டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

கோயில் இல்லா ஊர்கள் கூட உண்டு, ஆனால் இன்று டீக்கடை இல்லா தெரு கூட கிடையாது. ஆட்டோ ட்ரைவரானாலும் ஆடி கார் ஓனரானாலும் டீ அருந்தும் பழக்கத்தில் ஒன்றுபடுகின்றனர்.

தேயிலை பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்து அடிப்படையில் நான்கு வகைப்படுகிறது. வொய்ட் டீ, க்ரீன் டீ, ஊலாங்க் டீ, ப்ளாக் டீ. நம் பகுதியில் உபயோகத்திற்கு பொதுவாய் நாம் பயன்படுத்துவது ப்ளாக் டீ. ப்ளாக் டீயை பாலுடன் சேர்ந்து அருந்தும் வழக்கம் ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில்தான்.

நாடு முழுதும் அலுவலகங்களில் வேலை நடக்கிறதோ இல்லையோ, நேரத்திற்கு டீ சப்ளை நடந்தாக வேண்டும்! கல்யாணம் முதல் கருமாதி வரை நம் மக்கள் எங்கெல்லாம் கூடுகிறோமோ அங்கெல்லாம் நாம் உறிஞ்சும் அந்த ஒரு கப்பில் தன் இருப்பை நீக்கமற நிலை நிறுத்திக் கொள்கிறது டீ!

ஒரு கப் தேநீரின் பின்னணியை ஆராய முற்பட்டேன். இரு புருவங்களும் உயர்ந்தன. அகிலத்தில் தண்ணீருக்குப் பின் மனிதர்களால் அதிகம் பருகப்படும் பானம் - தேநீர்.

அன்று இந்த தேசத்தின் அடிமை சாசனத்தின் ஆரம்பப் புள்ளி, இன்று நாட்டின் மிகப்பெரிய வணிகங்களில் ஒன்று. பல தலைமுறைக்கும் ஒடுக்கப்பட்ட தேயிலைத் தொழிலாளர் வர்க்கம் என பார்வை விசாலமானது. எனினும், தேநீர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாமா?

வரலாறு முக்கியம் அமைச்சரே...

மருந்து விருந்தான கதை!

உலகம் முழுதும் பயிரிடப்படும் தேயிலையின் மூலஸ்தானம் பர்மா மற்றும் சீனத்தின் தென் மேற்கு மாகாணம் என அறியப்படுகிறது. ராமாயணக் குறிப்புகள், பௌத்த மத துறவிகளான போதிதர்மர், கான் லு போன்றோரின் வாழ்க்கைக் குறிப்புகள் மூலம் இந்தியாவிலும் தேயிலையின் நெடுங்கால வரலாற்றை அறிய முடிகிறது. அக்காலங்களில், பிற வகை மூலிகைகளோடு தேயிலையும் சேர்த்து மருத்துவத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் கூட உலகின் அனேக பாரம்பரிய வைத்திய முறைகளில், தமிழின் சித்த மருத்துவமுறை உட்பட, மூலிகைத் தேநீர் உடல்நலம் பேண பரிந்துரைக்கப்படுகிறது.

காலப்போக்கில் தேயிலையின் தனிச்சுவை மற்றும் நரம்புக் கிளர்ச்சியூட்டும் தன்மைகளை சீனர்கள் அறிந்து கொண்டனர். அதன்பின், மருந்து என்பதை தாண்டி வெகுஜன பயன்பாட்டிற்கான அன்றாட ஊக்க பானமாக பரிணாம வளர்ச்சி அடைந்து, உலகம் முழுதும் பரவியது. தேயிலை வணிகத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை முறியடிக்க ஆங்கிலேயர் 1800களில் இந்தியாவில் தேயிலை சாகுபடியை தொடங்கினர். இன்று உலகின் மொத்த உற்பத்தியில் 25% நம் நாட்டில்; மேலும், உலகிலேயே மிக அதிக அளவு டீ குடிக்கும் பெருமையும் நமக்கே! ஆக, காலம் தேயிலை எனும் மருந்தை வணிகத்தின் மூலம் அன்றாட விருந்தாக்கிவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வகை வகையாய்... வித விதமாய்!!

தேயிலை பயிர் செய்யப்படும் நிலப்பரப்பைப் பொருத்து தேநீருக்கு தனி குணங்கள் அமைகின்றன. அஸ்ஸாம், சிலோன் டீ ஸ்டிராங்கானதாகவும், டார்ஜீலீங்க், நீலகிரி வகைகள் உயர்ரக மிதமான வகை எனவும் அறியப்படுகிறது.

தேயிலை பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்து அடிப்படையில் நான்கு வகைப்படுகிறது. வொய்ட் டீ, க்ரீன் டீ, ஊலாங்க் டீ, ப்ளாக் டீ. நம் பகுதியில் உபயோகத்திற்கு பொதுவாய் நாம் பயன்படுத்துவது ப்ளாக் டீ. ப்ளாக் டீயை பாலுடன் சேர்ந்து அருந்தும் வழக்கம் ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில்தான்.

தேயிலை உலகின் பெரும்பான்மை பகுதிகளில் வெறும் காய்ச்சிய நீராக (டிகாஷன்) மட்டுமே அருந்தப்படுகிறது. நம் நாட்டில் பாலுடன் சேர்த்த லெமன் டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, நம் காஷ்மீர் ஸ்பெஷல் பாதாம், பிஸ்தா டீ என வெரைட்டியாய் ருசிக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை இந்தியர்களின் உணவு ரசனைக்கு தேநீர் வகைகள் மற்றுமோர் சான்று.

டீ ஹெல்த் ரிப்போர்ட்

டீயில் ஊட்டச்சத்துக்களின் அளவு மிக, மிக சொற்பம், இல்லை என கூறுவதும் தவறாகாது. வெறும் நரம்பு ஊக்கம் செய்யும் காரணிகளை மட்டுமே கொண்டுள்ளது.

மருத்துவ ரீதியாக டீயில் கிடைக்கும் ‘தியோஃபிலின்’ ஆஸ்துமா நோய்க்கு மருந்து. காபியில் அதிகமாகவும், டீயில் குறைவாகவும் காணப்படும் ‘கஃபைன்’ எனும் வேதிப்பொருள் ஒரு நரம்பு ஊக்கி மற்றும் தலைவலி மருந்தும்கூட.

மருந்தாகப் பயன்படும் டீ, தினமும் அதனை உணவாக அருந்துவோர்க்கு என்ன பலன் தருகிறது?

இரத்த அழுத்தக் குறைப்பு, கெட்ட கொழுப்பு குறைதல், இருதய நோய், பல வகை கேன்ஸர் நோய்களின் ரிஸ்க் குறைவு, உடல் எடை குறைப்பு என பல பலன்கள் ஹேஸ்யமாக வழங்கப்படுகின்றன. எனினும், எந்த ஒரு அறிவியல் ஆராய்ச்சியும் இதுவரை தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

இந்த அறிவியல் முடிவுகளும் கூட பால் சேர்க்காத வர டீ, க்ரீன் டீக்கு மட்டுமே.

பால் மாதிரி பாக்கெட் பாலுடன், சர்க்கரையை அள்ளித் தெளித்து காலை மாலை டீ அருந்துபவரா நீங்கள்? ஆம், எனில், வயிற்றுப்புண் தொடங்கி சர்க்கரை நோய், கொலஸ்டிரால், இதய நோய், படபடப்பு, மறதி நோய் எனும் பாம்பு குட்டிகளை நீங்களே டீ வார்த்து வளர்க்கிறீர் என அர்த்தம்; சந்தேகம் வேண்டாம்.

இரத்த சோகைக்காக இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுபவர்கள், டீயை தவிர்க்கவும். டீ இரும்புச் சத்தை இரத்தத்தில் சேரவிடாது.

ப்ளாக் டீயா? க்ரீன் டீயா?

சமீப காலமாய், க்ரீன் டீ ஆரோக்கியத்தின் காவலன் எனும் கருத்து மக்களிடையே பரவலாகப்பட்டு வருகின்றது. க்ரீன் டீயின் தாயகம், ஜப்பான் மற்றும் சீனா. நம் நாட்டின் பெரும்பான்மை ரகமான ப்ளாக் டீக்கும், க்ரீன் டீக்கும் என்ன வேறுபாடு? அடிப்படையில் ஒரே தேயிலைச் செடிதான் எனினும், க்ரீன் டீ இலைகள் வதங்கவிடப் படுவதில்லை. அதே நேரம், ப்ளாக் டீயை விட குறைந்த அளவு ஆக்ஸிஜெனேற்ற அழுத்தத்திற்கு மட்டுமே உட்படுத்தப்படுவதால், நன்மை பயக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் க்ரீன் டீயில் சற்று அதிகம்.

அளவில் குறைவு எனினும், க்ரீன் டீயிலும் கஃபைன் நரம்பூக்கி உண்டு. மேற்கூறிய நோய் தடுப்பு பலன்கள் அறியப்படினும், உறுதியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • ஆகையால், க்ரீன் டீயை அருந்துவது தனி நபர் விருப்பம் சார்ந்த விஷயம் என்கிற அளவில் மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
  • மார்க்கெட்டில் க்ரீன் டீ என்கிற பெயரில் பல போலிகள் உலவுகின்றன. வெறும் சர்க்கரைப் பொடிக்கு கலர் தடவி சாஷெட்டுகளில் விற்கிறார்கள் ஜாக்கிரதை!
  • அன்றாடம் அருந்தும் ப்ளாக் டீயை பயன்படுத்தக் கூடாது என நான் கூறவில்லை. அதே சமயம், அதனை அருந்தாமல் இருப்பது நீண்ட கால நரம்பு மண்டல வலுவுக்கு நன்மை என்கிறேன்.

பாரம்பரிய டீ வகைகள்!

ஈஷா ஆரோக்கியாவின் மூலிகை டீயில், மருதம்பட்டை, ஆவாரம்பூ, சீரகம் முதலிய மூலிகைகள் ஒன்றிணைந்த கலவையாக தயாரிக்கப்படுகின்றன. இது இரத்தக் கொதிப்பை சமன் செய்யும் தன்மை உடையது. மேலும், இருதய நோய் வராமல் தடுக்கும் எளிய உபாயம்.

ஒன்றுக்கு மேற்பட்ட மூலிகை இலைகளை சேர்த்துக் காய்ச்சி மருந்தாகப் பயன்படுத்தும் முறை நம் சித்த, ஆயுர்வேத முறைகளில் இருந்து வருகிறது. இவை கஷாயம் அல்லது மூலிகை பானகம் என்கிற பெயரில் வழங்கப்படுகிறது. சாதாரண சளி, காய்ச்சல் முதல் இருதய நோய் வரை சிகிச்சை அளிக்கும் பல வகை மூலிகை பானங்கள் இன்று `மூலிகை டீ` என்ற பெயரில் கிடைக்கின்றன.

ஈஷா ஆரோக்கியாவின் மூலிகை டீயில், மருதம்பட்டை, ஆவாரம்பூ, சீரகம் முதலிய மூலிகைகள் ஒன்றிணைந்த கலவையாக தயாரிக்கப்படுகின்றன. இது இரத்தக் கொதிப்பை சமன் செய்யும் தன்மை உடையது. மேலும், இருதய நோய் வராமல் தடுக்கும் எளிய உபாயம். இருதய நோய் இருப்பவர்கள் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளுடன், தாங்கள் தினசரி அருந்தும் காபி, டீக்கு பதிலாக ஈஷா ஆரோக்யாவின் மூலிகை டீ யை பயன்படுத்துவது நல்லது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நன்றி: சித்த மரு.ராஜேஷ் ஸ்ரீனிவாசன், M.D., ஈஷா ஆரோக்யா, சென்னை.