குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்! பகுதி 3

யோகிகளில் சிலரை பாலயோகி என்று குறிப்பிடுவார்கள். எதனால் இந்தப் பெயர் காரணம்? அவர்களின் வாழ்க்கைமுறை எப்படிப்பட்டது? இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாலயோகிகள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே நீண்ட காலம் வாழ்ந்ததில்லை. நீங்கள் பால யோகிகளைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? குழந்தைப் பருவ யோகிகள்? அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. எப்படியோ பதினைந்து வயதை அவர்கள் தாண்டிவிட்டால், பிறகு எப்படியும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று வயதில் அவர்கள் கிளம்பி விடுவார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னும் சற்று அதிக வயதில் - அதாவது பத்து முதல் பதிமூன்று வயதிற்குள் ஞானம் பிறக்குமானால், அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்பத்தி ஒன்றில் இருந்து முப்பத்தி நான்கிற்குள் மறைந்து விடுவார்கள்.

உடல் தன்னை ஒரு குறிப்பிட்ட வகையில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு முன், விழிப்புற்று விட்டால், அந்த உடல் ஒரு நிலைக்குமேல் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியாது.

விவேகானந்தரை எடுத்துக் கொண்டாலும் சங்கராச்சாரியாரை எடுத்துக் கொண்டாலும், இவர்களைப் போன்று இந்தியாவில் முப்பதில் இருந்து முப்பத்தி நான்கு வயதிற்குள் மறைந்த பல ஞானிகள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் இவர்கள் எல்லாமே அந்த இளம் வயதில் ஞானமடைந்தவர்கள். அவர்கள் மிகத் தீவிரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள், செயலில் தங்களை முற்றிலுமாய் எரித்துக் கரைத்து விட்டு மறைந்து விட்டார்கள். உடல் தன்னை ஒரு குறிப்பிட்ட வகையில் நிலைப்படுத்திக் கொள்வதற்கு முன், விழிப்புற்று விட்டால், அந்த உடல் ஒரு நிலைக்குமேல் தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியாது. இதை முழுப்பெறாத வாழ்க்கை என்று கூற முடியாது. இது மிக மிக முழுமையான வாழ்க்கை. அவர்கள் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் அவர்கள் சாதித்தவற்றை, பலர் பத்து மடங்கு காலம் வாழ்ந்தாலும் - உடல் உழைப்பு உட்பட - எதையும் சாதிக்க முடியாது. எடுத்துக் காட்டாக ஆதிசங்கரர் முப்பத்திரண்டு வயதுக்குள் சாதித்தவை நம்பமுடியாதவை. பல மனிதர்கள் மூன்று அல்லது நான்கு ஆயுட்காலத்தில் செய்யமுடியாத எண்ணற்ற செயல்களை, ஆதி சங்கரர் முப்பத்திரண்டு வயதுக்குள் செய்து முடித்தார். இதுவே உண்மையான விடைபெறுதல். வாழவேண்டும் என்ற விருப்பத்தை உடல் விட்டுவிட்டதால், அது வெளியேறிவிட்டது.

குழந்தைகள் ஆன்மீக உணர்வு மிக்கவர்கள்தானா? நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், குழந்தைகளைக் கண்களை மூடிக்கொண்டு தியானம் போன்றவற்றைச் செய்யுமாறு சொல்லக்கூடாது என்று. இதற்கான காரணம் இதுதான். சிறு வயதினராய் இருக்கும்போது அவர்களுக்கு சில அனுபவங்களின் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தால், அற்புதமானவர்களாக மாறுவார்கள். ஆனால் அவர்களை மிக விரைவில் நாம் இழக்க நேரிடலாம்.

வியாசரின் வாழ்க்கை...

கிருஷ்ண த்வைபாயனா என்று ஒரு முனிவர் இருந்தார். பிற்காலத்தில் அவர் வியாச முனிவர் என்று அழைக்கப்பட்டார். அவர் பராஷரர் என்னும் தலைசிறந்த முனிவருக்குப் பிறந்தவர். பராஷரர் என்னும் முனிவர் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆசிரமங்களைத் தோற்றுவித்தார். ஏனென்றால், தர்மம், மற்றும் ஓரளவு ஆன்மீகத் தேடல் நாடெங்கும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நாட்களில் இந்த உபகண்டத்தில் சிறிய ராஜ்யங்கள் நிறைய இருந்தன. அவர் பல அரசர்களை ஆன்மிக வழிக்குக் கொண்டுவர முயன்றார். அதன்மூலம் அரசியல் மற்றும் நிர்வாகம் ஆகியவை நன்றாக நடைபெற்று அதனால் மக்கள் பலன் அடைவார்கள் என்று நம்பினார். அவர் அதற்காக தளராது போராடினார். அதன் காரணமாக அவருடைய எதிரிகள் அவருடைய ஆசிரமத்தைத் தாக்கியதுடன் முழுதும் எரித்துவிட்டனர். அதன் காரணமாக அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவருடைய நண்பர்களும் சீடர்களும் அவரை ஒரு படகில் ஏற்றி, மீனவர்கள் வாழும் ஒரு சிறிய தீவிற்கு அனுப்பி வைத்தனர். காலில் பலமாகக் காயம் பட்டிருந்ததால், அந்த தீவின் மீனவர் தலைவனின் இளம் வயது மகள் அவரைக் கவனித்துக்கொண்டார். மெல்ல அவர்கள் நட்பு காதலாகி அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன்தான் கிருஷ்ண த்வைபாயனா என்று அழைக்கப்பட்டவர். பராஷரர் உடல்நலம் நன்றாகத் தேறியபிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த வாரம்...

சிறுவன் த்வைபாயனா எந்த மாதிரி செயல்களை செய்தான், எவ்வாறு தன் தந்தையிடம் பாடம் பயின்றான் என்பதை அறிந்துகொள்வோம்...

'குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்!' தொடரின் பிற பதிவுகள்