வேதனை இல்லை படுத்தால் தூக்கம் வருகிறது !
ஸ்ரீலேகா ராஜேந்திரன் - திரைப்பட நடிகை. சின்னத்திரையில் பல வண்ணக்கோலங்கள் படைத்தவர். ஈஷா யோகா வகுப்பு செய்து, தன் வாழ்வில் ஏற்பட்ட பல மாற்றங்களை, கி.மு - கி.பி என்பது போல, ஈ.மு - ஈ.பி என நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
ஸ்ரீலேகா ராஜேந்திரன் - திரைப்பட நடிகை. சின்னத்திரையில் பல வண்ணக்கோலங்கள் படைத்தவர். ஈஷா யோகா வகுப்பு செய்து, தன் வாழ்வில் ஏற்பட்ட பல மாற்றங்களை, கி.மு - கி.பி என்பது போல, ஈ.மு - ஈ.பி என நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
ஸ்ரீலேகா:
என் பெயர் ஸ்ரீலேகா. என் கணவர் ராஜேந்திரன். நாங்கள் கலை உலகில் உள்ளோம். நானும் எனது கணவரும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்களாக உள்ளோம். பின்னணி குரல் கொடுப்பவர்களாகவும் உள்ளோம்.
Subscribe
என் கணவரும் நானும் 2008 ஆம் வருடம் ஈஷா யோகா வகுப்பு செய்து அந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தோம். இதைச் செய்து வந்ததன் மூலம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை நன்றாக உணர முடிந்தது. அதற்கடுத்த மேல்நிலைப் பயிற்சியில் கலந்து கொண்ட பிறகு எனக்கு இருந்த கோபம், அகங்காரம், திமிர் எல்லாம் நொறுங்கி முற்றிலும் புதிதாய் பிறந்ததாக உணர்ந்தேன்.
அதன்பின்பு என் கணவர் ‘தியான யாத்திரை’, ‘கைலாஷ் யாத்திரை’ மற்றும் சமீபத்தில் ‘குமார பர்வதமலை’ சென்று வந்தார். இவை எல்லாம் சத்குரு அவர்களின் அருள், ஆசிர்வாதத்தால் நடந்தது. ஏனெனில் நாங்கள் கலை உலகில் இருப்பதால் எளிதில் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. திடீரென்று கூப்பிடுவார்கள். அவர்கள் கூப்பிடும்போது செல்லவேண்டும். இல்லையென்றால் பிழைப்பே போய்விடும், வருமானம் போய்விடும். இது நிரந்தரமில்லாத தொழில். எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருக்கும் தொழில். வரும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லா வகுப்புகளிலும் பங்கெடுக்கவும், யாத்திரை போகவும், தொழிலும் பாதிக்காத வகையில் வாய்ப்பு கிடைக்கிறதென்றால் அது சத்தியமாக, சத்குரு அவர்களின் அருளும் ஆசீர்வாதமும் எங்களுக்கு இருப்பதால்தான். ‘விருப்பத்துடன் என்னிடம் வருவீர்களேயானால், உங்களால் விளங்கி கொள்ள முடியாத வழிகளில்கூட எளிதில் என்னை வழங்குவேன்.’ என்னும் சத்குருவின் வார்த்தைகள் எங்களைப் பொறுத்தவரை முழுக்கமுழுக்க உண்மை.
லிங்கபைரவி பிரதிஷ்டையின்போது மூன்று நாட்கள் சத்குருவுடன் இருந்தது நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். சத்குரு அவர்களின் அற்புதத்தை நேரில் பார்த்தோம். அது சாதாரண வாய்ப்பில்லை. மிகமிக அற்புதமான வாய்ப்பு. இதனை வழங்கிய அவருக்கு கோடானு கோடி நன்றி.”
சென்னையில் 3 நாட்கள், சத்குரு அவர்கள் நேரிடையாக வகுப்பெடுத்தார். 14 ஆயிரம் பேருக்குமேல் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் 3 நாட்கள் உட்கார வைப்பது சாதாரண விஷயமல்ல. வியந்து, அதிசயித்த அற்புதம். ஆஹா என்னவென்று சொல்வது, அந்தப் பயிற்சி வகுப்பில் எங்கள் மகனையும் பங்கெடுக்க வைத்தோம். இந்த கால பிள்ளைகளுக்கே உரிய வேகம், கோபம், படபடப்பு, டென்ஷன் உள்ள எங்கள் மகன் 3 நாட்கள் சத்குரு முன்னிலையில் அமைதியாக அமர்ந்து பயிற்சி எடுத்தது எங்களுக்கு மிக ஆச்சரியம்.
ஈஷா எங்களுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னால் எனக்கும் என் கணவருக்கும் கோபம் அதிகம் வரும். அதுவும் என் கணவர் கேட்கவே வேண்டாம்... அப்படி ஒரு முன்கோபி. கலைத்துறையில் சங்க பொறுப்புகளிலும் உள்ளதால் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும்போது, கோபம், படபடப்பு எல்லாம் ஒட்டிக் கொண்டது. ஈஷா அறிமுகம் ஆகி பயிற்சிகளெல்லாம் எடுக்க ஆரம்பித்து தொடர்ந்து செய்து வருவதால், அந்த கோபம், படபடப்பு, டென்ஷன் போன இடமே தெரியவில்லை. இப்போது நிதானம் நிதானம் அப்படி ஒரு நிதானம். எல்லாவற்றிற்கும் ஒரு சிரிப்புதான்.
மேலும் அவர் உடல்நிலையில் சில பாதிப்புகள் இருந்தது. கை, கால் ரஃப்பாக முரட்டுத்தனமாக இருக்கும். ஒரு இடத்தில் 5 நிமிடம் உட்கார்ந்தாலே கை, கால் மரத்துவிடும், வெடிப்பு இருக்கும். கை, காலை தேய்த்துக்கொண்டே இருப்பார். இப்படி பல விஷயங்கள் அவர் உடம்பில் இருந்தது. ஈஷா வகுப்பில் பங்கு பெற்று பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிட்டது. நலமாக இருக்கிறார். பயிற்சிகளை விடாமல் செய்கிறார். மருத்துவரிடம் போவதே இல்லை.
சத்குரு அவர்களின் DVD களைக் கேட்கும்போது இந்த உலகம் இதுவரை சொல்லி வந்திருந்த விளக்கங்களுக்கு மாறாக சத்குரு அவர்களின் விளக்கம் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும் உடல் சிலிர்க்கும். சில விநாடிகள் அந்த வரிகளை, பேச்சை கேட்டுக் கொண்டே இருப்போம், படிப்போம். கண்களில் கண்ணீர் பெருகும்.
கி.மு., கி.பி. என்பது போல் எங்கள் வாழ்க்கையை ஈஷாவுக்கு முன், ஈஷாவுக்கு பின் என்று குறிப்பிடலாம். முன்பெல்லாம் பணம் கையில் இல்லை என்றால், தொழில் வரவில்லை என்றால் மனம் கவலை கொள்ளும், பயம் சூழும். எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றிருக்கும். இப்போது அப்படி இல்லை, பணம், தொழில் வந்தாலும் ஒரே நிலைதான். வரவில்லை என்றாலும் ஒரே நிலைதான். கவலை இல்லை, பயம் இல்லை, வேதனை இல்லை, படுத்தால் தூக்கம் வருகிறது. சாப்பிட்டால் ஜீரணமாகிறது. காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சியுடன் பயிற்சி செய்ய முடிகிறது.