Question: ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக் கொண்டேன். ஆனால், அந்தப் பழைய காதல் காற்றில் கரைந்தது போல், காணாமல் போய்விட்டது. அப்படியானால், காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? இச்சை தீர்ந்ததால், காதலும் தீர்ந்து போய்விட்டதா?

சத்குரு:

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உடல் ரீதியான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி. இருவேறுவிதமான உடலமைப்புகள் இருப்பதுதான் அந்த வசீகரத்தின் அடிப்படை.

'உடலளவில் என் இணை என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கவேண்டும். ஆனால், மனதளவில் என்னிலிருந்து எந்தவிதத்திலும் வித்தியாசப்பட்டு இருக்கக்கூடாது' என்பது வரம்பு மீறிய எதிர்பார்ப்பு. அதனால்தான் காதல் என்று நீங்கள் நினைப்பது மூச்சுத் திணறுகிறது.

இன்று, உங்கள் காதலில் லயிப்பு இல்லை; கடமை உணர்வுதான் இருக்கிறது. கவனிக்காவிட்டால், காதல் காணாமல்தான் போகும்!

திருமணத்திற்கு முன், உங்கள் இணையைச் சந்திக்கச் செல்கையில், அழகாக உடுத்தி, இனிக்கப் பேசினீர்கள். உணவு விடுதியிலோ, தியேட்டரிலோ செலவு செய்த சிலமணி நேரங்களில், இருவரும் தத்தம் குறைகளை மறைத்து, அவரவரைச் சிறப்பாகக் காட்டிக் கொண்டீர்கள். அது ஓர் உண்மை நிலை.

அவரோடு சேர்ந்து வாழ்கையில் அவர் பல்துலக்கும் முறையோ, சமைத்துப் பரிமாறும் விதமோ, படுக்கையில் குறட்டைவிடும் ஒலியோ உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அது இன்னோர் உண்மைநிலை.

'உலகம் அழிந்தாலும், அழியாதது எங்கள் காதல்' என்று அறிவித்தவர்கள் கூட, பிற்பாடு ஏன் பிரியமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள்?

இது காதலின் குற்றமல்ல; இரண்டு மாறுபட்ட உண்மை நிலைகளைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களின் குறைபாடு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் பிரச்சினை என்ன தெரியுமா?

காதல் என்பது திருமணத்துக்கு முதல்படி என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள்.

ஒருத்தியைக் காதலியாக வைத்துக் கொள்வதற்கு அவளிடம் காட்டிய அதே உணர்வை, மனைவியாக வைத்துக் கொள்வதற்குக் காட்டத் தேவையில்லை என்று முட்டாள்தனமான முடிவு செய்துவிட்டீர்கள்.

இன்று, உங்கள் காதலில் லயிப்பு இல்லை; கடமை உணர்வுதான் இருக்கிறது. கவனிக்காவிட்டால், காதல் காணாமல்தான் போகும்!

Question: "அப்படியில்லை, சத்குரு! இப்போதும் எங்களுக்குள் பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அவள் மீது எனக்கோ, என் மீது அவளுக்கோ எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், முன்பு காதலிக்கும்போது கிடைத்த ஆனந்தம், திருமணத்துக்குப் பிறகு ஏன் கிடைக்கவில்லை என்கிறேன்?"

சத்குரு:

காதல் என்பது குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே வாழ்ந்து முடிவதல்ல. உருவ மாற்றத்தாலோ, உறவாகிவிட்டதாலோ, வயதாலோ உதிர்ந்து போய் விடுவதில்லை காதல்.

காதலின் சுகம் பற்றி அறிய, பழைய வாழ்வின் நினைவுகளைத்தான் அசை போட வேண்டும் என்பது துரதிர்ஷ்டமான மனப்போக்கு.

ஒரு மருத்துவமனை. டாக்டர்கள் கூடினர்.

"தீவிர சிகிச்சைப் பிரிவில், தினம் காலை எட்டு மணிக்கு ஒரு நோயாளி இறக்கிறார். ஏன்?"

மருத்துவரீதியாக எந்த விளக்கமும் திருப்தி தரவில்லை. நிபுணர்களுக்கே இந்த விஷயம் சவாலாக இருந்தது.

"அந்த நேரம் பேய், பிசாசு போன்ற ஏதோவொரு அமானுஷ்ய சக்தி உள்ளே வந்து உயிரைப் பறித்துப் போகிறதோ!" என்றார் ஒரு டாக்டர்.

எதுவானாலும், அதைக் கண்டு பிடித்துவிடுவது என்று முடிவானது.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் டாக்டர்கள், தத்தம் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி, அங்கே ஒளிந்திருந்து கவனித்தனர்.

சரியாக எட்டு மணிக்குக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தாள், துப்புரவு செய்யும் பெண்மணி, உயிர்காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப் பிடுங்கினாள். அங்கே வேக்குவம் கிளீனரின் பிளக்கைச் செருகி அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

இப்படித்தான் நீங்களும் காதல் பிளக்கைப் பிடுங்கி விட்டீர்கள்.

கடந்த ஐந்து வருடங்களில் உங்கள் விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் எவ்வளவு மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன என்று யோசியுங்கள். உங்கள் இணைக்கும் அதே அனுபவம் இருக்கும்.

பதினெட்டு வயதில் சந்தித்த காதலி நாற்பது வயதிலும் அதே போல நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது, உண்மையை ஏற்க மறுக்கும் முட்டாள்தனமல்லவா? நல்லதோ, கெட்டதோ, இருவரிடமும் ஏதேனும் சில பல மாற்றங்கள் ஏற்பட்டுதான் இருக்கும். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டு, காதலையும், கவர்ச்சியையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

காதல் தானாக சாகாது. நீங்களாக அதன் கழுத்தைத் திருகிக் கொன்றால்தான் உயிர்விடும். இன்றைக்கு தினப்படி அதை முறையாகப் பராமரித்து, உயிர்ப்போடு வைத்திருந்து பாருங்கள். அந்த அமுதின் ருசியைத் தொடர்ந்து சுவைக்கலாம்!