இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

06:15

பிரம்மச்சாரிகளின் மந்திர உச்சாடனம்... ஆங்காங்கே தென்படும் மேகங்கள்... மலையின் பின்னால் மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் கதிர்களால் தங்கமாய் மின்னும் வானம்... இவற்றுடன் குருவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள்...

06:26

மேகங்கள் சுமந்த மலைக்காற்று வருட, மென்மையாக நடையிட்டு சத்குரு வந்து அமர, ஏக்கத்துடன் தரிசிப்போர் அனைவரையும் அரவணைக்கிறது அவர் அருள்.

06:45

கேள்வியாளர்: நான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். லெபனான் நாடு முழுவதையும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமாக மாற்ற எத்தனை லிங்கபைரவி யந்திரங்கள் தேவைப்படும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: ஒவ்வொரு சமூகமும் பலவிதமான நம்பிக்கைகளில் சிக்கியிருக்கிறது. ஆன்மீக வளர்ச்சிக்கு மிகபெரியத் தடையாக இருப்பது இந்த நம்பிக்கைகளே. அனைத்து உயிரினங்களிலும், மனித இனம் மிகச்சமீபத்திய உருவாக்கம் என்பதால், பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலான மனிதர்களின் மனம் இன்னும் நுட்பமானதாக வளரவில்லை. அதனால் எவ்வளவு எளிமையான நம்பிக்கை முறையோ, அவ்வளவு அதிகமாக மக்கள் அதை பின்பற்றுவார்கள்.

ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவை நம்பிக்கையல்ல, விழிப்புணர்வு. இங்கு என்னை கவனிக்கும் அதே கவனத்துடன் ஒரு புல்லையும், கல்லையும், அனைவரையும் கவனியுங்கள். விழிப்புணர்வு வளரும்.

லெபனான் நாட்டு மக்கள் சில அடிப்படைவாத நம்பிக்கைகளுடன் இருக்கிறார்கள். ஆனால் போர் மட்டுமே செய்துகொண்டிருப்பதால் பிரயோஜனமில்லை என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஈராக், சிரியா, போன்ற நாடுகளில், இப்போது இடத்திற்காக எவரும் போர் செய்வதில்லை, சொர்க்கத்திற்குச் செல்ல போர் செய்கிறார்கள். இது லெபனான் நாட்டையும் பாதிக்காமல் இருக்காது. பிறகு பாகிஸ்தான், பிறகு நாம் இதை எதிர்த்து இந்தியாவில் ஏதாவது செய்வோம்.

நீங்கள் லெபனான் நாட்டு மக்களை இங்கே ஈஷா யோக மையம் கொண்டுவர வேண்டும். அவர்கள் இங்கு வந்துபோகவேண்டும். அல் ஹலாஜ் இங்கு வந்துசென்று ஆன்மீகத்தை சுஃபி மரபாக மத்தியகிழக்கு நாடுகளுக்குக் கொண்டுசென்றார். அதுபோல அங்கிருந்து பலர் இவ்விடத்திற்கு வந்துபோக வேண்டும்.

7:20

கேள்வியாளர்: பக்தி நிலையில் கரைந்திருப்பது பற்றி பேசியிருக்கிறீர்கள். தெளிவான தொலைநோக்குடன், குறிக்கோளுடன், செயல்படுவது பற்றியும் பேசியிருக்கிறீர்கள். இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமா?

சத்குரு: பக்தி இருந்தால் எல்லாவற்றையும் சிறப்பாக உள்வாங்குவீர்கள். பக்தி என்றால் நாம் எதையும் தவறவிட விரும்பவில்லை. பக்திநிலையில், செயல் செய்வதும், செய்யாமலிருப்பதும், அவரவர் தேர்வு செய்துகொள்வதே.

செயல் இடம் மற்றும் கால வரையறைக்குட்பட்டது. செயல் செய்யாமலிருப்போர் அதனையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்திச்செல்வர்.

பூமியில் காலடித்தடம் பதிக்க விரும்புவோர் செயல் செய்வர். மேலே பறக்க விரும்புவோர் செயல் செய்வதில்லை, காலடித்தடங்களும் விட்டுச்செல்வதில்லை. செயல்செய்தால் மக்கள் புரிந்துகொள்வார்கள். மேலே பறப்பவர்களை, பெரும்பாலானவர்கள் கவனிப்பது கூட இல்லை. பறப்போர் அதை பொருட்படுத்துவதுமில்லை.

பக்திநிலையில் இருந்தால், குறிக்கோளை சூழ்நிலைக்கும் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கும் ஏற்றவாறு நிர்ணயிப்பீர்கள். அதுவே உண்மையான தொலைநோக்கும் கூட. முதலில் பக்தி, தெளிவான பார்வையும் செயலும் அதைப் பின்தொடரும்.

7:40
கேள்வியாளர்: எனக்கு 15 வயதில் ஏற்பட்ட ஓர் சம்பவத்தால், நான் பல வருடங்களாக மிகுந்த உடல்வலியில் இருந்தேன். ஆறே மாதங்கள் ஈஷாவின் ஹடயோகப் பயிற்சியை செய்ததால், அது காணாமல் போனது. வலியும் ஹடயோகாவும் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?

சத்குரு: உடல் முழுவதிலும் ஞாபகங்கள், அல்லது பழைய பதிவுகள் பொதிந்துள்ளது. மனதில் ஏற்படும் அத்தனை விஷயங்களும், உடலில் அவற்றின் சுவடுகளை விட்டுச்செல்லும். குறிப்பாக பெரும் ஆபத்தான, பதற்றமான சூழ்நிலைகளில் நிகழ்பவை உடலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடலை நாம் விழிப்புணர்வாகக் கையாள்வது மூலமாக, அப்பதிவுகளையும், அவற்றின் மூலம் ஏற்படும் வலியையும், இன்னும் பல விஷயங்களையும், மாற்றியமைக்க முடியும். இதைத்தான் முறையான ஹடயோகா செய்கிறது.

08:12

பசியை மறந்து பசியுடன் அமர்ந்திருந்த அனைவரையும், அதற்குமேல் காத்திருக்க வைக்க விருப்பமில்லாமல், அனைவரையும் வணங்கி சத்குரு விடைபெற்றார்.