Question: ஒருவர் மறுபிறவி எடுக்கும்போது அவர் ஏற்கனவே பிறந்த பாலினத்திலேயே மீண்டும் பிறப்பாரா?

சத்குரு:

அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களில் பலர் தாங்கள் முன் ஜென்மத்தில் இருந்த பாலினத்திலிருந்து இந்த ஜென்மத்தில் மாறிப் பிறந்திருக்கிறார்கள். எனக்கு நெருக்கமானவர்கள் பலருடன் எனக்கு இது சார்ந்த பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உங்கள் ஏக்கத்தைச் சார்ந்து, உங்கள் கர்ம வாசனைகளைச் சார்ந்து இயற்கை அதற்கு ஏதுவான உடலைத் தருகிறது.

பாலினம் என்ன, முற்றிலும் வேறொரு உயிராக, மனிதனில்லாத பிறப்பாக உங்கள் பிறப்பு அமைய வாய்ப்பிருக்கிறது. இவை யாவும் நம்முடைய வாசனைகளைப் பொருத்து அமைகின்றன. இதுபோன்ற விஷயங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கின்றன, பல யோகிகளுக்கு நிகழ்ந்திருக்கின்றன, நிச்சயம் கௌதம புத்தருக்கும் நிகழ்ந்திருக்கிறது. அவருடன் இருந்த பல துறவிகள் தங்களது அடுத்த பிறப்பில் பெண்களாக மறுபிறப்பு எடுத்திருக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கௌதம புத்தர் காலத்தில்...

புத்தர் இருந்த காலங்களில் ஆண் துறவிகள், பெண் துறவிகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இதற்கு கலாச்சாரமே முக்கிய காரணமாய் அமைந்திருந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு பெண் தன் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆகும் வரையில் துறவறம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது.

ஆனால் கௌதமரின் முன்னால் அமர்ந்த ஆண் துறவிகளோ, பெண் துறவிகள் ஆண் துறவிகளை விட கௌதமருடன் அதிகபட்சமான இணைவு ஏற்படுவதை கவனித்தனர். பெண்களுக்கு உணர்வுரீதியாக ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இது சாத்தியமாயிற்று.

ஆண் துறவிகள் சிரத்தையுடன் கடினமான தியானப் பயிற்சிகளை செய்து வர, இந்தப் பெண்களுக்கோ புத்தரைப் பார்த்தவுடன் கண்கள் நனைந்தன. அவரை அவர்கள் நேசித்தனர், புத்தரும் அவர்களை கனிவுடனே பார்த்தார். இது ஆண்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

அவர்களுக்குள் பெண்கள் புத்தருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதைப் போன்ற தொடர்பு நிலையில் இருக்க வேண்டும் என்ற ஏக்கம் குடி கொண்டது. இந்த ஏக்கத்தினால் பெருவாரியான ஆண்கள் தங்களுடைய அடுத்த ஜென்மத்தில் பெண்களாகப் பிறந்தனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின், தாங்கள் யாராக இருந்தோம் இப்போது யாராக வந்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் மூர்ச்சையடைந்தனர்.

“நாம் இத்தனை ஆன்மீக சாதனைகளை செய்தோமே, இப்படி பிறப்பெடுத்து விட்டோமே! கௌதமர் நம்மை கைவிட்டு விட்டாரா?” என்ற கேள்வி அவர்களுக்குள் எழும்பியது. “நம்மை ஏன் கௌதமர் மீண்டும் ஒருமுறை துறவிகளாக படைக்கவில்லை? நாம் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து, கணவருடன் சேர்ந்து, குழந்தைகளுடன் வாழ வேண்டுமே,” என்று ஆதங்கப்பட்டனர். இது அவர்களுக்கு நிகழக் காரணம், அவர்கள் கௌதமருடன் இணைவுடன் இருந்த பெண்களைப் பார்த்து எரிச்சலுற்றதால்தான்.

உங்களின் ஏக்கமே காரணம்

நீங்கள் பிறப்பெடுக்கும் பாலினத்தை முடிவு செய்வது நீங்கள் உருவாக்கும் ஏக்கமே. நீங்கள் எதற்காக ஏங்குகிறீர்கள் என்பதே உங்கள் பாலினத்தை முடிவு செய்கிறது. ஒரு வேளை நீங்கள் இறக்கும் தருவாயில், உணவிற்காக ஏங்கித் தவிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் அடுத்தப் பிறவி எடுக்கும்போது பன்றியாக பிறக்க நேரிடலாம். உங்கள் ஏக்கத்தைச் சார்ந்து, உங்கள் கர்ம வாசனைகளைச் சார்ந்து இயற்கை அதற்கு ஏதுவான உடலைத் தருகிறது. நீங்கள் தொடர்ந்து உணவு உண்டு கொண்டே இருக்க ஆசைப்பட்டால், அதே தருணத்தில் நீங்கள் இறக்க நேரிட்டால், அடுத்த ஜென்மத்தில் யாரோ உங்களை செல்லப் பன்றியாக வளர்க்க நேரிடலாம். அவர் உங்களுக்கு நல்ல உணவளித்து வளர்க்கலாம். பன்றியாய் பிறப்பெடுப்பது நமக்கு வழங்கப்படும் தண்டனை என பலரும் நினைக்கலாம், ஆனால் இது உங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை அல்ல.

இயற்கையின் விளையாட்டு

இயற்கை தண்டனை, பரிசு என்றெல்லாம் பகுத்துப் பார்த்து யோசிப்பதில்லை. உங்கள் கர்ம வாசனை எப்படி உள்ளதோ, அதனை பூர்த்தி செய்ய, உங்களுக்கு ஏதுவான உடலமைப்பை உங்களுக்கு கொடுக்கிறது. இந்த புத்த துறவிகள் பெண்களாக பிறந்தது அவர்களுடைய கர்ம வாசனை, அவர்கள் ஏங்கியது அவர்களுடன் வாழ்ந்த பெண்கள் கொண்டிருந்த குணத்தைத்தான். பெண்கள் புத்தருடன் உணர்ச்சி ரீதியாக கொண்டிருந்த தொடர்பைக் கண்டு ஏங்கிய ஆண் துறவிகள் அவர்களை அறியாமலேயே பெண்களாகப் பிறப்பதற்கு நாட்டம் கொண்டனர்.

அதனால் நீங்கள் எடுத்திருக்கும் பாலினத்தை நீங்கள் கொண்டிருக்கும் ஏக்கம்தான் நிர்ணயிக்கிறது. இதனால், உங்கள் கொள்கை மேல் நோக்கம் கொண்டு, நம்மை பிணைத்து வைத்திருக்கும் அத்தனை எல்லைகளையும் கடக்கச் செய்யும் அந்தவொரு ஏக்கத்தை நீங்கள் உண்டு பண்ண வேண்டும். இப்படிச் செய்யும்போது இயற்கைக்கே உங்களிடம் என்ன செய்வதென்று தெரியாது. இயற்கைக்கு உங்களிடம் என்ன செய்வதென்ற குழப்பம் ஏற்பட்டால் அது உங்களுக்கு நல்லது. உங்கள் கர்மத்தின் மீது நீங்கள் வேலை செய்யத் துவங்கலாம்.

ஏக்கம் இல்லையென்றால்..

இயற்கைக்கு உங்களுடன் என்ன செய்யலாம் என்று புரிந்துவிட்டால், ஏதோவொரு குறிப்பிட்ட பெட்டிக்குள் உங்களை அடைத்துவிடும். இந்த உடலைத்தான் நாம் பெட்டி என்கிறோம். அது ஆண் பெட்டியாக இருக்கும் அல்லது பெண் பெட்டியாக இருக்கும், அல்லது பன்றி பெட்டியாக இருக்கும், கரப்பான்பூச்சி பெட்டியாக இருக்கும் அல்லது உங்களுக்கு பொருத்தமான ஏதோவொரு பெட்டிக்குள் உங்களை இயற்கையால் பிணைத்துவிட முடியும்.

அதுவே நீங்கள், இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் இருக்கும் ஒன்றிற்காக ஏங்கினால், வெறுமையை வெறித்துப் பார்த்தால், அதனால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டால், இயற்கைக்கு உங்களிடம் என்ன செய்வதென்று தெரியாது. இயற்கையால் உங்களை ஏதோவொரு வழியில் உந்தித் தள்ள முடியாது. உங்களுக்காக இயற்கை முடிவு செய்ய இயலாது.