எங்கிருந்தாலும் தரிசனம்
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…
Subscribe
மென்மையான வானத்தின் கீழே பனிபோர்த்திய புல்வெளிகளின் நடுவே இன்றைய இதமான மாலை சத்குருவை இனிதே வரவேற்றது. "எந்நேரமும் உன் சந்நிதியிலே நான் இருக்க வேணும் அய்யா..." என்னும் பக்தரின் பக்திக் குரலோடு கதகதத்தது இன்றைய மாலை.
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா முதல் ‘இந்தியாவில் வலது கை பழக்கம் ஏன்?’ என இன்றைய தரிசனத்தில், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம், மனித நல்வாழ்வு என அனைத்து அம்சங்களுமே நிறைவாக இடம்பெற்றது.
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது என மண்டேலாவின் மரணத்தை குறிப்பிட்ட சத்குரு தொடர்ந்து தியான அன்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
"நெல்சன் மண்டேலாவின் மரணம், ஒரு சகாப்தத்தின் முடிவு. அவருடைய வாழ்க்கை வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டு இவரைப் போன்ற வெகு சில மனிதர்களை மட்டுமே கண்டிருக்கிறது. ஏன் இந்தியாவின் சுதந்திர போராட்டமும் தென் ஆப்பிரிக்காவில் இருந்தே தூண்டுதல் பெற்றது. துரதிர்ஷ்டவசமாக, நெல்சன் மண்டேலா போன்ற மனிதர்கள் தாழ்மைபடுத்தப்படுவது, அநீதி போன்ற சூழ்நிலைகளில் இருந்து மட்டுமே தோன்றுகிறார்கள். நாம் இதுபோன்ற மனிதர்களை சந்தோஷத்திலிருந்தும் ஆனந்தத்திலிருந்தும் உருவாக்க வேண்டும், இதுவே யோகா.
உங்களை உங்கள் உள்சூழ்நிலை உந்தித் தள்ளி நீங்கள் செயல் செய்தால் நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை வெளிசூழ்நிலை தூண்டினால் நீங்கள் அடிமை என்று அர்த்தம்" என்று சொல்லி ஆன்மீகத்திற்கும் பிற சூழ்நிலைகளினால் ஊக்கமடைந்து செயல்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை வெகு நேர்த்தியாக எடுத்துக் காட்டினார் சத்குரு.
இந்தியாவில் இடக்கை பழக்கம் தவறானதாக கருதப்படுகிறதே என ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்விக்கு...
"வலக்கை - தீவிரமான செயல் செய்வதற்கு; இடக்கை - மென்மையான செயல் செய்வதற்கு. யோக மரபில் இடது கையை நாம் கடினமான செயல்கள் செய்யப் பயன்படுத்துவதில்லை. சில ஆராய்ச்சிகள், வலக்கையை பயன்படுத்துபவரை விட இடக்கை பயன்படுத்துபவருக்கு 7 வருடம் ஆயுள் குறைவு எனக் கூறுகின்றன. யோகத்திலும் இடக்கை மென்மையான செயல்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறோம். இடக்கை பழக்கத்தினால் உங்கள் வலது மூளை செயல்படும் என்று நீங்கள் நம்புவதில் பெருத்த உண்மை கிடையாது. சக்தி ரீதியில் நீங்கள் இடப்பக்கத்தைச் சேர்ந்தவர் என்றால், உங்களுக்குள் உள்ளுணர்வு சார்ந்த பரிமாணம் திறந்திருக்கிறது என்று அர்த்தம். இதனால்தான் லிங்கபைரவியில் அத்தனையும் இடப்பக்கம் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது.
பெண் தன்மையும் ஆண் தன்மையும் வெவ்வேறு விதங்களில் கையாளப்பட வேண்டும். இரண்டும் ஒன்றல்ல, இதனை பாகுபாடாக பார்க்கக் கூடாது, இவை வித்தியாசங்கள். இந்த வித்தியாசத்தை பார்க்க தெரியாதவர் வாழ்வோடு ஒத்திசைவோடு வாழ மாட்டார், அவருக்கு வாழ்க்கை தெரியாது," என்று கூறி இந்தியாவில் ஒரு வழக்கத்தைக் கூட எத்தனை அறிவியில் பூர்வமாக அணுகுகிறோம் என்பதை பாங்குடன் எடுத்துக் கூறினார்.
பின்னிப் பிணைந்துள்ள நாகங்களின் தாத்பரியத்தை பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப...
நாகங்கள் எப்படி மனித உயிரோடு நெருக்கமாக உள்ளன என்பதை விளக்கிய சத்குரு. அவற்றின் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பேசினார்.
"ஜனவரியிலிருந்து கிட்டதட்ட மஹாசிவராத்திரி வரை நாகங்களின் இனப்பெருக்கக் காலம் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் காட்டிற்குள் சென்றால், நாகங்கள் பின்னிப் பிணைந்துக் கிடப்பதை நாம் பார்க்கலாம். இதனையே நம் கோவில்களில் வளமையின் அறிகுறியாக நாம் பதித்து வைத்துள்ளோம். கோவில்களில் இப்படி பின்னிப் பிணைந்துள்ள உயிருள்ள நாகங்களை வழிபடுவதே சிறப்பு, ஆனால் நம் பயத்தின் காரணமாக அவற்றின் சிலைகளை உருவாக்கி அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தியை செலுத்தி அதனை வழிபடுகிறோம். இது ஒருவரின் நல்வாழ்விற்கு பெருமளவில் துணை நிற்கும். ஏன் உலக மருத்துவக் கழகமும் பின்னிப் பிணைந்துள்ள நாகங்களையே தன் அறிகுறியாக வைத்துள்ளன, இது தற்செயலாக நிகழ்ந்ததல்ல," என்று நாக வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
ஈஷா ஆரோக்யாவில் யோகா சொல்லிக் கொடுப்பீர்களா என ஒருவர் கேட்க...
ஆயுர்வேதா, சித்தா, அலோபதி, யுனானி போன்ற பல மருத்துவ முறைகளின் கலவை, ஈஷா ஆரோக்யா. இங்கு நாம் குறிப்பிட்ட எந்த முறையையும் தனியாக பயன்படுத்துவதில்லை. நம் நோக்கம், ஆரோக்கியம். ஆனால் ஆரோக்கியத்திற்காக யோகாவை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நாம் ஈஷா ஆரோக்யாவில் உப யோக முறைகளை சொல்லிக் கொடுக்கலாம். உப யோகா என்றால் பயனுள்ள ஒன்று என்று அர்த்தம் அல்லது யோகாவின் கிளை என்று அர்த்தம். இதனைச் செய்வதன் மூலமே பல ஆரோக்கிய பலன்களை ஒருவர் பெற முடியும். யோகாவை நாம் ஆரோக்கியம் என்னும் கண்ணோட்டத்துடன் அணுக விரும்பவில்லை," என்றவர். ஈஷாவில் யோகத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் அது கையாளப்படும் ஒழுங்கையும் அத்தனை பேருக்கும் உணர்த்தினார்.
பயத்தை முறிப்பது எப்படி? என்ற கேள்வி எழும்ப...
“பயம்! எப்போதும் நாளையை பற்றியது தான். தேவையின்றி மனிதன் உருவாக்கிடும் உணர்வு பயம். தியானலிங்கத்தின் அருள் மடியில், லிங்கபைரவி தேவியின் சக்தி வீச்சில் சரணடைய, பயம் பறந்து போகும்! யோகப் பயிற்சி பயத்தை இல்லாமல் செய்திடும்! அருள்மடி ‘பயம்’ என்ற இருள் போக்கிடும் கருவி" என்று உணர வைத்தது, சத்குருவின் இன்றைய தரிசனம்.
மேலும் எதிர்மறை சக்திகளிலிருந்து காத்துக் கொள்வது எப்படி? உடல் மற்றும் மனம் சார்ந்த நினைவுகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? போன்ற கேள்விகள் எழும்ப 6.20 திற்கு துவங்கிய தரிசன நேரம் 8.20 மணி வரை நீடித்து அருள் மழை பொழிந்தது.
மற்றுமொரு தரிசன நேரத்தில் இணைவோம், தொடர்பில் இருங்கள். வணக்கம்!