கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்... எதுவாய் இருந்தால் என்ன, 'பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு' என்று நம்மை பல திசைகளில் இருந்தும் கட்டாயப் படுத்துபவர்கள் பலர். ஆசீர்வாதம் என்றால் என்ன? வயதில் பெரியவர்கள் தான் ஆசி வழங்க முடியுமா? சத்குருவின் பதில் இங்கே...

Question: சத்குரு, நீங்கள் அன்பர்களின் ருத்திராக்ஷங்களை ஆசிர்வதிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆசிர்வாதம் என்றால், உண்மையில் என்ன?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'எல்லாம் நல்லதே நடக்கட்டும்' என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி.

ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.

உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது சக்தி.

ஆனால் நீங்கள் எங்கேனும் செல்ல நினைத்தால் தான் உங்களுக்கு எரிபொருள் தேவை. பயணிக்க விருப்பம் இல்லையெனில் எரிபொருள் தேவையில்லையே! பயணிக்க விருப்பம் இல்லாதவர்கள் இருக்கிறார்களா, என்ன? ஆம். 'பயணம்' என்றால், கார் நகர வேண்டும். கார் நகர்ந்தால், விபத்து நிகழ வாய்ப்பிருக்கிறதே! அது எப்போதுமே ஆபத்தானது. அப்படிப் பார்த்தால் பயணிக்காமல், நிற்கும் காரிலேயே வாழ்வது பாதுகாப்பானது தானே?

பயணம் செய்யவில்லை என்றால் மாற்றமே இருக்காது என்றல்ல. உங்களைச் சுற்றி, காலை இரவாகும். இரவு பகலாகும். மழைக்காலம் மாறி குளிர்காலம் வரும், குளிர்காலம் மாறி கோடை வரும், பின் வசந்தகாலம், இலையுதிர்காலம் என மாறிக் கொண்டே இருக்கும். சுற்றம் மாறுவதால், நீங்களும் எங்கோ பயணிப்பதாய் தோன்றலாம். அந்த எண்ணம் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் உண்மையில் நீங்கள் பயணிக்கவும் இல்லை, உங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

நிறுத்தப்பட்டுள்ள காரின் பாதுகாப்பு வேண்டாம். பயணிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தால், இப்போது உங்களுக்கு எரிபொருள் தேவைப்படும். இந்த எரிபொருள் தான் ஆசி. துரதிஷ்டவசமாக ஆசி தேடிவரும்போது பலரும் அதை ஏற்க மறுத்து விடுகிறார்கள். ஆசி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இது சென்ற குளிர்காலத்தில், அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி. மிச்சிகன் நகரில் ஒரு சிறிய பறவை பனிப்பொழிவை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தது. அதனால் பருவமாற்றத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட காலத்தில், தெற்கு நோக்கி பயணம் செய்வதை அது மறந்துவிட்டது. பின் தாமதமாக, கடுங்குளிரில் அங்கிருந்து புறப்பட்டு, வழியிலேயே விறைத்துப் போய் கீழே விழுந்துவிட்டது.

அவ்வழியே நடந்து போன ஒரு பசு சாணம் போட்டுச் சென்றது. அந்த சாணம் நேராக அந்தப்பறவை மீது விழுந்தது. சாணத்தின் கதகதப்பால் அந்த பறவை கடுங்குளிரில் இருந்து மீண்டது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தது. கீச்கீச்சென்று கத்தத் தொடங்கியது. குளிர்விட்டுப் போன மகிழ்ச்சியில் அது கத்திக்கொண்டிருந்த போது, அங்கு ஒரு பூனை வந்து சேர்ந்தது. பறவையின் சப்தத்தைக் கேட்ட பூனை சுற்றும் முற்றும் பார்த்தது. 'ஓ! சப்தம் சாணத்துக்குள் இருந்தல்லவா வருகிறது' என்று, அதற்குள் இருந்த பறவையை வெளியில் இழுத்து, அதைத் தின்றுவிட்டது.

இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மீது சாணம் எரிபவர்கள் எல்லாம் உங்கள் எதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமுமில்லை. உங்களை சாணக் குவியலிலிருந்து வெளியே எடுப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பராக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. (சிரிப்பலை).

ஆசி பலவிதங்களில் வரும். நீங்கள் விரும்பியவாறு தான் அது வரவேண்டும் என்று அவசியமில்லை. எந்த அளவிற்கு ஏமாற்றம் தருகிறதோ அந்த அளவிற்கு அது உங்களுக்கு நல்லதைத் தரும். இது ‘ஆசி’ என்று நீங்கள் நினைக்காத விதங்களில் கிடைக்கும் ஆசி, உங்களுக்குப் பல நன்மைகளையும் செய்யும்.

ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.