தசரத சக்கரவர்த்தியும் வரலாற்று புனைவுகளும்... சத்குருவின் பார்வை
இராமாயணத்தில் முக்கிய கதாப்பாத்திரமான தசரத சக்கரவர்த்தி பல மனைவியரை கொண்டிருந்ததாக ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறது! இது குறித்த ஒரு கேள்வியை ஒருவர் எழுப்ப, சத்குருவின் பார்வையில் பதில் இதோ...
சத்குரு:
தசரதன் போன்ற அக்கால மன்னர்கள் ஏராளமான பெண்களை மணந்து அந்தப்புரத்தில் அடைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மனிதன் பல பெண்களை மணக்க முயன்றால், பிடித்துச் சிறையில் தள்ளுகிறது அரசு. ஏன் இந்த கால முரண்பாடு?
அரசர்கள் போருக்குப் போகிற போதெல்லாம் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்து போனார்கள். அவர்கள் போருக்குப் போவதற்கு முன்பு அரசர்கள், அந்த வீரர்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அவர்களுடைய குடும்பங்களைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்கள். அதற்காக இறந்துபோன வீரர்களின் மனைவிகளை அரசர் மணந்து கொண்டதாகவோ, உறவு கொண்டதாகவோ அர்த்தமில்லை. மாறாக, ராணிக்குரிய வாழ்க்கையை அவர்களுக்கு அரசர்கள் கொடுத்தார்கள். இதைத்தான் அரசர்கள் அந்தப் பெண்ணை மணந்து கொண்டதாக, காலப்போக்கில் தவறாகக் கருதப்பட்டுவிட்டது.
தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்கின்றனர். அத்தனை பேருக்கும் உணவு கொடுத்து, உடை கொடுத்து, தங்குமிடமும் தந்ததாகத்தான் சில நூறு வருடங்களுக்கு முன்பு வரை நம்பப்பட்டது. இந்தக் காலத்தில் ஒரு மனைவிக்கு மேல் மணந்து கொண்டால் கைது செய்கிறார்களே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் பெயர் வேறு ஜெயராமன் என்று எழுதியிருக்கிறீர்கள். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று வைத்துக் கொண்டால் கூட ராமனுக்கு ஒரேயொரு மனைவிதான் என்பதை ஜெயராமன் மறந்துவிடக் கூடாது. ஜெயராமனுக்கு ஒரு மனைவி போதும்.
Subscribe