தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 2

தியானலிங்கம் உருவான வரலாற்றை தன் சுவாரஸ்ய எழுத்துக்களில் கூறும் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், தியானலிங்கப்பிரதிஷ்டை நாளன்று சத்குரு பேசியஉரையை இத்தொடரில் விவரிக்கிறார். தியானலிங்கம் பற்றி சத்குரு சொல்வது என்ன?! அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பட்டுக்கோட்டை பிரபாகர்:

நமது உடல் அமைப்பில் பிறப்பிலேயே இருக்கும் குறைபாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான உடல் பிரச்சனைகள் நாமே தேடிக்கொள்வதுதானே? நம் உடலின் அலங்காரத்துக்கு நாம் காட்டுகிற அக்கறையை, அதைச் சரியாகப் பராமரிப்பதில் காட்டுகிறோமா? சரியான உணவுப் பழக்க வழக்கங்களைப்பற்றிய விழிப்புணர்வு நம்மில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது?

ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு ஒரு ஞானியிடம் வருபவர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம்.
1. மாணவர், 2. சீடர், 3.பக்தர்

ஒருவர் அழகான மலரை உங்களுக்குத் தருகிறார். அதைக் கசக்கி வீசினால், கொடுத்தவரின் மனம் எப்படி நொந்துபோகும்? அப்படி ஒரு அழகான மலராக இந்த உடலைநமக்குத் தந்திருப்பது இந்த இயற்கை அல்லது இறைவன். நம் உடலின் தேவை என்ன? கட்டமைப்பு என்ன? எப்போது எதைச் சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கு தகவலறிவும் இல்லை.

நமது உடலைப்பற்றியும் உணவுப் பழக்கம் பற்றியும் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த உடலுக்குள் ஒரு பாகமாகத்தான் நமது மனம் இருக்கிறது. நமது உடல்நிலைக்கும் மனநிலைக்கும் நிறைய, நேரடியான தொடர்பு இருக்கிறது.

யோகா என்பது மனதுக்கு மட்டுமோ அல்லது உடலுக்கு மட்டுமோ அல்ல. மனம், உடல் இரண்டும் கொண்ட மனிதனுக்கு, அதுவும் வறுமையை வென்ற, அடுத்த நிலைக்குத் தயாராகிக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலை ஒரு நாளிலேயே தெரிந்து கொள்ளவும் இயலும், ஒரு ஜென்மம் முழுதுமான முயற்சிகளுக்குப் பின்னும் புரிதல் கிடைக்காமலும் போகலாம். இது அவரவர் மனத் தீவிரமும், ஆர்வமும், விருப்பமும் சம்பந்தப்பட்டது.

ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு ஒரு ஞானியிடம் வருபவர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம்.
1. மாணவர், 2. சீடர், 3.பக்தர்

இதில் மாணவர் என்பவர் கற்றுக்கொள்வதில் விருப்பம் உள்ளவர். தனக்குள் உண்மையில் மாற்றங்களைத் தேடுவதை விடவும்... தனக்கு சௌகரியமானதை மட்டும் கற்க விரும்புவார் இவர். எது உடல் ரீதியான நல்வாழ்வை வழங்குமோ அதை அல்லது எது அவருக்கு மன அமைதியை அளித்து பொருள் தன்மையிலான நல்வாழ்வை அளிக்குமோ அதை மட்டுமே கற்க விரும்புவார்.


உண்மையில் தியானலிங்கத்தின் முக்கியத்துவம் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னரே அறியப்படும்.

ஆனால் சீடர் அப்படியில்லை. அவர் தனக்குள் ஒருமாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்புவார். பக்தரோ, தனக்கென எந்த விருப்பமும் இல்லாமல் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புவார்.

ஆன்மீகத் தேடலில் மாணவர்களாக வருபவர்கள் கடைசி வரை மாணவர்களாகவே இருப்பதும் உண்டு. சிலர் சீடர்களாக மாறுவதும் உண்டு. இன்னும் சிலர் பக்தர்களாகவும் மாறுகிறார்கள்.

ஆனால்... தியானலிங்கத்தின் முன்னால் இருக்கும்போது, ஒருவர் நேரடியாக பக்தராகவே தம் தேடலைத் துவங்குவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆகவேதான் தியானலிங்கத்தை ஒரு ஆன்மீகக் குருவாகவும் அருள் தரும் ஆசானாகவும் கருதமுடிகிறது.

தன்னை உணர்ந்த ஞானியின் சக்தி எப்படி தியானலிங்கத்துக்கு வந்தது, அல்லது யார், எப்படி அதைத் தந்தது என்றெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக, தியானலிங்கம் பற்றி சில அடிப்படையான தகவல்களைப் பார்த்துவிடலாம்.

சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தின் வளாகத்தில், 1999-ம் வருடம் ஜூன் மாதம் 24-ம் தேதி ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களின் முன்னிலையில் இந்தத் தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்.

‘‘தியானலிங்கம் என்பது ஒரு மகத்தான அற்புதம்! பொருள்களைத் தருவிப்பது, ஒன்றை வேறொன்றாய் மாற்றுவது, வாழ்க்கையின் இயல்பான போக்கில் குறுக்கிடுவது போன்ற அற்பமான விஷயங்களை நான் அற்புதம் என்று குறிப்பிடவில்லை.

பேராசை, பயம், வெறுப்பு, இவற்றிலிருந்து விடுபட்டு, வாழ்க்கை நம் மீது எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாதவாறு, வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் அறிந்து, உணர்ந்து ஒருமுழுமையான வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ முடிந்தால், அதுவே அற்புதமான விஷயம்!

தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் வருகிற அன்பர்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால், அவர் திறந்த மனநிலையில் இருந்தால், வாழ்க்கையின் முழுமையையும் ஆழத்தையும் உணர்வதற்கான வாய்ப்பைத் தியானலிங்கம் ஏற்படுத்துகிறது.

காரண அறிவின் விளைவாக, நாம் வாழ்க்கையை அனுபவமாக உணர பயப்படுகிறோம். வாழ்க்கை பற்றி மிக அதிகமாகச் சிந்திக்கிறோம். ஆனால், வாழ்க்கையை உணர்தல் என்பது குறைவாகவே உள்ளது. ஒரு மனிதனின் காரண அறிவு, உள் உணர்வு என்கிற இரண்டு நிலைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். அது மட்டும் போதாது. இந்த இரண்டையும் தாண்டி வாழ்க்கை உள்ளது. அதை யோகத்தில் ‘பிரதிபா’ என்று அழைக்கிறோம். உள் உணர்வும் அன்றி, காரண அறிவும் அன்றி இந்த உலகம் எப்படி உள்ளதோ, அதை நேரடியாக அப்படியே உணர்வதே ‘பிரதிபா’.

ஒருமுறை நீங்கள் தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் இருந்தால், ஆன்ம விடுதலைக்கான விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, நீங்கள் ஆராயவந்தீர்களோ, சரணடைய வந்தீர்களோ... ஆன்ம விடுதலைக்கான ஒரு விதை உங்களுக்குள் கண்டிப்பாக விதைக்கப்படுகிறது. இந்த விதையை நீங்கள் இன்றே துளிர்விட அனுமதிக்கலாம். அல்லது சில ஆண்டுகள் கழித்தும் அனுமதிக்கலாம். அல்லது சில ஜென்மங்கள் கழித்தும்கூட அனுமதிக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் உங்களுக்குள் விதைக்கப்பட்ட விதையை உங்களால் அழிக்க முடியாது.

உண்மையில் தியானலிங்கத்தின் முக்கியத்துவம் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னரே அறியப்படும். இப்போதைக்கு இது வாக்குவாதத்துக்கும் சர்ச்சைக்குரியதாகவுமே இருக்கும். இதன் உண்மையான தன்மையை உணர மக்களுக்குச் சிறிது காலம் ஆகும்.”

தியானலிங்கம் என்பது ஒரு கோயில் அல்ல. தியானலிங்கம் என்பது மதங்களைக் கடந்த சக்தி வடிவம் என்பதைக் குறிப்பிடத்தான் இதன் நுழைவாயிலில் பதினேழு அடி உயரத்தில் மூன்று பக்கங்களிலும் பலசமயங்களின் சின்னங்களும் இடம்பெற்றுள்ள ஸர்வதர்ம ஸ்தம்பம் என்கிற தூண் நிறுவப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தாலும்... இன்னும் சிலருக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

சத்குரு நான்கு பக்கங்கள்கொண்ட ஒரு தியானத் தூண் அமைத்திருக்கலாமே அல்லது வேறு எத்தனையோ வடிவங்களில் தியானக் கட்டிடம் ஒன்றை அமைத்திருக்கலாமே... எதற்காக இந்த தியானலிங்கம்?

லிங்கம் என்பது இந்து மதத்தினரின் வழிபாட்டு நம்பிக்கைகளில் வரும் கடவுளின் வடிவமாயிற்றே... அப்படியிருக்க, சத்குரு இந்த சக்திப் பெட்டகத்தை எதற்காக லிங்க வடிவத்தில் அமைக்க வேண்டும்?


அடுத்தவாரம்...

லிங்க வடிவத்தின் தனித்தன்மை, ஏழு சக்கரங்களின் சிறப்பம்சங்கள் என அடுத்த வாரம் பல அரிய தகவல்கள் காத்திருக்கின்றன.

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை