மன அழுத்தமா? தீர்வு இதோ!
ஏழைகளைக் காட்டிலும் நல்ல வசதியுடன் வாழ்பவர்களிடம்தான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதை அறியும்போது, அதற்கான உளவியல் பின்னணியை ஆராய தேவையுள்ளது! இங்கே சத்குரு மன அழுத்தம் வருவதற்கான காரணங்களையும் அதிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டியதையும் பற்றிப் பேசுகிறார்!
சத்குரு:
மன அழுத்தம் என்பது இயற்கையான ஒன்று என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டால், பிறகு அதிலிருந்து வெளிவரவே முடியாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, மகிழ்ச்சியாக இருப்பதுதான் உங்கள் இயல்பாக இருந்தது, மன அழுத்தத்தில் இருப்பதல்ல. எனவே மன அழுத்தத்தை இயற்கையான ஒன்று என்று சொல்லாதீர்கள்.
Subscribe
மன அழுத்தம் என்பது ஒரு வகையான பதற்றம். நீங்கள் பரவசத்தில் இல்லாமல் பதற்றத்தில் இருக்கிறீர்கள்.
பரவசத்தில் இல்லாமல் பதற்றத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்வினுடைய தன்மை விழிப்புணர்வோடு நிகழாமல், நிர்பந்தத்தின் பேரில் நிகழ்கிறது என்று அர்த்தம். வெளிச்சூழல்களுக்கான எதிர்வினையாகவே அந்தப் பதற்றம் உங்களுக்குள் ஏற்படுகிறது. இது நிர்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுமேயானால், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், வெளிச்சூழல்கள் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. உலகில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் நீங்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்து, அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் மன அழுத்தத்திற்குதான் ஆளாவீர்கள். எனவே, விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வினுடைய சூழல்களில் எவ்வளவு தூரம் நீங்கள் ஆளாகிறீர்களோ, அந்த அளவிற்கு மன அழுத்தம் தவிர்க்க முடியாததாக ஆகிறது.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவர்களுடைய பணம் பங்கு சந்தையிலேயே இல்லை. ஆனால், எதோ ஒரு வீழ்ச்சி என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவர்கள் வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே எதிர்பார்ப்புகள் ஈடேறாதபோது எல்லாம், மன அழுத்தம் தவிர்க்க முடியாதது என்று நீங்கள் கருதிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒரு ஏழையை பொறுத்தவரை மறுநாள் புதிய காலணிகளை வாங்கிக்கொண்டால் எனக்கு இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறான். ஏதோ ஒரு ராஜாங்கத்தையே வென்றது போன்ற மகிழ்ச்சி அவனுக்கு வருகிறது. அவனுக்கும் வெளியே சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் அதை அவன் பொருட்படுத்தவில்லை. உள்நிலையில் அவன் மகிழ்ச்சி அடைந்து விடுகிறான். வசதிமிக்க சில இடங்களில் வெளிச் சூழல்கள் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும், உள்நிலைச் சரிப்படுத்தப்படவில்லை.
வெளிநிலையை எவ்வளவு தூரம் உங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறீர்களோ, அதே அளவு உங்கள் உள்நிலையும் உங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். அப்படிச் செய்தால் இந்த உலகம் மிக அழகானதாகவும் உங்களுக்குத் தோன்றும். நாம் ஆன்மீகம் என்று எதைச் சொல்கிறோம் என்றால், உங்களுக்கு எது வேண்டுமோ அதை சரிசெய்வது மட்டும் அல்ல, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ உங்கள் தன்மையையும் சரிசெய்வது. உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு எல்லாம் இருக்கும், ஆனால் ஏதும் இல்லாதது போல் நடந்துகொள்வீர்கள்.