இது விசுவாசமான நாய்!
சத்குரு சொன்ன சிரிக்க வைக்கும் இரண்டு கதைகள் உங்களுக்காக...
சத்குரு சொன்ன சிரிக்க வைக்கும் இரண்டு கதைகள் உங்களுக்காக...
சத்குரு:
இது விசுவாசமான நாய்!
செல்லப் பிராணி வாங்கச் சென்ற ஒருவர், அழகான நாய் ஒன்றைப் பார்த்து அசந்து போய் நின்றார். விலை என்ன என்று விசாரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் விலை ரூ. 25,000/-
‘‘ஊரைக் கொள்ளை அடிக்கிறீர்களா, ஒரு நாய்க்கு இவ்வளவு விலை ரொம்ப அதிகம்!’’ என்றார்.
Subscribe
கடைக்காரர், “நீங்கள் அப்படிப் பேசக் கூடாது, இது மிக விசுவாசமான ஒரு நாய். அதனால்தான் இத்தனை விலை!” என்றார்.
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்... இதை 7 முறை விற்று விட்டேன், 7 முறையும் விற்ற 12 மணி நேரத்தில் என்னிடம் திரும்பிவிட்டது!’’
சுமையை விலக்குங்கள்
நம்ம சங்கரன்பிள்ளை தன் தலையில் ஒரு பெரிய மூட்டையுடன் ரயிலில் ஏறினார். எப்படியோ நெரிசலில் முட்டி மோதி, ஒரு இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்தார். ஆனால், அமர்ந்த பிறகும் தலையிலிருந்த மூட்டையை அவர் இறக்கி வைக்கவே இல்லை.
மற்ற பயணிகள் இதை வினோதமாகப் பார்த்தனர். "சரி, அப்புறமாய் இறக்கி வைப்பார் போல," என எண்ணினர். ஆனால், சங்கரன் பிள்ளை மூட்டையைக் கீழே இறக்கவே இல்லை. எதுவுமே அங்கே வித்தியாசமாய் நடக்கவில்லை என்பதைப் போல இருந்தார்.
சக பயணிகளில் ஒருவர் அக்கறையோடு, “ஐயா! மூட்டையை இறக்கி வைக்க நான் உதவட்டுமா?” என்று கேட்டார். “வேண்டாம், வேண்டாம்’’ என்று பதறி மறுத்தார் சங்கரன்பிள்ளை, தொடர்ந்து தலையில் மூட்டையுடனே பயணித்தார். பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கே கழுத்து வலி வந்தது போலாகிவிட்டது.
ஒரு பெரியவர், “ஐயா, மூட்டையில எதுனா காஸ்ட்லி அயிட்டம் இருக்கா? மன்னிக்கணும், எதுக்குக் கேக்கிறேன்னா... அப்படி இருந்தாக் கூட அதைக் கீழே இறக்கி வைச்சுட்டு நீங்க அது மேல உக்காந்துக்கலாமே. பாதுகாப்பாவே இருக்குமே,” என்றார் கரிசனமாய்.
“இல்லை, இதில் துணிமணிதான் இருக்கு,” என்றார் சங்கரன்பிள்ளை.
“அப்புறம் ஏங்க அதைத் தலை மேலேயே சுமந்துட்டிருக்கீங்க?”
“இல்லை, என் சுமையை ரயிலில் இறக்கி வைக்க நான் விரும்பலை,” என்றார் சங்கரன் பிள்ளை.