ஆளுமை என்பது வளர்க்கவா? கரைக்கவா?
எப்போதெல்லாம் உங்கள் ஆளுமை (Personality) முக்கியமாகிவிடுகிறதோ, அப்போதெல்லாம் கடந்துபோன கணங்கள்தான் உங்களுக்கு முக்கியமாகி விடுகின்றன. இந்த கணம் முக்கியம் இழந்துவிடுகிறது. ஏனென்றால் ஆளுமை என்பதே கடந்த காலத்தைச் சேர்ந்த விஷயம் தான்.
சத்குரு:
Subscribe
நீங்கள் ‘நான்’ என்று எதை அழைக்கிறீர்களோ, அது உங்கள் மனதால் வெளியிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒருவிதமான உருவாக்கம். அந்த ‘நான்’ உங்கள் மனதில் ஒருவிதமான தகவலாகத்தான் உள்ளது. ‘நான் நல்லவன்’, ‘நான் கெட்டவன்’, ‘நான் அகந்தை கொண்டவன்’, ‘நான் பணிவானவன்’ என்பன போல் உங்களைப்பற்றி நீங்கள் எதைச் சொன்னாலும் அவையெல்லாம் உங்கள் மனதின் பலவகையான உருவாக்கம் மட்டுமே. வேறுவிதத்தில் சொல்ல வேண்டுமானால், இவை வெறும் கடந்த காலத்தின் சேகரிப்புகள் தான்.
நீங்கள் இறந்த காலத்தின் மூலமாகத்தான் வாழ்கிறீர்கள். உங்கள் வாழ்விலிருந்து இறந்த காலத்தை நீக்கிவிட்டால், உங்களில் பெரும்பாலானவர்கள் தொலைந்து போனது போல் உணர்வீர்கள். இறந்த காலத்தைச் சார்ந்தே அனைத்தும் உள்ளது. முடிந்து போன கணங்கள் தான் உங்கள் வாழ்வை நிர்ணயம் செய்கின்றன. எப்போதெல்லாம் உங்கள் ஆளுமை (Personality) முக்கியமாகிவிடுகிறதோ, அப்போதெல்லாம் கடந்துபோன கணங்கள்தான் உங்களுக்கு முக்கியமாகி விடுகின்றன. இந்த கணம் முக்கியம் இழந்துவிடுகிறது. ஏனென்றால் ஆளுமை என்பதே கடந்த காலத்தைச் சேர்ந்த விஷயம் தான்.
இந்தக் கணத்தில் உங்களிடம் ஆளுமை என்று எதுவுமில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுமையுடன் இருப்பது என்பது ஒரு சவத்தை தோளில் சுமந்து செல்வது போன்றது. சவத்தைச் சுமந்து கொண்டு நெடுந்தூரம் நடக்க இயலாதே. ஒரு சவத்தைச் சுமந்து கொண்டு எங்கே செல்வீர்கள்? சுடுகாட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ஒரு சவத்தை நெடுங்காலம் சுமந்து சென்றால் அது துர்நாற்றம் வீசும். அதையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும், வேறு வழியில்லை. அதேபோல் உங்கள் ஆளுமை மிகவும் வலிமையாக இருந்தால் அதன் துர்நாற்றமும் மிகுதியாகவே வீசும்.
எனவே உங்கள் இறந்த காலத்தை இறக்கி வைத்தால்தான், நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இயலும். இது ஒரு பாம்பு சட்டையை உரிப்பது போன்றது. பாம்பு சட்டை உரிப்பது என்றால் என்னவென்று தெரியுமா? பாம்பு கடந்த கணம் வரை தன் உடலின் பாகமாக இருந்த தோலை, அப்படியே உரித்துப் போட்டுவிட்டு, அதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிடும். தோலுரித்துச் செல்லும் பாம்பு போல் ஒவ்வொரு கணமும் இருந்தால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்.
எனவே, கடந்த கணத்தின் பளுவை இந்தக் கணத்திற்குள் எடுத்து வராத மனிதர் மட்டுமே அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர் ஆகிறார். அவருடைய அந்த தன்மை, அனைத்து இடங்களிலும் உணரப்படும். அத்தகைய தன்மையுடன் நீங்கள் இருக்கும்போது, உங்களைச் சந்திப்பவர்கள், சந்தித்த சில கணங்களிலேயே உங்கள் மீது மிகவும் நம்பிக்கை வைப்பார்கள். தங்கள் பெற்றோர், கணவன், மனைவி ஆகியோர் மீது கூட அவர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கடந்த காலத்தின் சுமையை நீங்கள் சுமப்பதில்லை.
கடந்த காலத்தின் சுமையை நீங்கள் சுமப்பவராக இருந்தால் நீங்களும் மற்றவரைப்போல துர்நாற்றத்தைப் பரப்புவீர்கள். இத்தகைய ஆளுமைகளால் தான் இவ்வுலகம் துர்நாற்றம் வீசுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒருவிதமான அடர்ந்த வாசனை அல்லது ஆளுமை என்பது இருக்கிறது. இவை உலகில் துர்நாற்றங்களாக, ஒன்றோடு ஒன்று எதிர்படும் போதெல்லாம் மோதலையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய வாசனையை சுமக்காத போதுதான், ஒருவர் இந்த வாழ்வை கடந்துபோக இயலும். அவர் உலக வாழ்வை போராட்டங்கள் இன்றி சுலபமாக வாழ்வதோடு, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியையும் இயல்பாகக் கடந்து போவார், சம்சார சாகரத்தை எந்த முயற்சியும் இன்றி கடந்து செல்வார். மற்றவர்களுக்கு பெருமுயற்சியுடன் நிகழ்பவை எல்லாம், இவருக்கு மிகவும் இயல்பாக, தானாகவே நிகழும். அனைத்தும் இவருக்கு இயல்பாக அமைந்துவிடும்.
இதுபோன்ற கணங்கள் உங்கள் வாழ்விலும் வந்திருக்கும். யாரோ ஒருவர் மீது அல்லது ஏதோ ஒன்றின் மீது உங்களுக்கு முழுமையான பரிவு என்னும் உணர்வு ஏற்பட்டிருக்கும். அப்போது, அந்தக் கணத்தில், உங்கள் ஆளுமை, நீங்கள் யார்? என்ன? போன்ற தன்மைகள் அனைத்துமே கரைந்து போயிருக்கும். எதுவும் மிச்சமின்றி கரைந்து போன அந்த கணத்தில் இருந்தது வெறும் ‘நீங்கள்’ மட்டுமே! எனவே ‘நீங்கள்’ மட்டுமே இருந்த அந்தக் கணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.