மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் மரத்தின் ஒரு துளியாகவே விழுகிறது. அதை நாம் பாதுகாத்து வளர்ப்பதன் மூலம் நம் சுற்றுப்புறம் எப்படி மேம்படும் என்பதை இங்கே காண்போம்...


பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒரு புறம் விதைக்க, விலங்குகள் இடம்பெயர்தல் மூலம் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. காற்றும் நீரும் விதைகளைக் கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன. வண்டுகளும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகின்றன.

மழை பெய்தாலும், நிலம் நம்மிடம் இருந்தாலும், விவசாயம் செய்யும் வழிமுறைகள் தெரிந்திருந்தாலும் விதைகள் நம் கையில் இல்லையென்றால், எதிர்கலத்தில் பசியால் மக்கள் சாகும் அபாயம் உள்ளதைக் கூறி எச்சரித்தார்.

இயற்கையில் அனைத்து ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச் செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு என்ன செய்கிறோம்?! காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; பெருகி வரும் மக்கள் தொகையால், பல அரிய தாவர மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உண்மையில், மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே விழுகிறது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை. ஆனால், நாம் விதைகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை. நாவல் பழத்தின் ஒரு விதையிலிருந்து மட்டும் 8 நாவல் மரங்கள் வளரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! விதைகளுக்குள் விருட்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதிலும் நாட்டு விதைகளின் மகத்துவத்தை உணர்ந்துகொள்வது அவசியம்!

நாட்டு விதைகளின் மகத்துவம்!

பாண்டிச்சேரி ஆரோவில் அருகே சுமார் 75 ஏக்கரில் வேளாண் காட்டினை உருவாக்கியிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாஸ் ப்ரூஸ் அவர்கள், 'தானே' புயலுக்குப் பின், தான் கண்டுகொண்ட உண்மை ஒன்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். புயலில் சாய்ந்த மரங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு மரங்களே. புயலின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வேரோடு சாய்ந்த மரங்கள் ஆஃப்ரிக்கன் மகாகனி, காயா போன்ற வெளிநாட்டு மரங்கள்தான். அங்கிருந்த நாட்டு மரங்கள் புயலுக்குப் பின்னும் அசராமல் நிற்பதை ஆச்சரியத்துடன் பகிர்ந்துகொண்டார்.

நாம் நம் நாட்டு மரங்களின் விதைகளை சேகரித்து காப்பது இப்போதைய தேவையாக உள்ளது. வில்வம், வள்ளி, கருங்காலி, நாகலிங்கம் போன்ற மரங்கள் நம் மண்ணில் நன்கு செழித்து வளரக் கூடிய நாட்டு வகைகளில் சில. மகிழம், செண்பகம், இலுப்பை, புங்கன் போன்ற நாட்டு மரங்களுக்கு தற்போது சீசன்! எனவே நாம் இம்மரங்களின் விதைகளை இப்போது சேகரிக்க முடியும்.

நீங்கள் கொய்யாவை ருசித்துச் சாப்பிடுங்கள்; மாங்கனியை உண்டு மகிழுங்கள்; நெல்லிக் கனியை சுவையுங்கள். ஆனால் அதன் விதைகளை மட்டும் ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளில் சேர்த்திடுங்கள்! ஒரு எலுமிச்சம் பழத்திலுள்ள விதைகளிலிருந்து சுமார் 12 எலுமிச்சை செடிகளை உருவாக்க முடியும். எலுமிச்சை, கொய்யா, மாதுளை போன்ற பழங்களின் விதைகளை காய வைத்து பதப்படுத்தி விட்டால் அவற்றை சில காலங்களுக்கு சேமித்து வைத்து விதைக்க முடியும்.

வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும். எனவே இதுபோன்ற பழவிதைகள் உங்கள் கையில் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நாட்களுக்கு நாற்றுப் பண்ணைகளில் சேர்த்திடுங்கள். வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்களே நட்டு வளருங்கள்.

விதைகளுக்கு ஏன் கவனம் கொடுக்க வேண்டும்?!

தற்போது விதைகளை நாம் வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து பெறக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. விதைகள் குறித்து சத்குரு அவர்கள் பேசுகையில், விதைகளை வெளிநாட்டினர் கையிலிருந்து பெறும் நிலைக்கு நாம் சென்று விட்டால், நமக்கு நடக்கவிருக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பேசினார். மழை பெய்தாலும், நிலம் நம்மிடம் இருந்தாலும், விவசாயம் செய்யும் வழிமுறைகள் தெரிந்திருந்தாலும் விதைகள் நம் கையில் இல்லையென்றால், எதிர்கலத்தில் பசியால் மக்கள் சாகும் அபாயம் உள்ளதைக் கூறி எச்சரித்தார். விதைகள் எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

ஈஷா பசுமைக் கரங்களுக்கு விதைகள் கொடுங்கள்!

ஈஷா அறக்கட்டளையின் பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.