கல்வியை முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே குழப்பமான கேள்வி "நான் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது?" என்பதுதான். சத்குரு இதைப்பற்றி என்ன சொல்கிறார்...

சத்குரு:

ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் உங்களுக்குச் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வந்துவிடுகிறது. எந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், மற்றொன்று அதைவிடச் சிறப்பாகத் தோன்றுகிறது. அதற்கு மாற முடியுமா? என்று மனம் அலைபாய்கிறது.

சந்தோஷமாக வேலை செய்வதாக உணர்ந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும்.

ஆசை ஒன்றிலிருந்து மற்றதுக்கு மாறிக்கொண்டே இருப்பதால் அதன் இலக்கு மசமசப்பாகிவிடுகிறது.

"இசையில்தான் என் ஆர்வம். ஆனால், வயிற்றுப்பாட்டுக்கு ஏதாவது வேலைக்குப் போயாக வேண்டியிருக்கிறதே!" என்று என்னிடம் ஓர் இளைஞன் கேட்டான். அவன் எந்த மாதிரி வேலைக்குப் போக வேண்டும்? இசைக் கருவிகளை விற்பனை செய்யும் கடையில் தரையைக் கூட்டுபவனாகக்கூட வேலைக்குச் சேரத் தயாராக இருக்க வேண்டும். இசைக்கருவிகளைத் துடைத்து சுத்தம் செய்தாலும் நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.

இப்படி முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இந்த வேலைகளில் ஈடுபட்டால், அவன் எப்படி மலர வேண்டுமோ, தானாக அப்படி மலர்ந்து விடுவான்.

எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பதற்கான புத்திசாலித்தனம் உங்களிடம் இல்லையா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒன்று செய்யுங்கள். இப்போது எந்தச் செயலில் இருந்தாலும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக என்றால் இதயத்தையும், உயிரையும் அதற்காக ஒப்படைக்கத் தயாராயிருக்கும் முழுமை.

செய்வதை நூறு சதவிகித ஈடுபாட்டுடன் செய்தால், உங்கள் உள்ளுணர்வு உங்களைச் சரியான பாதைக்குத் தானாக அழைத்துச் செல்லும்.

சந்தோஷமாக வேலை செய்வதாக உணர்ந்தால் மட்டுமே உங்களால் முழுமையாக செயலாற்ற முடியும். கட்டாயத்துக்காக வேலை செய்வதாக நினைத்து விருப்பம் இல்லாமல் செய்தீர்கள் என்றால், ரத்தக் கொதிப்பும், அல்சரும் மற்ற மனநோய்களும் கூப்பிடாமலே வந்து உள்ளே உட்கார்ந்து கொள்ளும்.

சங்கரன்பிள்ளை ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். வசதியான இருக்கை கிடைத்து உட்கார்ந்தார். அதன் பின்னும் தன் தலை மீதிருந்த பயண மூட்டையை அவர் இறக்கிக் கீழே வைக்கவில்லை.

டிக்கெட் பரிசோதகர் வந்தார். உணவு விற்பவர் வந்தார். மூட்டையை வைத்துக் கொண்டு சங்கரன்பிள்ளையால் எந்த இயல்பான வேலையையும் செய்ய முடியவில்லை.

சக பயணிகளில் ஒருவர் கேட்டார்... "ஐயா, பெரிய மூட்டையாக இருப்பதால், கீழே இறக்கி வைக்க உதவி தேவைப்படுகிறதா?"

"அதெல்லாம் இல்லை!"

துக்கப்படுவதால் மன பாரம் குறையப் போவதில்லை.

"ஓ, மூட்டையில் விலை உயர்ந்த பொருள் ஏதாவது வைத்திருப்பீர்கள். திருடர்களைப் பற்றிய பயம் இருந்தால், மூட்டையைக் கீழே வைத்து அதன் மீது நீங்கள் உட்காரலாமே?"

"இல்லையில்லை. எல்லாம் பழைய துணிகள்தான்!"

"அப்புறம் அதை எதற்காகத் தலை மீது சுமக்கிறீர்கள்?"

"என் பாரத்தை அநாவசியமாக இந்த ரயில் மீது சுமத்தக்கூடாது என்று பார்க்கிறேன்" என்றார் சங்கரன்பிள்ளை.

சங்கரன் பிள்ளையைப்போல் சுமைகளை இறக்கி வைக்கத் தெரியாதவர்களால் எதை ஒழுங்காகச் செய்ய முடியும்? குடும்பத்தையே தோள் மீது சுமப்பதாக நினைத்து நினைத்து துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்கு எந்த ஆசை நிறைவேறும்?

தயவுசெய்து உங்கள் மன பாரங்களை இறக்கி வையுங்கள். செய்வதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லிவிட்டார்கள்.

உலகமே முடிவுக்கு வந்துவிட்டதுபோல் அத்தனை பெரியவர்களும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வீர்கள். காத்திருக்கும் நான்கு மணி நேரத்தையும் முள் மேல் உட்கார்ந்ததுபோல் ரயில்வேயை விடாமல் சபித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், பயணத்துக்காகக் காத்திருக்கும் குழந்தைகளைக் கவனியுங்கள். கைக்குக் கிடைத்த சிறு பொருள்களை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தில் ஜாலியாக விளையாடியபடி எந்தத் துக்கமும் இல்லாமல் இருப்பார்கள்.

தேவையில்லாமல் அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதில்லை. கிடைத்த தருணங்களைச் சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். அதிகச் சிரமம் இல்லாமல், தங்கள் வாழ்க்கையைப் பூரணமாக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் நீங்கள்? வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள். ஆனாலும் சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரியாமல் தோற்றுவிடுகிறீர்களே?

மனதைத் துக்கமும், படபடப்பும் அழுத்தாமல் பொறுப்புடன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

இந்த ரயில் இல்லை என்றால், பஸ் பிடிக்கலாம், டாக்ஸி பிடிக்கலாம். வேறு வாகனங்கள் கிடைக்குமா என்று பார்க்கலாம். எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்றால் காத்திருக்கக் கிடைத்த நேரத்தை ஆனந்தமாக இருந்து செலவு செய்யலாம்.

துக்கப்படுவதால் மன பாரம் குறையப் போவதில்லை. சந்தோஷமான மனிதர்களால்தான் எந்த வேலையையும் சிரமமில்லாமல் விளையாட்டாகச் செய்ய முடியும்.