கடந்த டிசம்பர் 12ம் தேதியில் வீசிய ‘வர்தா’ என்று பெயர் சூட்டப்பட்ட புயலால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது! பொதுவாக இயற்கை பேரழிவுகள் வரும்போது பாதிப்புகள் என்பது தவிர்க்கமுடியாததுதான். ஆனாலும், சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதில் நாம் கவனித்துப்பார்க்கும்போது ஒன்றைப் புரிந்துகொள்ளமுடியும்... சென்னையிலுள்ள பெரும்பாலான சாலையோர மரங்கள் யாவும் நாட்டு மரங்கள் அல்ல!

விவசாயத்தில் மட்டுமல்லாது நம் சாலையோரங்களிலும் தெருக்களிலும் நம் மண்ணிற்கு ஏற்ற நாட்டு விதைகளை நடுவதன்மூலம், இயற்கை பாதிப்புகளை எதிர்த்துநிற்கும் திறனை அவை பெறுகின்றன.

இவை பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசால் வைக்கப்பட்ட மரங்கள் எனச் சொல்கிறார்கள். தூங்குமூஞ்சி மரங்கள் எனச் சொல்லப்படும் மரங்கள் உள்ளிட்ட சென்னையில் உள்ள 90% மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. நாட்டு வாகை, புங்கன், வேம்பு உள்ளிட்ட நாட்டு மரங்கள் மிகக் குறைவாகவே சென்னையில் நடப்பட்டுள்ளன. இந்த புயலினால் நாட்டுமரங்களுக்கு இந்த அளவிற்குப் பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

நூறாண்டுகளைத் தாண்டி வளர்ந்த மரங்களும் வேரோடு சாய்ந்திருக்கின்றன. அடையாறு, மயிலாப்பூர், அசோக் நகர், அண்ணா நகர் போன்ற பல பகுதிகளில் சாலைகளை தங்கள் நிழல்களால் குடைபிடித்துவந்த மரங்கள் வீழ்ந்துவிட்டன. தற்போது பல நிழற்சாலைகள் வெட்டவெளிகளாகி விட்டன. மரங்கள் நிழல்தருவது மட்டுமல்லாமல், பலரின் வாழ்வில் நினைவுச் சின்னங்களாகவும் உள்ளன. அந்த மரங்களின் நிழலில் ஆடிப்பாடி, தங்கள் பள்ளி-கல்லூரி நாட்களை கடந்து வந்தவர்களுக்கு இது ஒரு பேரிழப்பாகத் தான் இருக்கும்.

ஏற்கனவே சென்னையில் கோடைகாலம் என்பது வாட்டி வதைப்பதாக இருக்கும். இனி மரங்களற்ற சாலைகளில் மக்கள் நடமாடுவது பெரும்பாடுதான்! ஆனால், நாம் இப்படி புலம்பிக்கொண்டிருப்பது அவ்வளவு புத்திசாலித்தனமானது அன்று! நாம் செயலில் இறங்கி சில காரியங்கள் செய்ய வேண்டிய தருணம் இது. சத்குரு இதுகுறித்து பேசியபோது, சென்னைவாசிகள் தங்கள் வார இறுதி நாட்களை இதற்காக ஒதுக்கி இரண்டு வாரங்களில் அனைவரும் ஆளுக்கு இரண்டு மரங்கள் நட்டு வளர்த்தால் போதும் என்று கூறினார். ஆனால், நாம் நடும்போது நம் மண்ணிற்கேற்ற நாட்டு மரங்களை நடுவதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வர்தா புயலுக்கு வளையாத நெற்பயிர்கள்!

சத்குரு இதுகுறித்து பேசியபோது, சென்னைவாசிகள் தங்கள் வார இறுதி நாட்களை இதற்காக ஒதுக்கி இரண்டு வாரங்களில் அனைவரும் ஆளுக்கு இரண்டு மரங்கள் நட்டு வளர்த்தால் போதும் என்று கூறினார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தாக்கிய ‘வர்தா’ புயலின் பாதிப்பு திருவண்ணாமலை பகுதியிலும் இருந்தது. திருவண்ணாமலை ஈஷா விவசாய பண்ணையில், புயலின் காரணமாக பலத்த காற்று வீசியபோது, இயற்கை விவசாயத்தில் விளைந்துள்ள அந்த நெற்பயிர்கள் சாயவில்லை. ஆனால் அருகிலுள்ள நிலங்களில் இரசாயன விவசாயத்தில் விளைந்த நெற்பயிர்கள் பெரும்பாலும் சாய்ந்து விட்டன. இயற்கை விவசாயத்தினால் நெற்பயிர்களின் தண்டுகளும் வேர்களும் உறுதியுடன் இருப்பதை இது காட்டுகிறது!

விவசாயத்தில் மட்டுமல்லாது நம் சாலையோரங்களிலும் தெருக்களிலும் நம் மண்ணிற்கு ஏற்ற நாட்டு விதைகளை நடுவதன்மூலம், இயற்கை பாதிப்புகளை எதிர்த்துநிற்கும் திறனை அவை பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் நாட்டுமரங்களின் கிளைகளில்தான் பறவைகள் அணில்கள் போன்ற உயிரினங்கள் கூடுகட்டி வாழவிரும்புவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டு மரங்களின் சிறப்புகள்!

வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களான வேம்பு, நாட்டு வாகை, பூவரசு ஆகிய கன்றுகளை நம் வீட்டு முற்றங்களிலும் சாலையோரங்களிலும் நட்டு வளர்க்கலாம். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இந்த மூன்று மரங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன. இவைகள் நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்களாகவும் உள்ளன.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய மேலும் ஒரு மரமான புங்கன் மரம் குளுமைக்குப் பேர்போனது! அதோடு இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசல் தயாரிப்பதற்கு உதவுகிறது. எனவே நல்ல வருமானமும் கிடைக்கிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரக்கன்றுகளை 'ஈஷா பசுமைக் கரங்கள்' உருவாக்கியுள்ள நாற்றுப் பண்ணைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை அமைத்துள்ளது. ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த நாட்டு மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று -ரூ.7.00) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் கூறி வழிகாட்டுகின்றனர்.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே. 94425 90062