அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்... இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்...

Question: ஒருவேளை நீங்கள் ட்ரம்ப் அவர்களுக்கு ராஜகுருவாக அல்லது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தால் அவருக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்..

சத்குரு:

அரசியல், பொருளாதாரம், இராணுவம், சமூககலாச்சாரம் என பல்வேறு காரணங்களால் இன்று உலக அளவில், அமெரிக்கா, உலகை வழிநடத்தும் முதன்மையான நாடாக இருக்கிறது. அமெரிக்கர்கள், பாட்டிலில் கரியமில வாயுவை நிரப்பி குடித்தால் உலகமே அதை குடிக்கிறது. நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் எல்லோரும் அதையும் பின்பற்றுகிறார்கள். அமெரிக்கா என்ன செய்தாலும், அதை உலகமே செய்ய விரும்புகிறது. இந்த அளவுக்கு ஒரு தனிச்சிறப்பான முக்கியமான இடத்தில் இருக்கும் போது, அமெரிக்கர்கள் சரியான செயல்களை செய்வது மிகவும் அவசியமாகிறது தானே.

தன்னுடைய மிகப்பெரும் அரசியல், இராணுவ பலத்தை பயன்படுத்தி அமெரிக்கா கடந்த 20, 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஏதாவது ஒரு நாட்டின் மீது போர் நடத்தியே வந்து இருக்கிறது. தேசங்கள் அழிக்கப்பட்டு, மக்கள் உயிரிழந்து, மிஞ்சியவர்கள் வீடிழந்து, பேரழிவு நடந்துள்ளது. ஒரு தலைவராக ட்ரம்ப் இந்த நிலையை மாற்ற முடியும். ஏற்கனவே அமெரிக்க அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கும் அவரால் இது சாத்தியமே. உலகம் முழுவதையும் அமைதியை நோக்கி அழைத்துச்செல்ல இந்த மாற்றத்தை அவர் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே இந்த சூழ்நிலையில் அவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைப்பது முக்கியமாகிறது.

Question: ட்ரம்ப் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். நாட்டை நிர்வாகிப்பதில் இது அவருக்கு கூடுதல் பலமாக இருக்குமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இரு பிரிவினருக்கு இடையே, இருவருக்கும் பலனளிக்கும் நிலையான ஒப்பந்தங்களை ஏற்படுத்துபவர் தானே ஒரு சிறந்த தொழில் அதிபராக நிலைக்க முடியும். நாம் இப்போது இருக்கும் சூழ்நிலையை தொழில் அதிபரான ட்ரம்ப் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன், மதம் சார்ந்த தலைமை உலகில் நிலவியது. வறட்டுதனமாக மக்கள் கட்டிப் போடப்பட்டிருந்த சூழ்நிலையில் இருந்து இராணுவ கொடுங்கோலாட்சியை நோக்கி மனித சமுதாயம் நகர்ந்தது. அதன்பின் ஜனநாயகமுறை மலர்ந்து தேர்தல் மூலம் உருவாகும் ஒரு சில குழப்பங்களையும் பார்த்து விட்டோம். அடுத்த 15, 20 ஆண்டுகளில் தொழில்துறை சார்ந்த தலைவர்கள் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்க கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.

எதிர்பாராத விதமாக, இப்போதே தொழில் அதிபர் ஒருவரை அமெரிக்க மக்கள் தலைவராக தேர்தெடுத்துள்ளனர். இது ஒரு அற்புதமான வாய்ப்பாகவோ அல்லது ஒரு பேரழிவாகவோ மாறும் வாய்ப்பு உள்ளது. அவரால் சூழ்நிலையை மாற்றி அமைக்க முடிந்தால், இது ஒரு வாய்ப்பாக அமையும். மத தலைவர்கள் எதையுமே அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இராணுவ தலைவர்கள் மோதல் போக்கை கையாள்வார்கள். ஆனால், ஒரு தொழில் அதிபரான ட்ரம்ப் ஒப்பந்தங்களை ஏற்படுத்த விருப்பமுள்ளவராக இருக்கிறார். உதாரணமாக ரஷ்யாவுடன் நட்பு ரீதியில் செயல்பட விருப்பமுள்ளவராக இருக்கிறார். இது இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியா - பாகிஸ்தான், வட - தென் கொரியா நாடுகளுக்கு இடையே வருங்காலத்தில் நல்லிணக்கம் ஏற்பட ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடும். அதற்கு ஒப்பந்தங்கள் நிலையான நன்மையை இருவருக்கும் வழங்குவதாக அமைய வேண்டும்.

தொழிலாக இருந்தாலும் சரி, திருமண வாழ்வாக இருந்தாலும் சரி, இருவர் இணையும் போது, இருவருக்குள்ளும் பரஸ்பர எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு சில இடங்களில் எதிர்பார்ப்பை விட்டுக் கொடுக்கும் போது தான் நீண்டகால அடிப்படையில் இருவருக்கும் இடையில் நல்லுறவு நிலைத்திருக்க முடியும். சர்வதேச அளவிலும் பரஸ்பர நலனுக்காக இணைந்து செயல்படும் நிலை உருவாக வேண்டும். அதிபர் ட்ரம்ப், "இவர்கள் என் நண்பர்கள்", "இவர்கள் என் விரோதிகள்" என்று பார்க்காமல் முற்றிலும் புதிய ஒரு கோணத்தில் இருந்து "எனக்கும் உனக்கும் இது நல்லதாக இருக்கும்" என்ற கண்ணோட்டத்தில் அனைத்தையும் அணுக வேண்டும் என்று நான் அறிவுறுத்துவேன். தொழில் ரீதியான வாய்ப்புகள் இருவருக்கும் பரஸ்பர நலனை வழங்கும் வகையில் இருக்கிறது. உலக மக்கள் வாழ்வில் அமெரிக்கா எந்த வகையில் பங்களிப்பை வழங்க முடியும், உலக மக்கள் எந்த வகையில் அமெரிக்காவுக்கு பங்களிப்பை வழங்க முடியும் என்றும் பார்க்க முடியும் தானே. இதற்கு மேலும் எதிரிகள் என்று யாராவது இருந்தே ஆக வேண்டுமா என்ன..? போதும். மக்கள் மாறி விட்டார்கள். கொடுக்கல் வாங்கல் முறையும் மாறி விட்டது.

ட்ரம்ப்-ன் பிரம்மாண்ட ஒப்பந்தங்களில் பங்கெடுக்க உலக மக்கள் அனைவருக்கும் சரியான சூழ்நிலையும் வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கலாம். அப்படி தற்போது பங்கேற்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருக்கும் மக்களை, நீண்ட கால நோக்கில் தமது தொழில் நிலைத்திருக்க ஒரு முதலீடாக, வருங்காலத்தின் மிகச்சிறந்த மனித ஆற்றலாக வளர்த்து எடுக்க முடியும் தானே. அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு, உடல் நலம் மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ட்ரம்ப் அதிபராக இருப்பது, அமெரிக்க மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவருக்குமே ஒரு புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல், இராணுவ செலவீனங்களை குறைத்துக் கொள்ள போவதாகவும் பேசியுள்ளார். எனவே உலகத்தின் காவல்காரனாக அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்தி கொள்ளாமல் இருப்பது அனைவருக்குமே நல்லது.

Question: ஆனால் சுவர் எழுப்பி மக்களை உள்ளே வர விடாமல் தடுக்க போவதாக பேசியுள்ளாரே..

சத்குரு:

அவர் எந்த வார்த்தைகளை பயன்படுத்தி இதை பற்றி பேசியிருந்தாலும், பொதுவாக ஒரு தேசத்தை நல்ல விதமாக கொண்டு செல்ல அதற்கு எல்லைகள் தேவை. எந்த தேசமாக இருந்தாலும், கணக்குவழக்கு ஏதும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்களை எப்படி சமாளிப்பது. அவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களை நிச்சயம் சட்டத்தின் வரைமுறைகளுக்குள் கொண்டு வர வேண்டும். வலுவற்ற எல்லைகள் எப்போதுமே கடும் சவால்களை தானே வழங்கும். எப்படி பார்த்தாலும் 50% அமெரிக்க-மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் ஏற்கனவே சுவர் அல்லது கம்பி வேலிகள் அமைத்து பாதுகாக்கப் படுகிறது. மீதமிருக்கும் 50% எல்லை பகுதி தான் பாதுகாப்பற்றதாக இருக்கிறது...

Question: ஆனால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட போது அது மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்ததே..

சத்குரு:

பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட போது இரு ஜெர்மனி நாடுகளும் இணைந்து ஒன்றானது. அதே விதமாக அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா இடையே நடக்க முடியுமா..? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருக்கும் போது இயல்பாகவே மக்கள் வளமான பகுதியை நோக்கி நகர்வார்கள் தானே. ஒட்டுமொத்த மனித இனமும், நாம் அனைவரும் சமம் எனும் ஒருமை நிலையை உணரும் போது தான் "எல்லைகளற்ற தேசம்" சாத்தியம். இது நிகழும் வரை எல்லைகளில்லா வாழ்வு என்பது வெறும் கனவு தான். அதுவரை சுவர்களும் இருக்கும். இப்போதைய நிலையில் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்தவர்களை கடும் குற்றவாளிகளாக முத்திரை குத்தாமல், ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்துவதும், அவர்களை பற்றிய சரியான எண்ணிக்கையும், தகவல்களும் தேவை. இல்லை எனில் எந்த விதத்திலும் தேசத்தை நிலை நிறுத்த முடியாது.

Question: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும்..?

சத்குரு:

உலகின் வலிமையான தேசத்தின் வெற்றிகரமான தலைவராக விளங்க, தனக்கு, பெரும் பலத்துடன் பெரும் பொறுப்பும் சேர்ந்தே வந்திருக்கிறது என்பதை ட்ரம்ப் உணர வேண்டும். உலக அளவிலும் அமெரிக்க அதிபர் தங்களுக்கும் ஏதாவது நன்மை செய்வார் எனும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இது மிகப்பெரிய பொறுப்பு. இப்போது "முதலில் அமெரிக்கா" என்பதே ட்ரம்ப்பின் முழக்கமாக இருக்கிறது. இது தொழில்துறை சார்ந்ததாக மட்டுமே, இராணுவம் சம்மந்தப்படாமல் இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

தொழில் ரீதியில் இருவருக்கும் இடையே ஒரு எல்லைவரை போக முடியும். ஆனால் இராணுவ முறையில் நீங்கள் பலமானவராக இருந்தால், எதிரில் இருப்பவர் கதி அதோகதி தான். ட்ரம்ப்பின் அமைச்சரவையில் பல தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள், எனவே இது அனைவருக்குமே இலாபகரமாக இருக்கும் என நம்புவோம். இதுவரையில் பேச்சாற்றல் நிறைந்த அரசியல்வாதிகளையே பார்த்து இருக்கிறோம், ஆனால் ட்ரம்ப் வெளிப்படையாக பேசுகிறார். என்ன சொல்கிறாரோ அதை செய்கிறார்.

Question: வேறு ஏதாவது குறிப்பிட்ட அறிவுரை ஏதும் ட்ரம்ப்புக்கு கொடுப்பீர்களா..?

சத்குரு:

ட்ரம்ப் விரைந்து பேசுபவராகவும், அதிகம் பேசுவதுடன், அதிகமாக "ட்வீட்" செய்பவராகவும் இருக்கிறார். இப்போது, அவர் பேசுவதை குறைத்துக் கொண்டு, மற்றவர்கள் பேச கேட்டு, செயலில் தன் வேகத்தை காட்டுபவராக இருக்க வேண்டும். அப்போது நிறைய விஷயங்கள் மாறும். அவரது "ட்விட்டர் handle -ஐ" கூட அவரிடமிருந்து யாராவது எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கும் எனக்கும் உடல், மனம், உணர்ச்சி என எல்லாமே வேறானவை. ஆனால் ஆன்மீகம் என்று நாம் அழைப்பது, இவை அனைத்தையும் கடந்தது. உடல் - மனம் - அறிவாற்றல் என பேசும் போது அவை எல்லாமே ஒரு எல்லைக்குள்ளேயே இருக்கிறது. ஒரு தலைவராக, உள்அனுபவம் வளர ஆன்மீகம் தேவை. ஆன்மீக நுண்ணறிவுடைய 25 பேரை 25 தேசங்களின் தலைவர்களாக்கினால், அவர்கள் இந்த உலகையே மாற்றி விடுவார்கள். என்னிடம் 25 தலைவர்களை 5 நாட்களுக்கு கொடுங்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.