செல்வ வளம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவை பெருகப் பெருக தற்கொலை மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே போகிறதே! இது ஏன்? தற்கொலை என்பது மனித இனம் சம்பந்தப்பட்டது தானா அல்லது விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளுமா? விடை சொல்கிறார் சத்குரு...

Question:
செல்வ வளம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவை பெருகப் பெருக தற்கொலை மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே போகிறதே! இது ஏன்? தற்கொலை என்பது மனித இனம் சம்பந்தப்பட்டது தானா அல்லது விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளுமா? விடை சொல்கிறார் சத்குரு...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகமிகக் குறைவாகவே நிகழ்கின்றன. உங்களுடைய பிழைப்புக்கே நீங்கள் கஷ்டப்படும்போது, வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்வது என்று சிந்தனை செய்யமாட்டீர்கள். வளர்ச்சியடைந்த சமூகங்களில்தான் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்கின்றன. அல்லது ஒரு சமூகத்தின் ஒரு பகுதி வளமாக இருந்து, இன்னொரு பகுதியினர் வறுமையில் இருக்கும்போதும் தற்கொலைகள் நிகழ்கின்றன. முழு சமூகமுமே ஏழ்மையில் இருக்கும்போதோ அல்லது வளம் குறைவாக இருக்கும்போதோ அங்கு தற்கொலைகளே நிகழாது. ஏனென்றால் அவர்களுடைய முழு நோக்கமும் உயிர் வாழ்வதைப் பற்றித்தான் இருக்கும். நீங்கள் ஏழ்மையில் இருக்கும்போது, நம்பிக்கை என்பது பெரிய விஷயமாக இருக்கிறது.

தற்கொலை என்றாலும், ஆன்மீகம் என்றாலும், இரண்டுமே உங்களை நீங்கள் அழித்துக் கொள்வது பற்றியவைதான். உங்கள் உடலோடு மிக ஆழமாக அடையாளப்பட்டு இருக்கும்போது, அந்த உடலை அழிப்பதைத்தான் தற்கொலை என்கிறீர்கள்.

தெருவில் வசிக்கும் ஒரு ஏழை மனிதர் ஒரு பரிசுச்சீட்டை வாங்கினால், பரிசு முடிவுகள் தெரியும்வரை, அடுத்த ஒரு மாதத்திற்காவது அவர் உயிர் வாழ்வார். அதனால் அவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை வந்துவிடுகிறது. ‘இந்த 25 லட்ச ரூபாய் கிடைத்தால், அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?’ என்று அவர் சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார். பரிசு முடிவுகள் வெளிவந்துவிடுகிறது. கிடைக்கவில்லை என்றால் என்ன? இருக்கவே இருக்கிறது அடுத்த பரிசுச்சீட்டு. இதனால்தான் அவர்கள் பரிசுச்சீட்டுகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பரிசு விழும் முன்பே கூட, அவர் இன்னொரு பரிசுச்சீட்டை வாங்கிவிடுவார்.

ஆனால் ஒரு பணக்காரருக்கு அவர் வாழ்வில் அந்த பரிசுத்தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது. அது அவருக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அவருக்குத் தெரியும். எனவே அவருக்கு ஆழமான அவநம்பிக்கை உணர்வுதான் இருக்கும். உங்களுக்கு அவநம்பிக்கை வந்துவிட்டால், தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் அல்லது ஆன்மீகவாதி ஆகிவிடுவீர்கள். இரண்டே வாய்ப்புகள்தான்.

தற்கொலை என்றாலும், ஆன்மீகம் என்றாலும், இரண்டுமே உங்களை நீங்கள் அழித்துக் கொள்வது பற்றியவைதான். உங்கள் உடலோடு மிக ஆழமாக அடையாளப்பட்டு இருக்கும்போது, அந்த உடலை அழிப்பதைத்தான் தற்கொலை என்கிறீர்கள்.

ஆன்மீகம் என்பது உங்களுக்குள் இருக்கும் ‘நான்’ என்ற தன்மையை, உங்கள் அகங்காரத்தை அழிப்பது. இதுவும் ஒருவகையான தற்கொலைதான். ஆனால் இதில் பொருள்தன்மையைத் தாண்டிய பரிமாணங்களைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு வந்துவிட்டது. ஆகவே நீங்கள் வேறு தளத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறீர்கள்.

உடலை நன்றாக வைத்துக் கொண்டு, வேறொரு தளத்தில் தற்கொலை செய்ய முயல்கிறீர்கள். உங்களுக்கு உடலைத் தவிர வேறெதுவும் தெரியாதபோது, அந்த உடலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். அப்படியானால் ஆன்மீகம் என்பது ஓர் உயர்ந்த நிலை தற்கொலை.

பழங்குடி சமூகம் போலவே மிருக இனங்களிலும் தற்கொலைகள் மிகக் குறைவு. உதாரணமாக, பாம்புகள் தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்றால், விரக்தியின் காரணமான தற்கொலை அல்ல. பாம்புகளுக்கு தங்களுடைய சக்தி நிலையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு உண்டு. இந்த விழிப்புணர்வு, ‘வியான பிராணா’ என்னும் பரிமாணத்திலிருந்து வருகிறது. எனவே பாம்புகளுக்கு தம் உடலைப் பற்றியும், உடலின் செயல்பாடுகளைப் பற்றியுமான விழிப்புணர்வு மிக அதிகமாக இருக்கிறது.

யோகாவில் பாம்புகளை பலவிதமான குறியீடுகளாகப் பயன்படுத்தக் காரணம், அதற்கு தன் உடலைப் பற்றி மிகமிக நன்றாகத் தெரியும் என்பதால்தான். இதனால், அதனுடைய சக்திகள் வடிந்து, குறைந்த நிலைக்கு வரும்போது, அவை ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு உணவருந்தாமல் அமர்ந்துவிடும்.

உணவு தேடுவதாலோ, அல்லது வேறெந்த செயல்களைச் செய்வதாலோ தன் உடல் போஷாக்கு பெறப் போவதில்லை என்று அதற்குத் தெரியும். ஆகவே உணவு உண்ணாமல் அங்கேயே உட்கார்ந்து, 7 முதல் 12 நாட்களுக்குள் தன் உயிரை விட்டுவிடுகிறது. தன் வாழ்க்கையை நீட்டிப்பதற்கு அது முயற்சி செய்வதில்லை.

வாழ்க்கை முழுவதும் உயிர் வாழ அது போராடினாலும், தன் சக்திகள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துவிட்டன என்று தெரிந்துவிட்டால், பிறகு அது உண்ண மறுத்துவிடுகிறது. ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு உயிரை விட்டுவிடுகிறது. இப்படித்தான் மனிதர்களும் இருக்க வேண்டும்.