு உகந்த அதிர்வை அது பெற்றிருக்கும். உங்களுடைய ஏதோ ஒன்று அதில் இருக்கும். தமிழ்நாட்டில் மற்றவர் கைகளில் இருந்து உப்பு, எள், எண்ணெய் போன்றவற்றை வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது ஏனென்றால், ஒரு சில பொருட்கள், அவை தொடும் எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. குறிப்பாக எலுமிச்சம்பழங்கள் நேர்மறையான, எதிர்மறையான என்று எதையும் உறிஞ்சி விடும். அதனால்தான் ஆலயங்களிலும் அதை உபயோகிக்கிறார்கள். மாந்த்ரீகத்திலும் உபயோகப்படுத்துகிறார்கள்.

ருத்ராக்ஷதிற்க்கும் இந்த குணம் இருக்கிறது. ஒரு வகையில் உங்கள் உடலின் ஒரு அங்கமாக இது ஆகி விடுகிறது. ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் நீங்கள் 24 நேரமும் அதை அணிந்திருந்து விட்டு ஒரு நாள் அதை கழற்றி விட்டு தூங்க முயற்சி செய்தால் தூக்கம் வராது. உங்கள் உடலின் ஒரு பாகம் இல்லாமல் இருப்பது போல இருக்கும். ஏனென்றால் ருத்ராட்சம் உங்களின் பாகமாகி விடுகிறது. அதிகப்படியான ஒரு உறுப்பு போல செயல் புரிகிறது.

இந்த உறுப்பின் முக்கிய நோக்கம் உங்களுக்கு அருள் கிட்டுமாறு செய்வது. ஏனென்றால் என்னதான் யோகப் பயிற்சிகள், மற்ற ஏதோ செய்தாலும் அருள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு சாத்தியமாக மலர முடியும். அதனால்தான் பக்தர்கள் விரைவில் முக்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வு வரவில்லை என்றால் யோகா வெறும் சர்கஸ் ஆகிவிடும்.

ருத்ராட்சம் பற்றிய இன்னொரு விஷயம் அது ஆரோக்கியம் உருவாக்குகிறது. அதிக நாள் வாழ விரும்புபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அம்சம். எப்படி வாழ்கிறோம் என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை, அதிக நாள் வாழ்வதில்தான் விருப்பம். எதற்காக? அவர்களின் சந்தோஷ கருவியை அளந்து பார்த்தல் அது எந்த உயரத்தையும் எட்டி இருக்கப் போவதில்லை. சாவை கண்டு பயம் இருப்பதாலேயே அவர்கள் அதிக நாள் வாழ ஆசைப்படுகிறார்கள். வாழ்வை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதால் குறிப்பிடும்படி எதுவும் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து விடப் போவதில்லை. அடுத்தது என்ன என்பது அவர்களுக்கு தெரியாத ஒன்று என்பதால் இதை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் வாழ்வில் எது செய்தாலும் - ஆன்மிகம், ஆரோக்கியம், செல்வம், அல்லது அது வேறு எந்த தளமாக இருந்தாலும், அருள் உங்களுக்கு கிடைக்காவிட்டால் வெற்றி உங்களுக்கு வாய்க்காது. விழிப்புணர்வாகவோ, விழிப்புணர்வு இல்லாமலோ நீங்கள் அருள் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். சிறிது அளவாவது அருள் இல்லாமல் ஒரு ஜீவராசியும் உயிரோடு இருக்க முடியாது. ஆனால் விழிப்புணர்வோடு அருளை உங்கள் வாழ்வின் ஒரு பாகமாக ஆக்கி விட்டால் அனைத்தும் எளிதாக, இயல்பாக நடக்கும். வாழ்க்கை உராய்வுகள் இல்லாத ஒன்றாக இருக்கும். ருத்ராட்சம் இந்த சாத்தியத்தை மேம்படுத்துகிறது. இருக்கும் அனைத்து உதவிகளையும் உபயோகப்படுத்த விரும்புகிறோம்.

ருத்ராட்சம் - பில்லி சூனியத்திலிருந்து காக்குமா?

ருத்ராட்சம், Ruthratcham

ருத்ராட்சம் பற்றிய பல அரிய தகவல்கள் இருந்தாலும், அது பில்லி சூனியத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது அறியப்படாத ஒன்று. இதை ருத்ராட்சம் எப்படி செய்கிறது என்பதையும் ருத்ராட்சத்தை அணியும் முறையையும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை...

கேள்வி: ருத்ராட்ச மாலையை ஆசீர்வதித்திருக்கிறீர்களே, அதுவும் தீட்சை வழங்குவதுதானா?

சத்குரு:

சக்திமயமான ஒரு சூழ்நிலையை அடிப்படை நிலையிலிருந்து மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவந்தால் அதற்கு பிரதிஷ்டை என்று பெயர். நாம் பிராணப் பிரதிஷ்டை என்று தியானலிங்கம் பற்றி சொல்கிறபோது அது முற்றிலும் வேறு பரிமாணத்தைச் சார்ந்தது. ருத்ரட்சத்தை அதற்கு உரிய முறையில் நாம் தயார் செய்கிறோம். அதை வெறுமனே பிறருக்கு வழங்குவதில்லை. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தியானலிங்க வளாகத்திற்குள் ருத்ராட்சங்கள் வைக்கப்பட்டு பிறகே தரப்படுகின்றன. மற்ற இடங்களில் வாங்குகிற ருத்ராட்சங்களில் இந்தத் தன்மை இருக்காது. அவற்றை நான் ஆசீர்வதித்துத் தருவது என்பது இன்னும் வேறு நிலையைச் சேர்ந்தது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக ஏதோ ஒன்று செய்கிறது.

கேள்வி: தீய அதிர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கவசமாக ருத்ராட்சம் பயன்படுமா?

சத்குரு:

ருத்ராட்சம் (Ruthratcham) உங்களுக்குள் இருக்கிற சக்திகளை ஒருநிலைப்படுத்துகிறது. எனவே வெளியில் இருக்கிற தீயசக்திகள் உங்களை பாதிக்காது. சிலர் மீது சில தீயவினைகளை பில்லி, சூனியம் போன்றவற்றை சிலர் ஏவுவார்கள். அதில் எவ்வளவு தூரம் பாதிப்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் அது ஒரு அறிவியலாகவே வளர்ந்தது. நான்கு வேதங்களில், அதர்வண வேதம் சக்திநிலையை ஒருவருடைய நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவதைப் பற்றிதான் இருக்கிறது. எப்படி தீமை செய்வது? எப்படி அவர்களைக் காயப்படுத்துவது? எப்படி நோய் வழங்குவது? எப்படி ஒரு மனிதனை மரணமடைய வைப்பது? என்று கூட இருக்கிறது. இவற்றை பொதுவாக பில்லி, சூனியம் என்று சொல்வார்கள். அது ஒரு தனித்தன்மை. சில துறைகளில் சில நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது ஒரு அறிவியல். அது நிச்சயம் பயன்படுகிறது. அது ஒரு குறிப்பிட்ட விதமாக நிகழ்கிற காரணத்தால் உள்நிலையில் நிறைய வேலைகள் அதற்கு செய்ய வேண்டியிருக்கிறது.

யாருக்காவது, எந்த தீமையாவது செய்ய வேண்டும் என்று கருதுவார்கள். ஒருவிதமான பேராசை அல்லது வெறுப்பு அல்லது கோபம் காரணமாக அதனைச் செய்வார்கள். அவர்கள் ஆத்மசாதனைகளில் உறுதிப்படமாட்டார்கள். எனவே அந்தக் கலை அவர்களுக்கு முழுமையாக கைவருவதில்லை. கொஞ்சம் தெரியும். மற்றது எல்லாம் உளவியல் சார்ந்தது. உதாரணத்திற்கு யாரோ உங்களை எதிர்த்து பில்லி, சூனியம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த பில்லி, சூனியமும் செய்யாமல், உங்கள் வீட்டு வாசலில் ஒரு மண்டை ஓடு வைத்துவிட்டு, கொஞ்சம் இரத்தத்தையும் தெளித்துவிட்டுப் போய்விட்டால், உங்களுக்கு தீமை நடக்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றும். இதில் தொண்ணூறு சதவிதம் மனம் சார்ந்த அச்சம். ஆனால் அதேநேரம் இன்னும் சிலபேர் இருக்கிறார்கள். எவ்வளவோ தொலைவில் இருந்து, எதாவது செய்து முற்றிலும் அழிக்கக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பலரும் என்னிடம் உதவிக்கு வருகிறார்கள். நான் இவர்களுக்கென்று பலவற்றை செய்கிறேன். சில சமயங்களில் பில்லி, சூனியம் உங்கள் மீது ஏவப்படவேண்டுமென்று அவசியமில்லை. இந்த ஒரு குறிப்பிட்ட மனிதரை நோக்கி பில்லி, சூனியம் ஏவப்படுகிறது. அதை அவர் ஏற்காத நிலையில் இருக்கிறார் என்றால், அவருக்கு பக்கத்தில் இருக்கிற உங்களை அது பாதிக்கும். இது பல இடங்களில் நடக்கிறது. இரண்டு பேர் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள் என்றால், மூன்றாவது மனிதர் ஒருவர் காயப்படுவது போலத்தான் இது. பலநேரங்களில் அந்த தீயசக்திகள் உங்களை நோக்கியே ஏவப்படுகிறது. சில சமயம் வேறெங்கோ போகவேண்டியது உங்களைப் பிடித்துவிடும். நீங்கள் ருத்ராட்சம் அணிவீர்களேயானால், உங்கள் சக்திநிலையிலிருந்து நீங்களே ஒரு கவசத்தை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.

கேள்வி: ருத்ராட்சத்தை எல்லாநேரமும் அணியலாமா? சில பேர் அதைத் தங்கள் மணிக்கட்டைச் சுற்றிக் கட்டியிருக்கிறார்களே, அதனால் பயனுண்டா?

சத்குரு:

ருத்ராட்சத்தை எல்லா நேரமும் அணியலாம். அவற்றை கழுத்தில் தான் அணிய வேண்டும். மணிக்கட்டைச் சுற்றி கட்டக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிற மனிதர்தான், மணிக்கட்டைச் சுற்றி அணியலாம். மணிக்கட்டைச் சுற்றிக் கட்டினால் உங்கள் வாழ்வை மிகவும் கடினமாக, உறுதியான முறையில் நடத்தவேண்டும். பொதுவாக அது சாத்தியமில்லை. குடும்பச் சூழ்நிலையில் இருப்பவர்கள் கழுத்தைச் சுற்றித்தான் அணியவேண்டும். அவர்கள் மணிக்கட்டைச் சுற்றி அணிவது நல்லதில்லை.

இங்கே கூட சில இளம்பெண்கள் தங்கள் கட்டை விரல்களில் மோதிரம் அணிந்திருக்கிறார்கள். அதை அப்படி அணியக்கூடாது. அதன்மூலம் உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் உங்களை நோக்கி நீங்கள் ஈர்ப்பீர்கள். மோதிரவிரலுக்கு மோதிரங்கள் அணியலாம். இந்த நான்கு விரல்களைப் பொறுத்தவரையில் தவறில்லை. ஆனால் இந்த கட்டைவிரலில் எந்த உலோகத்தையும் அணியவே கூடாது. அதன் மூலம் உங்களுக்குத் தேவையில்லாத சக்திகள், உங்களோடு தொடர்பு கொள்ள நேரும். குறிப்பாக, கட்டை விரலில் தங்கம், செம்பு போன்றவற்றை அணிவீர்களேயானால், மாந்திரீகப் பயிற்சி ஏவப்பட சில சக்திகளை நீங்கள் ஈர்ப்பீர்கள். வேறொருவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இத்தகைய சக்திகளுக்கு அடிமையாவது உங்களுக்கு நல்லதில்லை.

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராட்சம்?

ருத்ராட்சம், Ruthratcham

தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்...

கேள்வி: பல ஆன்மீகத் தலைவர்கள் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை தடை செய்கிறார்கள். ஆனால் இங்கு ஈஷாவில் பெண்களும் ருத்ராட்சம் அணிகிறார்களே?

சத்குரு:

இங்கு யாரும் அவர்கள் ருத்ராட்சம் அணிவதை கட்டுப்படுத்துவதில்லை. இங்கு எந்த தலைவர்களும் இல்லை. (சிரிக்கிறார்)

நம்முடைய வாழ்க்கையில் பிழைப்பு மட்டுமே முக்கியமான அம்சமாக இருந்தால், பிறகு அந்த சூழ்நிலையை இயல்பாகவே ஒரு ஆண்தான் கட்டுப்படுத்துவான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெளிப்புறச் சூழ்நிலைகளும், சமூக சூழ்நிலைகளும் சரியான முறையில் இல்லாமல், எப்போதும் உயிர் ஆபத்தும், பூசல்களும் இருந்து கொண்டே இருந்தால், அங்கு ஆணினுடைய ஆதிக்கம்தான் இருக்கும்.

ஏனென்றால் இதுபோன்ற சூழ்நிலைகளை அவனால் சிறப்பாகக் கையாள முடியும். ஆனால் சமூகங்கள் வளர்ச்சியடைந்த பிறகு, பிழைப்பு, உயிர்வாழ்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாதபோது, வாழ்வின் மென்மையான அம்சங்களின் பக்கம் நம் கவனம் திரும்பும். அப்போது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே எந்தவிதமான வித்தியாசமும் இருக்காது.

ருத்ராட்சம் அணிவதை ஆன்மீகத் தலைவர்கள் தடை செய்வதாகச் சொன்னீர்கள். நீங்கள் ஆன்மீகத் தலைவர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, மதத்தலைவர்கள் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் இருக்கும் யாரும் இதைத் தடுப்பதில்லை. சில மதவாதக் குழுக்களில் இதை தடைசெய்கிறார்கள்.

மனிதர்களில் ஆண் வர்க்கம் முழு ஆதிக்கம் செலுத்தி, பெண்கள் அடிமைத்தளையில் மூழ்கி இருந்தபோது, சில வகையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களது வசதிக்காகத்தான் சட்டங்கள் உருவாக்கப்படும், இல்லையா? துரதிருஷ்டவசமாக, இதுதான் மனித இனத்தின் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது.

உலகத்தில் மிகச் சிலர்தான் அனைவரின் நல்வாழ்வையும், மற்ற அனைத்து உயிரினங்களின் நலனையும் பற்றி யோசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராகக் கருதி, தங்களைச் சுற்றியிருக்கும் அனைவரது தேவைகளுக்கும் ஏற்ப சட்டதிட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, பெரும்பாலான மனிதர்கள் எப்போதும் தங்களுடைய வசதிக்காகத்தான் சட்டங்களை இயற்றியிருக்கிறார்களே தவிர, பிறருக்காக அல்ல.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அப்படியென்ன பெரிய பிரச்சனை? அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டது ஒரு பெரிய பிரச்சனை. இன்னொரு பிரச்சனை, அவர்களுடைய புத்திசாலித்தனத்தை அவர்களது ஹார்மோன்கள் மூடி மறைத்து விட்டது.

அவர்களால் ஓர் உயிரை உயிராக மட்டும் பார்க்க முடிவதில்லை. ஆண்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற அளவுக்கு ஹார்மோன்களால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் எப்போதும் பெண்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் அவள் அவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. 'எப்போது பார்த்தாலும் என் தலைக்குள்ளேயே இருக்கிறாள். அவள் என்னை எதுவும் செய்ய விடமாட்டாள்' என்ற நிலை வந்துவிட்டது. அதனால் அவள் ஒரு மாயப் பிசாசு என்பது போன்ற ஒரு முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

ஒருவருடைய புத்திசாலித்தனம், அவருடைய ஹார்மோன்களாலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே அவள் தூய்மையற்றவள் என்று சொல்லத் துவங்கிவிட்டார்கள்.

பெண்ணின் தூய்மையின்மைக்கும், ருத்ராட்சம் அணியக்கூடாது என்பதற்கும் அவர்கள் சொல்லும் முக்கிய காரணம், பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி இருப்பதுதான். உங்கள் தாய் உங்களை கருவில் சுமந்து கொண்டிருந்தபோது, அவருக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை.

அப்படி என்றால் அதுதான் உங்களை உருவாக்கியுள்ளது. அதனால்தான் உங்கள் உடலும் உருவாகியுள்ளது. நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். ஆகவே அவரும் அவரது மாதவிலக்குச் சுழற்சிகளும் அசுத்தமானவையாக இருந்தால், அதிலிருந்து உருவாகியுள்ள நாம் அனைவரும், இந்த மொத்த மனித இனமுமே அசுத்தமானது என்றுதான் சொல்லவேண்டும் (சிரிக்கிறார்).

அப்படிப் பார்த்தால், அசுத்தமானவராக இருக்கும் அனைவருமே தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள கண்டிப்பாக ருத்ராட்சம் அணியத்தான் வேண்டும்! இல்லையா?

ருத்ராட்சம் பற்றிய மேலும் சில தகவல்கள்:

பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை.

ருத்ராட்சத்தின் பலன்கள்:

  • மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம்.
  • மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.

யாரெல்லாம் இதை அணியலாம்:

வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.

ருத்ராட்சத்தின் வகைகள்

பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
ருத்ராட்சம், Ruthratcham, பஞ்சமுகி

த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
ருத்ராட்சம், Ruthratcham, த்விமுகி

ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
ருத்ராட்சம், Ruthratcham, ஷண்முகி
கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
ருத்ராட்சம், Ruthratcham, கௌரிஷங்கர்

பதப்படுத்துதல்:

புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது!

ருத்ராட்சம் கிடைக்கும் இடம்:

இந்த ருத்ராட்சங்கள் ஈஷா யோகா மையத்திலும் கிடைக்கின்றன. இமயமலையிலிருந்து வரவழைக்கப்பட்டு தியானலிங்கத்தில் சக்தியூட்டப்பட்ட பின்னரே அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.

இந்த ருத்ராட்சங்களை ஆன்லைனில் பெற: http://www.ishashoppe.com/in/