ஆசிரமத்திற்கு சென்று மக்களுக்காக சேவை செய்து வாழப்போகிறேன் என்று கூறிய மறுகணமே பலரது வீட்டில் பெரிய களேபரமே அரங்கேறும். தன் மகனோ மகளோ பிறருக்காக வாழ நினைப்பதை ஏன் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வதில்லை? சத்குருவிடம் ஒரு அன்பர் தன் பெற்றோர் பற்றி குறைபட்டுக்கொண்டபோது...

Question: சத்குரு, மக்களுக்காக ஈஷா செய்யும் பணிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானும் ஆசிரமத்திற்கே வந்து முழு நேரம் தங்கி ஏதாவது செய்ய விருப்பப்படுகிறேன். ஆனால் இதைப் பற்றி பேச்செடுத்தாலே என் பெற்றோர் அழுகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று சொன்னதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. நீங்கள் எங்காவது சென்று சுகமாக இருக்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு பாதிப்பு வருமா என்ன? அல்லது நாங்கள் இனி பார்க்க முடியாதே என்றும் அவர்கள் அழவில்லை. அவர்களுக்கு எதனால் பாதிப்பு வருகிறது என்றால் அவர்களுக்கு புரியாதது ஏதும் நீங்கள் செய்யக்கூடாது. அவர்களுடைய புரிதலின்படி அவர்கள் இந்த வாழ்க்கையில் என்னென்ன செய்திருக்கிறார்களோ அதேதான் நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நான் அமெரிக்கா போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். சந்தோஷமாக அனுப்புவார்கள். அவர்கள் இறந்தால் கூட உங்களால் உடனடியாக வர முடியாது.

நான் அமெரிக்கா போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். சந்தோஷமாக அனுப்புவார்கள். அவர்கள் இறந்தால் கூட உங்களால் உடனடியாக வர முடியாது. ஆனாலும் உங்களை சந்தோஷமாக அனுப்புவார்கள். ஏனென்றால் என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று ஊர் எல்லாம் சொல்லிக் கொள்வது அவர்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

ஆனால் ஆசிரமத்தில் இருந்தால் அவசரத்திற்கு அப்பாவையோ அம்மாவையோ நீங்கள் போய் பார்கக முடியும். ஆசிரமத்தில் இருந்தால் நிறைய பேருக்கு நன்மை செய்ய முடியும். இதையெல்லாம் நீங்கள் அவர்களிடம் கூறினாலும் 'இதெல்லாம் நமக்கு எதுக்கு' என்று உங்களிடம் கூறுவார்கள். ஏனென்றால் பெரும்பாலான மனிதர்களிடம் ஒரு நோய் இருக்கிறது. 'நான்', 'எனது' என்கிற நோய் இருக்கிறது. இந்த மாதிரி நிலையில் ஒரு நாடு முன்னேற்றமாகவே போக முடியாது. இந்த நாட்டில் மேலிருந்து கீழ் வரை அனைவரிடமும் இந்த நோய்தானே இருக்கிறது? நாட்டில் ஏன் ஊழல் அதிகமாக இருக்கிறது? நான், என்னுடையது என்ற நோய்தானே அதற்குக் காரணம்?

இந்த நோய் வந்தவர்கள் எப்படியும் அழுவார்கள், எதற்காகவாவது அழுவார்கள். எனவே நான் என்ன சொல்கிறேன் என்றால், உங்களுக்கு தொண்டு செய்வதில் விருப்பம் இருந்தால் முதலில் உங்கள் பெற்றோர் அந்த 'நான்' என்ற நோயிலிருந்து விடுபடுவதற்கு பணி செய்யுங்கள். உண்மையில் அதுதான் பெரிய வேலை. எவ்வளவு வயதானாலும் 'நான்' என்னும் நோயிலிருந்து மக்கள் எளிதாக மீள்வதில்லை. எப்படியும் ஒரு நாள் நாம் சாகத்தான் போகிறோம். சாகும்போதுதான், 'நான் இவ்வளவு நாள் 'நான் நான்' என்று சுயநலமாக இருந்து விட்டேன்' என்று புரிந்து கொள்வார்கள். அதற்கு இப்போதே புரிந்து கொள்ளலாம், இல்லையா?

எனவே அவர்களிடம் நீங்கள் சண்டை போடாமல், அவர்களுக்கு தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். உங்களுக்கு தொடர்ந்து நான் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தேன், அல்லவா? கடைசியில் நீங்கள் புரிந்துகொண்டீர்கள்கள்தானே? அதே போல் நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலையை மாற்ற முடியும்.

நம் நாட்டில் ஆண் குழந்தைக்காக ஏன் அதிகம் ஆசைப்படுகிறார்கள் என்றால், அவன்தான் நமக்கு கர்மா செய்வான், நமது முக்திக்கு வழி செய்வான் என்று நம்புவதால்தான். எனவே நீங்கள் இப்போதிருந்தே அதற்கான வழிகளை செய்யலாம். அவர்களுக்கு இப்போதிருந்தே பாடம் ஆரம்பிக்கலாம். அவர்கள் ஒரு நாளில் புரிந்து கொள்கிற மாதிரியா இருக்கிறார்கள்? இப்போதிருந்தே ஆரம்பித்தால் எப்போதாவது ஒரு நாளில் புரிந்து கொள்வார்கள்.

நோய் மிகவும் ஆழமாக இருந்தால், சில நேரங்களில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதை அவர்களுடைய நன்மைக்காக அன்றி, எதிர்மறையாக செய்யக்கூடாது. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் எதிர்மறையாக நாம் செயல் செய்யத் தேவையில்லை. அவருடைய நன்மைக்காக, முக்திக்காக நாம் செயல் செய்கிறோம் என்றால் அது எதிர்மறையாகவும் இருக்காது. அதே நேரத்தில் ஒரு மனிதன் ஏதோ ஒன்று நல்லது செய்ய நினைக்கும்போது, எல்லோரிடத்திலும் எப்போதும் அனுமதி வாங்கித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அப்புறம் அவர் எதுவும் செய்ய முடியாது. வாழ்க்கை அப்படியெல்லாம் நடக்காது.