Question: வயதாக வயதாக மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பது இயற்கையான ஒன்றாகவே இருக்கிறது. இது மனித சமூகத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலை நாம் எப்படி கையாள்வது?

சத்குரு:

மன அழுத்தம் என்பது இயற்கையான ஒன்று என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டால், பிறகு அதிலிருந்து வெளிவரவே முடியாது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, மகிழ்ச்சியாக இருப்பதுதான் உங்கள் இயல்பாக இருந்தது, மன அழுத்தத்தில் இருப்பதல்ல. எனவே மன அழுத்தத்தை இயற்கையான ஒன்று என்று சொல்லாதீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மன அழுத்தம் என்பது இயற்கையான ஒன்று என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டால், பிறகு அதிலிருந்து வெளிவரவே முடியாது.
மன அழுத்தம் என்றால் என்ன? வாழ்வினுடைய உயிர்ப்புத் தன்மையை உங்களால் நிலைநிறுத்த முடியவில்லை. அதற்குதான் மன அழுத்தம் என்று பெயர். இது உங்கள் உடம்பில்கூட நடக்கிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் ஸ்தூல உடல் சோர்வடைகிறது, உங்களுக்குள் உயிர்ப்புத் தன்மை இல்லாமல் போகிறது. ஏனென்றால், உடலுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்வதில்லை. வெளியில் இருக்கிற அபத்தங்களை பெருமளவு உங்களுக்குள் நீங்கள் கொண்டு வருகிறீர்கள். வாழ்வினுடைய சக்திகளை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான காரியங்களை நீங்கள் செய்வதில்லை.

மன அழுத்தம் என்பது ஒரு வகையான பதற்றம். நீங்கள் பரவசத்தில் இல்லாமல் பதற்றத்தில் இருக்கிறீர்கள்.

பரவசத்தில் இல்லாமல் பதற்றத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்வினுடைய தன்மை விழிப்புணர்வோடு நிகழாமல், நிர்பந்தத்தின் பேரில் நிகழ்கிறது என்று அர்த்தம். வெளிச்சூழல்களுக்கான எதிர்வினையாகவே அந்தப் பதற்றம் உங்களுக்குள் ஏற்படுகிறது. இது நிர்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுமேயானால், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், வெளிச்சூழல்கள் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. உலகில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் நீங்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்து, அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் மன அழுத்தத்திற்குதான் ஆளாவீர்கள். எனவே, விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வினுடைய சூழல்களில் எவ்வளவு தூரம் நீங்கள் ஆளாகிறீர்களோ, அந்த அளவிற்கு மன அழுத்தம் தவிர்க்க முடியாததாக ஆகிறது.

விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வினுடைய சூழல்களில் எவ்வளவு தூரம் நீங்கள் ஆளாகிறீர்களோ, அந்த அளவிற்கு மன அழுத்தம் தவிர்க்க முடியாததாக ஆகிறது.
வெளிப்புற வாழ்க்கையை கையாள முடியாதபோது, தங்கள் செயல்களைக் குறுக்கிக் கொண்டு எல்லாவற்றில் இருந்தும் விலகி நிற்க மனிதர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கால கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து போகிறது. உங்களில் ஒரு பகுதி எப்போதும் விரிவடைந்து கொண்டே போக வேண்டும் என்று விரும்புகிறது. எல்லைகளை நீட்டித்துக்கொண்டே போகவேண்டும், செயல்களை வளர்த்துக்கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உங்களுடைய இன்னொரு பகுதி மன அழுத்தம் காரணமாக எதையும் செய்ய வேண்டாம் என்று உங்களை வற்புறுத்துகிறது. எதிர்பார்ப்புகள் ஈடேறாதபோது பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவர்களுடைய பணம் பங்கு சந்தையிலேயே இல்லை. ஆனால், எதோ ஒரு வீழ்ச்சி என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவர்கள் வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். எனவே எதிர்பார்ப்புகள் ஈடேறாதபோது எல்லாம், மன அழுத்தம் தவிர்க்க முடியாதது என்று நீங்கள் கருதிக்கொண்டு இருக்கிறீர்கள்.

வசதிமிக்க பல மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்வில் எல்லாம் இருக்கிறது, ஆனால் ஏதும் இல்லாதவர்கள் போல் இருக்கிறார்கள்.
தங்கள் மனநிலையில் வெவ்வேறு விதமாக அழுத்தங்களை மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வாழ்விலேயே மிகவும் விலை மதிப்பற்றது என்று ஒன்றைக் கருதுகிறபோது, அது போய்விட்டால் இவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். குறிப்பாக வசதிமிக்க பல மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்வில் எல்லாம் இருக்கிறது, ஆனால் ஏதும் இல்லாதவர்கள் போல் இருக்கிறார்கள். மன அழுத்தம் என்றால் ஒருவிதமான அவநம்பிக்கை உள்ளே ஏற்பட்டுவிட்டது என்று பொருள். இந்தியாவில் இருக்கின்ற கிராமங்களுக்குச் செல்வீர்களேயானால், மிகவும் ஏழை எளிய மனிதர்கள் எல்லாவிதத்திலும் வறுமைக்கு ஆட்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் முகம் மலர்ச்சியாக இருக்கும், ஆனந்தமாக இருக்கும். ஏனென்றால் நிலைமை நாளைக்கு நல்லவிதமாக மாறும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. செல்வச் செழிப்புமிக்க பல இடங்களில் அந்த நம்பிக்கை போய்விட்டது. ஏனென்றால், வெளிச்சூழல் முழுக்கவே வேறொருவர் கட்டுப்பாட்டிற்குப் போயிருப்பதாகக் கருதுகிறார்கள். உணவு இருக்கிறது, உடை இருக்கிறது, வீடு இருக்கிறது, எல்லாம் இருக்கிறது, ஆனால் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது போலவே இருக்கிறார்கள்.

ஒரு ஏழையை பொறுத்தவரை மறுநாள் புதிய காலணிகளை வாங்கிக்கொண்டால் எனக்கு இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறான். ஏதோ ஒரு ராஜாங்கத்தையே வென்றது போன்ற மகிழ்ச்சி அவனுக்கு வருகிறது. அவனுக்கும் வெளியே சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் அதை அவன் பொருட்படுத்தவில்லை. உள்நிலையில் அவன் மகிழ்ச்சி அடைந்து விடுகிறான். வசதிமிக்க சில இடங்களில் வெளிச் சூழல்கள் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும், உள்நிலைச் சரிப்படுத்தப்படவில்லை.

வெளிநிலையை எவ்வளவு தூரம் உங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறீர்களோ, அதே அளவு உங்கள் உள்நிலையும் உங்கள் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். அப்படிச் செய்தால் இந்த உலகம் மிக அழகானதாகவும் உங்களுக்குத் தோன்றும். நாம் ஆன்மீகம் என்று எதைச் சொல்கிறோம் என்றால், உங்களுக்கு எது வேண்டுமோ அதை சரிசெய்வது மட்டும் அல்ல, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ உங்கள் தன்மையையும் சரிசெய்வது. உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு எல்லாம் இருக்கும், ஆனால் ஏதும் இல்லாதது போல் நடந்துகொள்வீர்கள்.