சிலர் பதவிக்காகவோ, சொத்து-சம்பாத்தியத்திற்காகவோ அடுத்தவர் கால்களை பிடிக்கிறார்கள். ஆனால், குருவைக் கண்ட சீடர்களும் பக்தர்களும் பாதங்களை தொட்டு வணங்க நினைப்பது முற்றிலும் மாறுபட்ட காரணத்திற்காக. குருவின் பாதங்களை தொட்டு வணங்கும் முறை பற்றியும், குருவின் பாதங்கள் வழங்கும் சாத்தியங்கள் குறித்தும் சத்குரு பேசுகிறார்!

Question: இந்தியாவில், ஒரு ஞானியையோ அல்லது ஒரு குருவையோ பாதங்களில் விழுந்து வணங்குவது ஒரு பாரம்பரியமாக இருக்கிறது. இதன் பின்னணியில் ஏதாவது முக்கியத்துவம் உள்ளதா?

சத்குரு:

யோகமரபில் பாதசாஸ்திரம் என்கிற ஒன்று உண்டு. “பாத” என்றால் குறிப்பாக பாதத்தின் அடிப்பகுதி. ஏறக்குறைய உங்களில் உள்ள ஒவ்வொன்றையும் பலவிதங்களில் ‘ஆன்’ செய்யவைக்கும் எல்லா ஸ்விட்ச்சுகளும் உங்கள் பாதங்களில் உள்ளன. எப்படி ‘ஆன்’ செய்வது என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பொதுவாக மேலை நாட்டுச் சமூகங்களில் எவருடைய பாதங்களிலாவது விழுவது என்பதை, கீழான செயல் அல்லது அடிமைத்தனம் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், யோகபாரம்பரியத்தில், கைகளை விட பாதங்கள் குறைந்த மதிப்பு கொண்டதாக எந்தவிதத்திலும் நாம் நினைக்கவில்லை.

பெற்றுக்கொள்வதற்கான ஆற்றல் என்று பார்க்கும்போது, உங்கள் கைகள், சக்திமிக்க கருவிகளாக உள்ளன. நீங்கள் உணர்வுமிக்கவர் என்றால், உங்கள் கைகளால் எதைத் தொட்டாலும் அது என்ன என்பது உடனே உங்களுக்குத் தெரிந்துவிடும். அதையே, உங்கள் தோள் அல்லது முதுகு அல்லது பின்னந்தலை இவற்றால் தொட்டால், அது என்னவென்பதை அறியமுடியாது. ஆனால் உங்கள் கைகளால் தொட்டால், உடனே அது என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்வதன் காரணம் தொடு உணர்வால் மட்டும் அல்ல, உங்கள் கைகளுக்கு மிக ஆழமான புரிதல் தன்மை இருப்பதால்தான்.

ஆனால், நீங்கள் எதற்காவது உங்களது சக்திகளை அளிக்க விரும்பினால், பாதங்கள் அதற்கான மிக சக்திவாய்ந்த கருவிகளாக உள்ளன. எப்படி பாதங்களைக் கையாண்டு மக்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவங்களை வழங்க முடியும் என்று ஒரு காலத்தில் மக்களுக்கு நாம் கற்றுக் கொடுத்ததுண்டு. பாதத்தில் எங்கே அழுத்தினால், ஒருவரைத் தளர்வு நிலைக்குக் கொண்டு செல்லலாம், எங்கே அழுத்தினால் பரவசநிலைக்குக் கொண்டு செல்லலாம், எங்கே அழுத்தினால் அன்புணர்வில் ததும்பச் செய்யலாம் என்பதற்கு பல நுட்பங்கள் உள்ளன. அனைத்து ஏழு சக்கரங்களும் உங்கள் பாதங்களில் நிலைபெற்றுள்ளன. பாதங்களை எப்படிக் கையாள்வது என்பதை நீங்கள் அறிந்துகொண்டால், இந்த உடலின் கட்டமைப்பில் நீங்கள் பலவற்றை செய்ய முடியும். இன்றைக்கு இதை ரிஃப்ளெக்ஸாலஜி என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தக் கலையை அனைவரும் ஆரோக்கியத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள். உயிர்த்தன்மை குறித்து நமக்கிருக்கும் ஆர்வம் காரணமாக, அனுபவங்கள் அடிப்படையில், இந்த விஷயம் குறித்து நாம் பேசுகிறோம்.

ஒருவரது பாதங்களைத் தொடுவது அல்லது பற்றுவது பற்றிக் கூறவேண்டுமென்றால், நீங்கள் யாருடைய பாதங்களைத் தொடுகிறீர்களோ, அவரிடம் மற்றவர்களுக்கு வழங்குவதற்கு என்று ஏதாவது இருக்கவேண்டும். அப்படியில்லாமல், கொடுப்பதற்கு எதுவுமில்லாத ஏழையிடம் கடன் கேட்பது பயனற்றது. நீங்கள் கடன் கேட்க விரும்பினால், கொடுப்பதற்கு பணம் வைத்திருப்பவரிடம் கேட்கவேண்டும். திவாலானவரிடமோ அல்லது கஞ்சனிடமோ கடன் கேட்பது வீண்தான். வளமாக இருப்பவரிடமோ அல்லது கொடுப்பதற்கு விருப்பத்துடன் இருப்பவரிடமோ மட்டும் நீங்கள் கேளுங்கள்.

தானே திவாலாகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய பாதங்களைப் பற்றாதீர்கள். அவர் வெடித்தெழும் சக்தியுடன் இருந்தால், அதைப் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பினால், அவரைத் தொடர்புகொள்ள ஒரு குறிப்பிட்ட வழி இருக்கிறது. எப்படி ஒரு ப்ளக் பாயிண்ட் தேடி சென்று ப்ளக் செருகி தேவையான மின்சாரம் பெறுகிறீர்களோ அப்படி. ப்ளக் பாயிண்ட்களில் பலவிதம் உண்டு. வெவ்வேறு விதமான ப்ளக் பாயிண்ட்களுக்கு வெவ்வேறு விதமான ப்ளக் தேவைப்படுகிறது.

பலவீடுகளில் மூத்தவர்களுடைய பாதங்களைத் தொடும் பாரம்பரியம் இன்றைக்கும் வழக்கத்தில் இருந்து வருகிறது. தென்னிந்தியாவில் அது வழக்கொழிந்துவிட்டது. ஆனால் வடஇந்தியாவில், வேதகலாச்சாரத்தின் விளைவாக இன்னமும் அது வேரூன்றியுள்ளது. அந்த மக்கள், தமது தாய், தந்தை, மாமா அல்லது வயதில் மூத்த யாரைப் பார்த்தாலும், முதலில் அவர்களது பாதங்களைத் தொடுகின்றனர். இது மூத்தவர்களுக்குத் தங்களது மரியாதையைத் தெரிவிக்கத்தானே தவிர, அந்த மாமாவின் சக்தியைப் பெறுவதற்காக அல்ல! ஒரு அதிகாரம் வாய்ந்த மனிதர், ஆனால் ஆன்மீகவளர்ச்சி இன்றி தனக்கேயுரிய வழியில் அதிகாரம் கொண்டவரை நமஸ்கரிக்கவோ அல்லது பாதங்களில் விழுந்து வணங்கவோ வேண்டுமென்றால் அதை ஒரு விதமாகச் செய்யவேண்டும். அதே ஒரு தெய்வ உருவச்சிலையைக் கண்டால் வேறொரு விதமாக வணங்க வேண்டும்.

நீங்கள் உங்களது குருவிற்குத் தலைவணங்குவதை, இன்னொரு விதமாகச் செய்யவேண்டும். ஒரு குருவிற்கு எப்படித் தலைவணங்குவது என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் மற்ற மூன்று வணங்கும் முறைகளை நான் கூறமுடியும். குருவைப் பொருத்த வரையில், நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அந்த முறையில் வணங்கலாம். ஏனெனில் எந்த நேரமும் எனது கால்கள் இழுக்கப்படுவதிலும், பிடிக்கப்படுவதிலும் எனக்கு உடன்பாடில்லை!!

தானே திவாலாகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய பாதங்களைப் பற்றாதீர்கள். அவர் வெடித்தெழும் சக்தியுடன் இருந்தால், அதைப் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பினால், அவரைத் தொடர்புகொள்ள ஒரு குறிப்பிட்ட வழி இருக்கிறது. எப்படி ஒரு ப்ளக் பாயிண்ட் தேடி சென்று ப்ளக் செருகி தேவையான மின்சாரம் பெறுகிறீர்களோ அப்படி.

சரியானபடி உள்வாங்கும் தன்மை உங்கள் கைகளுக்கு இருக்கும் பட்சத்தில், வழங்கும் சாத்தியம் கொண்ட பாதங்களை உங்கள் கைகள் கொண்டு சரியானபடி தொடர்பு கொண்டால் பல வருட சாதனாவிலும் சாதிக்க முடியாததை உங்களால் ஒரு கணத்தில் சாதித்துவிட முடியும். அது போன்ற தொடர்பு என்றாவது ஒரு நாள் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான், ஒவ்வொருவரும் சரியான பாதங்களை நோக்கிப் பாய்ந்து விழுகின்றனர்.

பொதுவாக மேலை நாட்டுச் சமூகங்களில் எவருடைய பாதங்களிலாவது விழுவது என்பதை, கீழான செயல் அல்லது அடிமைத்தனம் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், யோகபாரம்பரியத்தில், கைகளை விட பாதங்கள் குறைந்த மதிப்பு கொண்டதாக எந்தவிதத்திலும் நாம் நினைக்கவில்லை. உடலின் ஒரு பகுதி, மற்றதைவிடக் குறைந்த மதிப்புள்ளதாக எப்போதும் பார்க்கப்படுவதில்லை. எங்கே எப்படித் தேவையோ அதற்கேற்ப பயன்படுத்துவதே வழக்கம்.

சில குறிப்பிட்ட பாரம்பரியங்களிலிருந்து மக்கள் என்னிடம் வரும்போது, இத்தகைய விஷயங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளதை அறிந்து வியப்படைகிறேன். பாதங்களை எப்படிப்பற்றுவது என்பதை மிகத் துல்லியமாக அவர்கள் அறிந்துள்ளனர். மற்றபடி பெரும்பாலான மக்கள், உணர்ச்சி மேலீட்டால் மட்டுமே பாதங்களைத் தொடுகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு அது சரியாக அமைந்து விடக்கூடும். வேறுசிலர் எப்படியும் தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பாதங்களின் எல்லாப்பகுதிகளையும் தொடுகின்றனர்! எப்படி சரியாகச் செய்வது என்பதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே எப்படியாவது பாதங்களைத் தொட்டுப் பயன் பெற விரும்புகின்றனர். அவர்கள் தங்களது கைகளை, குருவின் பாதங்களுக்கு அடியில் கொடுக்கின்றனர், அதனால் குரு கீழே விழுந்து, தலையில் காயம்பட்டாலும் பரவாயில்லை. தங்களுக்கு ஏதாவது கிடைத்தால் போதும். ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை, அது ஒரு புதையல் வேட்டை!

மக்கள் கூட்டம் அதிகமாகும்போதெல்லாம், குருமார்கள், எப்போதும் ஒரு சக்தி உருவத்தை உண்டாக்கி, “அங்கே சென்று அதற்குத் தலைவணங்குங்கள்” என்பதன் காரணம் இதுதான். குரு தனது பாதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்படிச் செய்கிறார். நீங்கள் நமஸ்கரித்து, பெற்றுக்கொள்வதற்கான ஒரு சக்தி உருவத்தை நாம் உருவாக்க முடியும். அதுதான் மேலானது. குருவின் பாதங்கள் நடந்து செல்லும் பாதங்கள். ஆனால் சக்தி உருவங்கள் உங்களை விட்டு விலகிச் செல்ல முடியாதவை. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் நீங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்க முடியும், அவைகளால் தடுக்க முடியாது, மற்றும் அது சரிதான்.