ஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா?
ஆதியோகி வாழ்ந்த காலத்தில் சமூகநிலை எப்படிப்பட்டதாய் இருந்தது, அவருக்கு முன்பாக தன்னை உணர்ந்தவர்கள் இருந்தார்களா, அப்படி இருந்திருந்தால் ஆதியோகி மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறார்... இப்படி பல கேள்விகளுக்கு விடையாய் சத்குருவின் இந்த உரை அமைகிறது!
கேள்வி: முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?
சத்குரு:
அவர் வந்தபோது சூழ்நிலை எவ்வாறாக இருந்தது? அவருக்கு முன்னால் உணர்ந்தவர்கள் எவரும் இல்லையா? அது உண்மை இல்லை.
உணர்ந்து இருந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தெரிந்துகொள்வது என்பது ஒன்று, உணர்வது என்பது மற்றொன்று. ஆனால், எவ்வாறு உணர்வது என்பது பற்றி ஒரு ஒழுங்குமுறை வகுப்பது என்பது இது எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
Subscribe
ஒரு மனிதன் தன் முடிவான இயல்பை அறிவியல் பூர்வமாக அணுகும்முறை - இதுவே அவரின் பங்களிப்பு. அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி, எவரும் இந்த அளவு நுட்பமாகவும் தெளிவாகவும் இதனை விவரிக்கவில்லை. அவரை நாம் கொண்டாடக் காரணமே இதுதான்.
இதை உணர்ந்த முதல் மனிதர் இவர்தானா? இல்லாமல் இருக்கலாம். அவர் வந்தபோது மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு கூடினர். உணர்தல் பற்றிய உணர்வு மக்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் குழுமியிருக்க மாட்டார்கள். “நாங்கள் அறியாத ஒன்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்,” என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு கண்டிப்பாய் தெரிதல் இருந்திருக்கிறது.
ஆதியோகி தோன்றிய காலத்தை பின்னோக்கிப் பார்த்தால் புரியும். மக்கள் தனித்தனி குழுக்களாக, பல குலத்தவர்களாக பல இன அடையாளங்களோடு வாழ்ந்தனர். ஒருவருடைய எல்லையை மற்றொருவர் தொட்டால், மரணம் நிச்சயம்.
உண்மையான சூழ்நிலையைப் பற்றி சிறிதளவே நாம் அறிந்திருக்கிறோம்; ஆனால் மனித மனம் எத்தகையதென்று நாம் அறிவோம். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நாம் அனுமானிக்க முடியும். ஒருவேளை வனாந்திரத்தில் உணவை தேடி நீங்கள் அலைந்தால், கண்டெடுக்கப்படும் உணவு உங்களுடையது ஆகிவிடும்.
நீங்கள், உங்கள் குடும்பம் உங்கள் குழு என அனைவரும் அந்த உணவை உண்பீர்கள். உயிர்வாழ்வதற்கான உணர்வு மேலோங்கி இருந்திருக்கும். அது மேலோங்கி இருந்தாலும் கலாச்சாரத்தில் எங்கோ ஒரு மூலையில் விரிவடைவதற்கான ஒரு ஏக்கத்தை மக்கள் மனதில் புகுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் அறிந்து கொள்வதற்கான தேடல் அவர்களிடம் தோன்றியிருக்காது.
எந்த அளவில் என்று நாம் அறிந்து இருக்கவில்லை; ஆனால், அத்தகைய ஒரு உணர்தல் அவர்களுக்கு வந்திருக்கும். மக்கள் ஆதியோகியை பயத்தோடு அணுகவில்லை. அவரிடம், தங்களுக்கு கொடுக்கக் கூடிய ஏதோவொன்று உள்ளது என்பதை உணர்ந்து, அந்த உணர்தலில் அவரை அணுகினர். ஏதோ ஒருவிதத்தில் அவர்கள் உயர்நிலையை அடைவதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டிருந்தனர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.