நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 26

சாமிக்குப் படைப்பதற்கு 'நாட்டுப்பழம் வாங்கிட்டு வா' எனக் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால் அது இயற்கை தந்தது. மற்ற ஏதோ ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பழத்தை படைக்க விரும்புவதில்லை. அப்படியிருக்க ஏன் இந்தச் செயற்கை ஒட்டு ரகப் பழங்களை வாங்கி வயிற்றுக்குள் தள்ள வேண்டும். நம்மாழ்வார் கேட்கும் கேள்வி இது, தொடர்ந்து படியுங்கள்!

நம்மாழ்வார்:

"ஆராமுதுக்கு ஆசைகொண்டார் கள்ளில்
அறிவை செலுத்துவரோ"
என்று பாரதியார் பாடினார்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மான்சான்டோ என்ற அமெரிக்க கம்பெனி பி.டி பருத்தி விதையை நாடெங்கும் விற்றது. பருத்திக்காயை புழு சேதம் செய்கிறது. பி.டி பருத்தியை பயிர் செய்தால் காயைத் தின்னும் புழு செத்துப்போகும் என்று சொல்லி 400 கிராம் விதையை ஏறத்தாழ 2000 ரூபாய்க்கு விற்று பணம் சேர்த்தது.

நன்மை செய்யும் பூச்சிகள் நஞ்சு தெளித்து அழிக்கப்படுவதால் தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைகின்றன.

இப்போது மான்சான்டோ கம்பெனி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. அதாவது பி.டி பருத்திக் காயைத் தின்ற இந்திய பருத்திக் காய்ப் புழு சாகவில்லை. குஜராத் மாநிலத்தில் 4 மாவட்டங்களில் பருத்திக் காய்ப் புழு பி.டி. பருத்திக்காயை வெற்றிகரமாக தின்று தீர்த்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பம் தோற்றுப்போனது தெரியவருகிறது. இப்படித்தான் பி.டி.கத்திரி, பி.டி. தக்காளி, பி.டி அரிசி, பி.டி உருளை என்று எதுவானாலும் நடக்கவிருக்கிறது. இந்த உண்மைகளை விஞ்ஞானிகள் கூட ஒத்துக் கொள்ளத் தயங்குவது ஏன்? கேள்விக்கு விடையில்லை.

ஆனால் மான்சன்டோ கம்பெனி 400 கிராம் முட்டைகோஸ் விதை வாங்கினால் ஒரு கை (டார்ச்) விளக்கு இனாமாக தருகிறோம் என்று விளம்பரம் செய்கிறது. ஆசைகாட்டி பணம் பறிப்பவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை மறுப்பவர்களை தண்டிப்பதற்கு சட்டம் வருகிறது.

நாடெங்கிலும் பற்றாக்குறையாகக் காணப்படும் பொருள் தண்ணீர். மனித தேவையில் காற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது தண்ணீர். வேளாண்மையில் பயன்படுத்தும் ரசாயன உரங்களும், ரசாயன பூச்சிக் கொல்லி நஞ்சுகளும், ரசாயன களைக்கொல்லி நஞ்சுகளும் வரம்பு கடந்து நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதற்கு அறிஞர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

அண்மையில் வந்த பத்திரிக்கை செய்தி சொல்கிறது. பூச்சிகளை வளர்ப்பதே பூச்சிக்கொல்லிகள்தான். நன்மை செய்யும் பூச்சிகள் நஞ்சு தெளித்து அழிக்கப்படுவதால் தீமை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைகின்றன. இயற்கையில் பூச்சிகளை உண்ணும் இறை உண்ணிகள் ஏராளம் இருக்கின்றன.

விஞ்ஞானிகள் கூறும் கணக்குப்படி 10 விழுக்காடு பூச்சிகள் செடிகளை சிதைக்கின்றன. 90 விழுக்காடு பூச்சிகள் செடியை சிதைக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. அப்படி இருக்க பூச்சிக் கொல்லிகளைத் தெளித்து உணவையும் நஞ்சாக்கி, உயிரின பண்மயத்தையும் சிதைப்பற்கு எதற்காக உழைப்பையும், பணத்தையும் நாம் இவ்வளவு செலவழிக்க வேண்டும்.

இந்த கேள்விக்கு பதில் இல்லை.

தொடர்ந்து விதைப்போம்...

இத்தொடரின் முந்தைய பதிவுகள்: நம்மவரு நம்மாழ்வார் தொடர்

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!