Question: அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரை மனதாரக் காதலித்தேன். பொய்களும் ஊழலும் நிறைந்த அரசியல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இதை முதலிலேயே அவரிடம் சொன்னேன். அரசியலில் இறங்காமல், தனியே ஒரு தொழில் துவங்கப் போவதாகத்தான் அவரும் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் அரசியலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அரசியல்வாதியுடன் என்னால் நிம்மதியாகக் குடித்தனம் செய்யமுடியாது. அதேசமயம் என் காதலை விட்டுக்கொடுத்தால், அது பெரிய உறுத்தலாகிவிடும். நான் என்ன செய்வது?

சத்குரு:

"அரசியல் என்றாலே, பொய்களும் ஊழலும் மலிந்த இடம் என்று நினைப்பது ஏன்? அப்படி நீங்கள் கருதுபவர்களிடம் தேசத்தைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, உங்களை மட்டும் புனிதராகச் சித்தரித்துக்கொள்ள முனைவது எந்த நியாயத்தில் சேர்த்தி? ஏன், தொழிலில் இல்லையா ஊழலும் பொய்களும்?

நீங்கள் மட்டும் குற்றம் அற்றவரா?

உண்மையில் பிரச்சினை அரசியலில் இல்லை. உங்கள் காதலில் இருக்கிறது. அதில் நிறைய கணக்குகளும், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நுழைந்துவிட்டன.

உலகில் பாதி ஜனத்தொகை பசியோடு இருக்கும்போது, உங்கள் வயிற்றை நிறைத்துக்கொள்வதுகூட ஒருவிதமான குற்றம்தான். உங்கள் வசதிகளுக்காகச் சுற்று சூழலை மாசுபடுத்துவதும் குற்றம்தான். சக மனிதனை மொழி, நிறம், மதம், இனம், தொழில் என்று எந்த வேறுபாடு காட்டிக் குறைவாக மதிப்பிட்டாலும், அது ஒருவகைக் குற்றம்தான்.

உண்மையில் பிரச்சினை அரசியலில் இல்லை. உங்கள் காதலில் இருக்கிறது. அதில் நிறைய கணக்குகளும், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நுழைந்துவிட்டன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ராஜூவின் காதல்...

இப்படித்தான் ராஜு என்பவன், வேற்று சாதிப்பெண் ஒருத்தியைக் காதலித்தான். இரண்டு குடும்பங்களிலும் காதலுக்கு பலத்த எதிர்ப்பு. 'இணைந்து வாழத்தான் முடியவில்லை. இணைந்து செத்துப்போவோம்' என்று தற்கொலை செய்துகொள்ள இருவரும் மலை உச்சிக்குப் போனார்கள். அங்கிருந்து குனிந்து பள்ளத்தைப் பார்த்ததும், அந்தப் பெண்ணுக்கு உடல் நடுங்கியது.

'ராஜு எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது. முதலில் நீ குதி! பின்னாலேயே நான் வருகிறேன்' என்று ராஜுவுடன் கோத்திருந்த கையை மெள்ள உருவிக்கொண்டாள்.

அப்படிப்பட்ட பெண்ணைக் காதலித்த ராஜு முட்டாளாகத்தானே இருப்பான்? 'தொம்' என்று குதித்துவிட்டான். முடிந்தது அவன் கதை.

அவள் யோசித்தாள். 'நமக்குப் பிரச்சினை என்று இருந்ததே இந்த காதலும், சாதி மாறி செய்துகொள்ளும் கல்யாணமும்தானே? ராஜுவே செத்தபிறகு, அந்தப் பிரச்சினை இனி ஏது? ஒன்றும் இல்லாததற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்?'

'ராஜு... ராஜு... ஐ லவ் யூ! ஐ லவ் யூ ஸோ மச்!' என்று பள்ளத்தாக்கைப் பார்த்துக் கத்திவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

நீங்களும் கிட்டத்தட்ட அந்தப் பெண்ணைப் போலத்தான் கையை உருவிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். இப்படி, ஆதாயக் கணக்குகளின் அடிப்படையில் உருவாகும் அன்புக்குப் பெயர் காதலா?

சொல்லுங்கள், நீங்கள் காதலித்தது ஒரு நபரையா? அவர் என்னவாக இருக்கிறார் என்ற அடையாளத்தையா?

ஒன்றைத் தவறு என்று முத்திரை குத்தும்போது, அதைச் செய்பவர் குற்ற உணர்வுடனும், அதைக் கவனிப்பவர் சந்தேகத்துடனும் போராட வேண்டி இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையிலிருந்து எது சரி, எது தப்பு என்பதை விலக்கிவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.

செல்வமோ, பதவியோ, ராஜ்ஜியமோ அடைந்தவர்கள் அனைவரின் பின்னாலும் தந்திரங்களும், ஏமாற்று வேலைகளும் நிறைந்திருக்கின்றன.

தவறு என்று நீங்கள் நினைப்பதை உங்களையும் சேர்த்து, பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் அமர்ந்திருக்கிறீர்களே, அந்த இடம் உங்களுக்கு வசதியாக இருப்பதற்காக எத்தனை உயிர்கள் அங்கிருந்து இடம் பெயர்க்கப்பட்டன? உங்களுக்குப் பூச்சிகள் சிறியனவாகத் தோன்றுவது போலவே, வேறொரு மனிதனுக்கு நீங்கள் சிறியவராக இருக்கிறீர்கள்.

நீங்கள் ஏற்கிறீர்களோ, இல்லையோ... எல்லா ஊழல்களிலும், பொய்களிலும் நீங்களும் பங்கெடுத்துக்கொண்ட ஒரு பகுதியாகத்தான் விளங்குகிறீர்கள் என்பது நிச்சயம்.

நீங்களாக ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓட ஆரம்பித்துவிட்டீர்கள். திடீரென்று, 'எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறோம், நிற்போம்' என்று நினைக்கிறீர்கள். அப்படிச் சரேலென்று பிரேக் போட்டு எல்லா விஷயங்களையும் நிறுத்தக்கூடியதல்ல வாழ்க்கை.

ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்தவகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், எது சிறப்பான வழி என்று தோன்றுகிறதோ, அந்த வழியில் போகிறார்கள்.

அரசியல் பற்றிச் சமூகத்தில் மறுபடி மறுபடி சொல்லி, உங்கள் இதயத்தில் ஆழப்பதிந்துவிட்ட விஷயங்கள் சில இருக்கலாம். உங்களைப்போல் அவருடைய மனதிலும் சில விஷயங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கலாம்.

வாழ்க்கை பற்றிய தீர்ப்பு எழுதுவதை விலக்கிக்கொள்ளுங்கள். சரி, தவறு என்பதை விலக்கிவிட்டால், சந்தேகம் இல்லை. குற்றஉணர்வு இல்லை. உங்களுக்கு நல்லது எதுவோ, அதை எடுத்துச் செல்லுங்கள். நல்லதல்ல என்று தோன்றுவதை விட்டுச் செல்லுங்கள். ஆனால் பாவம், மோசம் என்று லேபிள்களை ஒட்டிப் பார்க்காதீர்கள்.

உங்களிடம் மனிதநேயம் முழுமையாகப் பூத்திருந்தால், நல்லது கெட்டது என்பதைத் தாண்டி யோசிக்கமுடியும், செயல்பட முடியும்".