மூன்று குரங்குகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண், காது, வாய் பொத்தி அமர்ந்திருக்கும் அந்த மூன்று குரங்குகள்தான். ஆனால் சத்குரு சொல்லும் குட்டிக் கதையில் வரும் இந்த மூன்றோ மிகவும் புத்திசாலி குரங்குகள். அதை அறிய கதையைத் தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மூன்று குரங்குகள்

ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன் சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர் குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம் புரியாமல், "இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?" என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், "25000 டாலர்கள்" என்றார். "என்னது?! ஒரு குரங்கு 25000 டாலர்களா? அப்படி இது என்ன செய்யும்?" என்றார் பார்க்க வந்தவர். "இது எந்தவிதமான கம்ப்யூட்டரையும் இயக்கும். இதற்குப் பல கம்ப்யூட்டர் மொழிகள் தெரியும். எந்த கம்பெனியின் ரகசியங்களை வேண்டுமானாலும் இது கண்டுபிடித்துவிடும். இது 'கம்ப்யூட்டர் நிபுணர்' குரங்கு. அதனால்தான் இதன் விலை 25000 டாலர்கள்," என்றார் ஓனர்.

நிபுணர் இரண்டாவது குரங்கைக் காட்டி, "இது என்ன விலை?" என்று கேட்க, "ஓ, இது 50,000 டாலர்கள்," என்றார். "இது என்ன செய்யும்?" "இது மிகச் சிறந்த மென்பொருள் நிபுணர்! இதை வாங்கினால், பிறகு இந்தியாவிலிருந்து மென்பொருள் நிபுணரை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது!" என்றார். இதைக் கேட்ட கம்ப்யூட்டர் நிபுணருக்கு தலை சுற்றிவிட்டது. "சரி அந்த மூன்றாவது குரங்கு என்ன விலை?" என்று கேட்டார். அது "1,00,000 டாலர்கள்." "இது என்ன செய்யும்?" என்றவருக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது. "அது எனக்கே சரியாக தெரியவில்லை. ஒரு மனிதர் என்ன தொழில் செய்யலாம் என்று ஆலோசனை கூறும் 'கன்சல்டன்ட்' என்று தன்னை அழைத்துக் கொள்கிறது!" என்றார்.

இறந்தவர்கள் நல்லவர்கள்?!

Iranthavargal nallavargal

ஒருமுறை ஒரு தாயும், அவரது ஏழு வயது மகனும் அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றார்கள். அது போன்ற ஒரு இடத்திற்கு அந்த சிறுவன் அப்போதுதான் முதல் முறையாக செல்கிறான்.

அவனது தாய் ஒரு குறிப்பிட்ட கல்லறையை நோக்கி நடந்து சென்று அங்கே அமர்ந்து கொண்டார். அந்த சிறுவனுக்கு கல்லறை மைதானத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஒவ்வொரு கல்லறையாகச் சென்று அதில் எழுதப்பட்டவற்றைப் படித்துக் கொண்டிருந்தான்.

இப்படி கல்லறை முழுக்க சென்று படித்து விட்டு, தன் தாயிடம் திரும்ப வந்து, “அம்மா, எல்லா கல்லறையிலும் நல்லவர்கள் என்றே எழுதியிருக்கிறதே! மோசமானவர்களை எல்லாம் எங்கே புதைப்பார்கள்?” என்றான்.