நோய்களை குணமாக்குவதற்காக சிலர் மேற்கொள்ளும் ஹீலிங், ரெய்கி போன்றவற்றை செய்யக்கூடாது என சத்குரு சொல்வதன் காரணத்தை இந்த பதிவின் மூலம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றை மேற்கொள்வதால் காத்திருக்கும் ஆபத்து குறித்தும் ஒரு புரிதல் கிடைக்கிறது!

Question: சத்குரு, எனது தந்தை ரெய்கி கற்றிருக்கிறார். ரெய்கி, பிராணிக் ஹீலிங் போன்றவைகள் கர்மவினையின் தளத்தில் செயல்படுபவை என்றும், அது போன்று ஹீலிங் செய்வது நம்முடைய சக்திநிலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே ஹீலிங் செயல்பாடுகளில் என்னையும், என் தாயையும் இணைக்க வேண்டாம் என்று என் தந்தையிடம் கூறியது காரணமாக வீட்டில் ஒரு எதிர்ப்பான சூழல் நிலவுகிறது. இத்தகைய விஷயங்களிலிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ள ஏதேனும் வழி உள்ளதா?

சத்குரு:

இப்போதெல்லாம் ஹீலிங் செய்பவர்கள் மிகவும் அதிகமாகிவிட்டனர். சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவிலிருந்து ஒரு பிரபலமான ஹீலர் சென்னைக்கு வந்தார். எனக்கு இது ஏனென்றே தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து ஹீலர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். இந்தியாவிலிருந்து ஹீலர்கள் அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். இந்திய ஹீலர்கள் இந்தியாவிலும், அமெரிக்க ஹீலர்கள் அமெரிக்காவிலும் ஏன் ஹீலிங் செய்வதில்லை? அமெரிக்காவிலிருந்து இங்கு வருவது ஏனென்றால், அங்கிருக்கும் மக்களுக்கு அது பலன் தருவதில்லை என்பது தெரியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நாள்பட்ட நோய்கள் என்னும்போது, அந்த நோய் ஒரு மேலோட்டமான வெளிப்பாடுதான். ஆனால் எப்படி கடலில் மிதக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே உங்கள் வெளிப் பார்வைக்குப் புலப்படுகிறதோ, அதுபோல நோயின் அறிகுறிகள் மட்டுமே உங்கள் பார்வைக்குப் புலப்படும்.

அந்த அமெரிக்க ஹீலர் சென்னை வந்தபோது, மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் நடந்தது. பெருந்திரளான மக்கள் ஹீலிங் செய்து கொள்வதற்காக சென்னைக் கடற்கரையில் கூடினர். சிலர் என்னிடம் வந்து, “சத்குரு இந்த ஹீலிங் என்பது என்ன? நான் போகலாமா? எனக்கு சில உடல் உபாதைகள் உள்ளன” என்று கேட்டனர்.

நான் கூறினேன், “நான் வேண்டுமென்றால், பூமியிலிருக்கும் அத்தனை மருத்துவமனையின் விலாசங்களையும் அந்த ஹீலர்களிடம் தருகிறேன். நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கு மருத்துவமனைக்குச் செல்லலாமே, கடற்கரை எதற்கு? அங்கே ஆரோக்கியமானவர்கள் மட்டுமே போகிறார்கள் என்றல்லவா நினைத்தேன்!”

நான் அதில் பலனே இல்லை என்று கூறவில்லை. 90% சதவிகித தருணங்களில் அதில் எதுவுமே நேர்வதில்லை. ஆனால் பத்து சதவிகித தருணங்களில் ஏதாவது நிகழக்கூடும். அந்த பத்து சதவிகிதமும் நடக்கவில்லையென்றால் எனக்கு மகிழ்ச்சிதான். உதாரணமாக, யாராவது உங்களிடம் வந்து, எதற்குமே பயன்படாத ஒன்றை விற்கிறார் என்றால், அவர் புத்திசாலியான வியாபாரியாகவும் நீங்கள் சிறிது முட்டாளாகவும் இருக்கிறீர்கள். ஆனால் இதன் விளைவாக பெரிய கெடுதல் எதுவும் உங்களுக்கு நிகழ்வதில்லை. உங்களுக்கு எதையோ வாங்கிய சந்தோஷம், அவருக்கும் வியாபாரம் நடக்கிறது. நீங்கள் ஷாப்பிங் மாலுக்கு செல்லும்போது, பெரும்பாலான நேரங்களில், உங்களுக்குப் பயனற்ற பொருட்களைத்தான் வாங்குகிறீர்கள். வாங்கி வீட்டிற்குக் கொண்டு வருவதோடு சரி, அவை பிரிக்கப்படாமல்கூட இருந்துவிடுகிறது. ஏனெனில் அங்கே ஷாப்பிங் செய்வது மட்டும்தான் நோக்கமே தவிர அதன் பயன்பாடு பற்றியல்ல. உங்களுடைய ஷாப்பிங் செய்யும் தாகத்தை, ஏதேதோ பயனற்ற பொருட்களை விற்பதன் மூலம், அவர்கள் தீர்த்து வைக்கிறார்கள். இதனால் எந்தக் கெடுதலும் உங்களுக்கு நேர்வதில்லை. ஆனால், உங்களுக்குக் கெடுதலை உண்டாக்கக்கூடிய ஒன்றை யாராவது விற்றால், பயனற்றதை வாங்குவதைவிட இது மிகவும் மோசமானது. தேவையற்றதை வாங்குவதனால் பணம் மட்டுமே விரயமாகிறது, அது உயிருக்குக் கேடு செய்யாது. ஆனால் இந்த “ஏதோ பத்து சதவிகிதம்” உயிரை பாதிக்கக்கூடும்.

பத்து சதவிகித தருணங்களில் ஏதோ நிகழ்வதில்தான், ஆபத்து இருக்கிறது. இது இந்திய பாம்புகள் போல. உதாரணமாக, இந்தியாவில் பாம்புகளை எடுத்துக்கொண்டால், தொண்ணூறு சதவிகித பாம்புகள் விஷமில்லாதவை. 10 சதவிகிதம் மட்டுமே விஷம் கொண்டவை. 90 சதவீதம் நீங்கள் பாம்புகளிடம் நன்றாகவே கடி வாங்கியிருக்கலாம். நீங்கள் பதற்றத்திற்கு ஆளாகியிருக்கலாம். எனவே மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்திருக்கலாம், ஆனால் உண்மையில் ஆபத்து எதுவும் நடந்திருக்காது. நீங்கள் சிகிச்சை செய்யாமலேயே இருந்திருந்தாலும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. ஆனால் அந்த பத்து சதவிகித பாம்புகளில் ஒன்று உங்களைக் கடித்தால்தான், உண்மையாகவே ஆபத்து இருக்கிறது. இந்த ஹீலிங் வேலைகள் இப்படிப்பட்டவைதான். தொண்ணூறு சதவிகித தருணங்களில் அவர்கள் எதையும் செய்வதில்லை. ஆனால் 10 சதவிகித சிகிச்சையாளர்கள் இருக்கிறார்களே - ஏதோ சிறிதளவு ஹீலிங் செய்யக்கூடியவர்கள்-அதுதான், ஆபத்தோடு விளையாடுவதைப் போன்றது. உண்மையில் அது தேவையற்றது.

இன்றைய நவீன மருத்துவத்தில், ஏறக்குறைய எல்லா தொற்று நோய்க்கிருமித் தாக்குதலுக்கும் சிகிச்சை உண்டு, எளிதில் குணமாக்கமுடியும். நீங்கள் ஏதாவது ஒரு மருந்தைப் பயன்படுத்தும்போது, அது உங்கள் உடலின் இரசாயனத்தை ஒரு அன்னியப்பொருள் கொண்டு மாற்றுவதற்கான ஒரு முயற்சி. இதனால், உங்கள் உடல் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைகிறது. வெளியிலிருந்து அளிக்கப்படும் மருந்தானது உங்களை குணப்படுத்தினாலும், மற்றொரு கோணத்தில், அது உடலுக்கு ஒருவித பாதிப்பை உண்டாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு மருந்தின் காரணமாக, பக்கவிளைவுகள் வெளிப்படுகின்றன. ஆனால் எந்தவிதமான மருந்தை உட்கொண்டாலும், உடலிற்குள் எப்போதும் சில மாறுபாடுகள் நிகழ்கின்றன. நீங்கள் யோகப்பயிற்சிகள் செய்பவர் என்றால், மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் உடல் வேறுவிதமான பாதிப்பிற்குள்ளாவதை நீங்கள் தெளிவாகக் காணமுடியும். எப்போதெல்லாம் உள் இரசாயனத்தை, வெளிப்புற இரசாயனங்களால் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறீர்களோ அப்போதெல்லாம் அங்கே வேறொரு பாதிப்பு ஏற்படும். ஆனாலும் உங்கள் நோய் குணமாவதற்காக இந்த பாதிப்பை நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் இந்த பாதிப்பு தரும் பிரச்சனையைவிட நோய் தரும் பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், நாள்பட்ட நோய்கள் எந்தக் கிருமித்தாக்குதல் காரணமாகவும் உங்களுக்கு வருவதில்லை.

நாள்பட்ட நோய்கள் என்னும்போது, அந்த நோய் ஒரு மேலோட்டமான வெளிப்பாடுதான். ஆனால் எப்படி கடலில் மிதக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே உங்கள் வெளிப் பார்வைக்குப் புலப்படுகிறதோ, அதுபோல நோயின் அறிகுறிகள் மட்டுமே உங்கள் பார்வைக்குப் புலப்படும். அந்த அறிகுறிகள் உடலில் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் உண்டாகியிருக்கக்கூடிய பிரச்சனையின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே. வேறுவிதமாகக் கூறுவதென்றால், அறிகுறிகள் என்பவை எதையோ சுட்டிக்காட்டும் எச்சரிக்கை விளக்குகள்தான்.

ஹீலிங் செய்ய முயற்சிப்பவர்கள் எப்போதும் நோய்த்தன்மையின் அறிகுறிகளை மட்டும்தான் அகற்ற முனைகின்றனர். ஏனென்றால் நோய் என்று அவர்கள் கருதுவது அந்த வெளிப்புற அறிகுறிகளைத்தான். நீங்கள் நோயைச் சுட்டிக்காட்டும் அறிகுறியை மட்டும் நீக்கினாலும் நோயின் மூலக் காரணமான வேர் இருக்கத்தான் செய்கிறது. உடலுக்குள் வேரூன்றியிருக்கும் நோயை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, உடலின் மேல்மட்டத்தில் அறிகுறி வெளிப்பட்டு நோயைச் சுட்டிக்காட்டுகிறது. நோயின் வேரைக் கவனித்து, குணப்படுத்துவதற்கு பதில், அறிகுறியை மட்டும் அழித்துவிட்டால், நோயின் வேர் இன்னமும் தீவிரமாகி உங்களது உடலில் வேறுவிதத்தில் விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆஸ்த்துமாவாக மட்டும் இருந்த ஒன்று, பிறகு பெரிய விபத்தாகவோ அல்லது உங்கள் வாழ்வை நாசம் செய்யக்கூடிய வேறொன்றாகவோ உருவெடுக்கக்கூடும்.

நாள்பட்ட நோயின் வேரை அகற்றுவதும், பிறகு முழுவதுமாக கரைப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. அந்த வேரைக் கண்டறிந்து அதில் சிலபணிகள் செய்து கரைக்கவேண்டும். அதற்கு மாறாக, மேம்போக்காக ஹீலிங் செய்ய முயற்சிப்பது மிகவும் குழந்தைத்தனமானது. ஹீலிங் செய்பவர்கள் வாழ்வின் அனைத்து ஆழமான தன்மைகளையும் புரிந்தவர்களாகவும், உணர்ந்தவர்களாகவும் இருப்பதில்லை. அவர்கள் வாழ்வை உடலியல் பரிமாணத்தில் மட்டுமே பார்த்திருக்கின்றனர். ஆகவே, அந்த நேரத்தில், உடல்ரீதியான வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதே, தாம் செய்யக்கூடிய மாபெரும் செயலாக அவர்கள் நம்புகின்றனர்.

ஹீலிங் செய்பவர்கள் வாழ்வின் அனைத்து ஆழமான தன்மைகளையும் புரிந்தவர்களாகவும், உணர்ந்தவர்களாகவும் இருப்பதில்லை. அவர்கள் வாழ்வை உடலியல் பரிமாணத்தில் மட்டுமே பார்த்திருக்கின்றனர்.

உங்கள் நோய் ஏற்படுத்தும் தீவிரமான வலியால், நீங்கள் அந்த வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறவே விரும்புகிறீர்கள். அந்த நிவாரணம் எப்படிக் கிடைத்தாலும் சரி. நோயின் காரணம், அது ஏன், எப்படி உருவானது என்பது குறித்த விளக்கங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. இது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், பொருள்தன்மையான உடலைவிட மேலும் சிறிது ஆழமாக நீங்கள் வாழ்க்கையை உணரத் தொடங்கினால், தற்காலிகமாக மட்டுமல்ல, முற்றிலும் நோயிலிருந்து விடுபடுவது எப்படி என்றும் ஆராய முற்படுவீர்கள்.

உங்களுடைய சக்திகளை மறுசீரமைப்பு செய்வதில் தேவையான கவனம் செலுத்தி செயல்பட்டால் நோய்தானாக விலகிவிடும். ஆனால் அப்போது நீங்கள் சிலவித அனுபவங்களைப் பெற நேரலாம். உடனடி நிவாரணம் மட்டும் பெறுவது உங்களை ஒருவிதத்தில் விடுவித்தாலும், வேறு ஏதாவது வழியில் உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். போலித்தனமில்லாமல், உண்மையாகவே ஆன்மீகப்பாதையில் நடப்பவர் எவரும் ஹீலிங் போன்றவைகளைச் செய்வதில்லை. ஏனென்றால் அது நீங்கள் துன்பத்தில் சிக்கிப்போவதற்கான நிச்சயமான வழியாக உள்ளது. இன்றைக்கு உலகெங்கும் பிரபலமாக இருக்கின்ற இத்தகைய விஷயங்கள் எப்படி ஆரம்பித்தன என்றால், தங்களது ஆன்மீகப்பாதையில் சிறிதளவு ஆற்றல் கைவரப் பெற்றதும், பாதியில் ஆன்மீகத்தைக் கைவிட்டு அதை வியாபாரம் செய்ய வந்த மனிதர்கள் சிலரே இதற்குக் காரணம். அவர்கள் அந்த ஆற்றலைப் பயன்படுத்தி, தங்களை நன்றாக விற்பனை செய்துகொள்ள விரும்புகின்றனர்.

ஈஷாவில், உங்களுடைய எல்லா வரையறைகளையும் கடந்து செல்ல உதவும், விடுதலைக்கான ஆன்மீகப்பயிற்சிகளை நாங்கள் உங்களுக்குக் கற்றுத் தருகிறோம். இந்த விதமான பயிற்சிகள் செய்வதால் இத்தகைய சக்திகளை ஒருவர் எளிதாகப் பெறமுடியும். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட ஆற்றல்கள் எதுவும் பெறாதபடி, நாங்கள் அதிகமான கவனம் எடுத்துக் கொள்கிறோம். உயிரோட்டமுள்ள ஏதோ ஒரு ஆன்மீகப்பாதையில் நீங்கள் இருந்தால், அந்தப் பாதையை முன்னெடுத்துச் செல்பவர் யாராக இருப்பினும், அந்த விதமான சக்திகளை நீங்கள் பெறக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார். இயல்பாக, மிகவும் சாதாரணமாக இருப்பதையே நாம் விரும்புகிறோம். மற்றவர்களால் செய்ய முடியாத ஏதோ ஒன்றைச் செய்து சிறப்புத் தகுதி பெற விரும்பும் நோய் நமக்கு வேண்டாம், அது தேவையில்லை.

ஹீலிங் செய்பவர்கள் கடவுளின் பாத்திரத்தை ஏற்க முயற்சிப்பதன் மூலம், மற்ற மனிதர்களால் செய்ய இயலாத ஏதோ ஒன்றை செய்ய விரும்புகிறார்கள். இது பலமாக சிக்கிப்போவதற்கான வழியாக இருக்கும். நீங்கள் ஆன்மீகவழியில் செல்ல விரும்பும்போது, இத்தகைய குறுக்கீடுகள் கண்கட்டு வித்தை போன்றவை. நீங்கள் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், பாதையின் இருமருங்கிலும் பலவிதமான கடைகள் விரிக்கப்பட்டிருக்கும். இந்தப் பொருட்களிலேயே நாட்டம் கொண்டு நின்றுவிட்டால் நீங்கள் சன்னிதானத்தைச் சென்றடையவே மாட்டீர்கள். தாமதமாக நீங்கள் அங்கே போகும்போது, கதவுகள் மூடப்பட்டிருக்கும்.