ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 1

"கோபப்படுவதால் ஏதேனும் செயல் நடந்தால், ஏன் கோபப்படக் கூடாது?! புரட்சி நடக்கணும்னா கோபம் அவசியம்தானே!" இது ஏதோ சரியான வாதம்போல தோன்றலாம்! அப்படித்தான் நடிகர் சித்தார்த்தும் கோபம் தொடர்பான தனது முதல் கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார். ஆனால் சத்குரு கூறிய பதிலோ முற்றிலும் மாறுபட்டது. அந்த பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்!

சித்தார்த்: இன்றைய தலைப்பு "இளைஞர்களும் உண்மையும்." எந்த பகுதி இளைஞர், எந்த பகுதி உண்மை என்று நாம் சற்று முன் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

சத்குரு: நீங்கள் இளைஞர், நான் உண்மை!

சித்தார்த்: அப்போ இந்த மாலையில் நான் இளைஞனாக இருக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: ஆனால் நான் இளைஞனும் ஆவேன்.

சித்தார்த்: இளைஞன் என்று உங்களை சொல்வது குறைத்து மதிப்பிடுவது ஆகிவிடும் சத்குரு. இளைஞர்களுக்கு கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த தேசத்தில் ஒரு இளைஞனாக எனக்கு இருக்கும் ஒரு அடிப்படை கேள்வி கோபம் குறித்தது. எங்களில் பலருக்கும் அதிகமாக கோபம் இருக்கிறது. இறுதியில் அதை வைத்து என்ன செய்வதென்றும் தெரிவதில்லை.

"நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்" என்பேன் நான்.

ஒருவரின் உள்நிலை என்ற ரீதியில் பார்த்தால் கோபத்தின் பங்கு என்ன? எனக்கு இருக்கும் அடிப்படை புரிதல் என்ன என்றால் இந்த தேசத்தில் இப்பொழுது இளைஞர்களுக்கு இருக்கும் கோபம் போதாது, இன்னும் அதிகமாக கோபம் தேவை, கோபம் வெளிப்பட வேண்டும் என்பதே. நெறிப்படுத்தப்பட்ட கோபம் வெளிப்பட்டால் இந்திய தேசத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க தீர்வுகள் கிடைக்குமா?

சத்குரு: இளைஞர்கள் ஆவேசத்தில் இருப்பது ஒரு தீர்வு இல்லை. தொழில், வேலை, பணம் போன்ற அம்சங்களை பார்த்து இளைஞர்கள் வளரும் காலகட்டம் இது. சே குவேரா, "நீங்கள் ஆவேசத்தில் இருந்தால் எங்களில் ஒருவர்" என்றார். ஆனால், "நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்" என்பேன் நான். ஏனென்றால் கோபம் கொள்ளும் பொழுது நீங்கள் உலகத்தை பிரிக்கிறீர்கள். ஏதோ ஒன்றின் மீது கோபம் கொண்டால் பாதி உலகத்தை, ஏன் முழு உலகத்தையும் அழித்துவிட நினைப்பீர்கள். இது தீர்வு அல்ல! இது ஒரு வலுவிழந்த மனிதனின் கருவி. சிறிது காலத்துக்கு பின் இது எந்த பலனும் இல்லாது குளிர்ந்து போகும்.

சித்தார்த்: உதவி செய்யும் தேவையில் எழும் கோபம் விளைவு ஏற்படுத்துமா?

சத்குரு: ஒரு சூழ்நிலையை உங்களால் கையாள முடியவில்லை என்று வரும்பொழுதுதான் கோபம் வருகிறது. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், உங்கள் கோபத்தால் சில விஷயங்கள் நடப்பதை, மனிதர்கள் செயல்படுவதை நீங்கள் ருசித்துவிட்டீர்கள். எனவே இதுவே வழி என்று நினைத்து விட்டீர்கள். உங்களுக்கு ஏதோ ஒன்றை யாரோ கோபமாக சொன்னால் பிடிப்பதில்லை. ஆனால் உலகத்துக்கான தீர்வாக இந்த கோபத்தை நினைக்கிறீர்கள். அது ஒரு ஆற்றல் இல்லாத மனிதனின் கடைசி அஸ்திரம் அவ்வளவுதான்.

கோபம் இல்லாமல் இருக்க நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வாக இருந்தால் இணைத்து கொள்வீர்கள். இணைத்துக் கொள்ளும் பொழுது நீங்களே ஒரு தீர்வுதான். நமது புத்திசாலிதனத்தை தீர்வுகள் தேடுவதில் செலவு செய்வதில்லை, அதை பிரச்சனைகள் உருவாக்குவதில் உபயோகப்படுத்துகிறோம்.

உதாரணமாக, டெல்லி சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் அது. அந்த நிகழ்வு பலரை ஆவேசத்தில் தள்ளியது. தினமும் அது போல ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தாலும் தலைநகரில் இது போல ஒரு கொடுமை நடந்தது சகித்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் ஆவேசம் அடைந்தனர். ஒட்டு மொத்த தேசத்தின் கவனம் இதை நோக்கி திரும்பியது. உணர்வினால் மக்கள் எழுச்சி அடையாமல், ஆவேசத்தால் மக்கள் எழுச்சி அடைந்தனர். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அந்த ஆவேசத்தால், அதனால் நிகழ்ந்த போராட்டத்தால், விளைவு மோசமாக இருந்திருக்க கூடும். பலர் இறந்திருக்க கூடும்.

எனவே ஒரு பிரச்சனை உருவாக்கி மற்றொரு பிரச்சனைக்கு தீர்வு காண முயல வேண்டாம். உணர்வுகளால் எழுச்சி கொள்வது அற்றுப் போனதால் கோபத்தை ஒரு அறமாக கருத ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது ஒரு அறம் அல்ல. மனிதனின் தரத்தை தாழ்த்துவது ஆகும். சமூகத்தில் நிலவும் உணர்ச்சி இன்மையால் மனிதன் தரம் தாழ்வது அறம் போல தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஆரோக்கியமான கோபம் மக்களை தட்டி எழுப்புமா? நம் அனைவர் மனதிலும் இருக்கும் இந்த கேள்வியை எழுப்பிய சித்தார்த்துக்கு என்ன சொல்கிறார் சத்குரு? காத்திருங்கள் அடுத்த வாரம் வரை...

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...