உள்ளடக்கம்:

டாக்டர். சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

தாய்ப்பால் மகத்துவமா? இது நம்ம சப்ஜெக்ட் இல்லப்பா!” என அடுத்த பக்கத்துக்குப் பயணிக்கும் ஆண்களுக்கு ஒரு கேள்வி...

“ஒரு பெண் மூலமாய் பிறந்து, ஏதுமறியா பச்சிளங்குழந்தையாய் நீங்கள் தவழ்ந்தபோது அவள் மாரில் புகட்டிய பால் மூலம் உயிர் வளர்த்தீர்களா?”

‘ஆம்’ எனில் அவசியம் தொடரவும். இது உங்களுக்கும்தான்.

உயிரூட்டும் தாய்ப்பால் பற்றிய சில அடிப்படை தகவல்கள் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் அனைவருக்கும் சென்றடைய உலக சுகாதார இயக்கம், பிரதி வருடம் ஆகஸ்ட் முதல் வாரத்தை “தாய்ப்பால் வாரமாக” கொண்டாடுகிறது. வருடந்தோறும் ஈஷா மருத்துவ மனைகளில் தாய்ப்பால் புகட்டுதல் குறித்த விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாய் தாய்ப்பால் குறித்த தகவல்களைப் பகிர்கிறோம்.

தாய்ப்பால் துளிகள்! (Breastfeeding in Tamil)

  • பிள்ளை பிறந்ததுமே (சுகப்பிரசவம்) (அ) (சிசேரியன்) அதிகபட்சம் அரை மணிக்குள் சீம்பால் புகட்ட வேண்டியதுதான் தாயாக நீங்கள் உங்கள் செல்லத்திற்கு அள்ளித்தரும் முதல் கிஃப்ட் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், சீம்பாலில்தான் உச்சபட்ச நோய் எதிர்ப்பு திறன் அளிக்கும் மூலக்கூறுகள் உள்ளன.
  • குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவுமே தரக் கூடாது. 6 மாதங்களுக்கு பிறகுதான் பிற உணவுகளை மெல்ல சேர்க்கலாம்.
  • 6 மாதங்கள் வரை புட்டியில் அடைத்த பசும்பால், டின் பவுடர்கள், ஏன் தண்ணீர் கூட கட்டாயம் தரக் கூடாது.
  • குழந்தையின் 18 மாதங்கள் வரை தொடர்ச்சியாய் தாய்ப்பால் புகட்டுவது வாழ்நாள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
  • தாய்ப்பால் சரியான முறையில் கிடைக்க வேண்டுமெனில், குழந்தை தாயின் முலைக் காம்பை முறையாய் பற்றியிருப்பது அவசியம்.

தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளில் சில:

  • கிறுமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, நெஞ்சக சளி, காது வலி/சீழ், மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்கிறது. அப்படி ஏற்படினும், அதன் தீவிரம் மிகக் குறைவாகவே இருக்கும்.
  • 28 நாள் முதல் 1 வயது வரை ஏற்படும் குழந்தைப் பருவ உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.
  • தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், குழந்தையின் உணவுக்குழாயில் பாதுகாப்பு கவசமாக படிந்து விடுகின்றன. இதனால், உணவு சார்ந்த அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைந்து, வளரும் பருவத்தில் அனைத்து வகை உணவுகளும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடல் வளர்ச்சி திடகாத்திரமாக அமைகிறது. இன்றைய தேதியில், பீடியாட்ரீஷியங்களை மொய்க்கும் ‘யங்’ தாய்மார்கள், “என் பிள்ளைக்கு எந்த ஃபுட்டும் ஒத்துக்க மாட்டேங்குது டாக்டர்.. உடம்பு போடவே மாட்டேங்குது” எனும் புலம்பல்களுக்குப் பின் பச்சிளம் பருவத்தில் பிள்ளைக்கு முறையான தாய்ப்பால் உணவு கிடைக்காததே காரணம்.
  • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில வகையான கேன்சர்கள், பிற்கால வாழ்வில் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் மற்றும் மனச் சோர்வில் இருந்தும் இதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது.

தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கு உண்டாகும் நன்மைகளில் சில:

  • பேறு கால மனச்சோர்வு தொலைகிறது.
  • மார்பகப் புற்றுநோயின் வாய்ப்பு அறவே குறையும்
  • உடல் ஹார்மோன் நிலையில் சமநிலை ஏற்படுவதால், கர்ப்பப் பை பலமடைந்து சீரான மாதவிடாய் ஏற்பட உதவுகிறது.
  • தாய்ப்பால் புகட்டுவதால் (குறைந்தது 6 மாதம் முதல் 18 மாதம் வரை) ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒரு இயற்கையான கருத்தடை உபாயமாக இருக்கிறது. அடுத்த பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போட உதவும்.

மேலே நாம் அடுக்கிய அனைத்தும், நவீன அறிவியலின் ஆய்வு முடிவுகள். ஆனால், ஆய்வுக்கும் அப்பாற்பட்டு, ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உணர்வு ரீதியான தொடர்பை வாழ்நாள் முழுதுமே வலுப்படுத்தும் வல்லமை குழந்தைப்பருவ தாய்ப்பாலுக்கு உண்டு என்பது பத்து பிள்ளை பெற்ற நம் பாட்டிகள் தலைமுறை அனுபவமாய் அறிந்த உண்மையே!

இயற்கை தந்த அமுதம்!

தாய்ப்பால், Breastfeeding in Tamil

ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் பெண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும், டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் ஆண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும்தான், பருவ காலத்தில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏற்படுகிறது.

அதே போல், கர்ப்ப காலம் முழுதும் ப்ரொஜெஸ்டெரோன் எனும் ஹார்மோன் உச்சநிலை பெறுவதால் பால் சுரப்பிகளின் வளர்ச்சி கர்ப்ப காலத்தில் அபரிமிதமாக ஏற்பட்டு பால் சுரக்க தயார் நிலையை அடைகிறது.

இறுதியில், பிள்ளை பேறுக்குப் பின் ப்ரொலாக்டின் எனும் ஹார்மோன் சரியான சமயத்தில் தாயின் இரத்தத்தில் உயர்வதால்தான் குழந்தையின் உயிர் அமுதமாய் தாய்ப்பால் சுரக்கிறது.

பிறந்த குழந்தைக்கு அத்தியாவசிய தேவை இரண்டு...

  • நோய் எதிர்ப்பாற்றல் (Immunity)
  • சுவாசம், இருதய துடிப்பு, ஜீரண மண்டல செயல்பாட்டுக்கு தேவையான சக்தி (Energy)

தாய்ப்பாலின் சத்துக்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் அதன் ஒவ்வொரு சிறிய அம்சமும்கூட குழந்தையின் இந்த இரு தேவைகளை கனகச்சிதமாக நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.

மேலும், குழந்தை கருவிலிருந்து வெளியேறிய அடுத்த கணமே தாய் தன் மாரோடு அணைத்து பால்புகட்ட நவீன அறிவியல் அறிவுறுத்துகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஆச்சரியம் யாதெனில், உள்ளபடி தாய் பால் புகட்டுகிறாள் என்பதை விட, தாய் மயக்க நிலையில் பால் புகட்ட முடியாமல் இருந்தாலும் குழந்தை தானே உறிஞ்சுகிறான் என்பதே உண்மை. எந்த ஒரு பழக்கப்படுத்துதல் மற்றும் பயிற்சி இல்லாமலேயே பால் உறிஞ்சும் திறனை (sucking reflex) ஒவ்வொரு குழந்தையின் DNAவிலேயே பொதித்து வைத்திருக்கும் இயற்கையின் பேரறிவை மெச்சத்தானே வேண்டும்!

ஒரு குறைமாதக் குழந்தை பெற்ற தாயின் பாலுக்கும், நிறைமாதத்தில் ஈன்ற தாயின் பாலுக்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஏனெனில், குறை/நிறை மாத குழந்தைகளின் உடலியல் தேவைகள் வெவ்வேறு. ஒவ்வொரு முறை பால் புகட்டப்படும்போதும், முதல் சில மில்லி பால் அதிக நீர்த்தன்மையுடன் குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும் நொதிகளை அள்ளித் தருகிறது. இவை ஒரு குறிப்பிட்ட அளவு சுரப்பிகளில் இருந்து குழந்தைக்கு சென்றடைந்த பின்னரே அதிக கெட்டித்தன்மையுடன் கொழுப்பு சத்து நிறைந்த பால் சுரக்கிறது. இது ஏனெனில், உயிர் வாழ உடனடி மற்றும் அத்தியாவசிய தேவை குளுக்கோசும், நோய் எதிர்ப்பாற்றல்தான் அல்லவா? உடல் வளர உதவும் கொழுப்பு சத்து முன்னால் வர வேண்டிய அவசியம் இல்லையே!

பால் சுரக்கும் தன்மையில்கூட இயற்கையின் ஆற்றல் அதிசயம்தான்! ஆகவேதான், தாய்மார்கள் ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும், ஒரு மார்பில் முழுமையாய் பால் கொடுத்த பின்னரே அடுத்த மார்பில் புகட்ட வேண்டும். சமச்சீரான வளர்ச்சிக்கு இந்த நடைமுறை அவசியம்.

தாய் எனும் அற்புத உயிர்:

தாய், Mother

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

இந்த வாக்கு பொதுவாக நன்றி மறவாமைக்காக கூறப்படுவது. ஆனால், இதற்கும் ஒரு படி மேலாய் இவ்வாக்கிற்கு உண்மை சாட்சியாய் நிற்பது ஒரு தாயவளின் முலைப்பாலே! ஏனெனில், ஒரு தாயாய் ஒரு பெண் தன் குழந்தைக்கு அளிக்கும் முதல் உண்டிதானே அக்குழந்தையின் உயிரையே காக்கிறது? இதைப் படிக்கும் வளர்ந்த குழந்தைகள் (நீங்கதாங்க...) உங்களை அந்தச் சூழ்நிலையில் இருத்தி உருவகப்படுத்திப் பாருங்கள். உங்கள் தாய் என்கிற அந்த அற்புத உயிரின் மேல் ஒரு நன்றியுணர்வு அனிச்சையாகவே ஏற்படும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தையைக் குழப்பாதீர்!

பொதுவாக தாயின் முலைக்காம்பை பற்றிய குழந்தை தன் தாடையை வலுவாய் அசைப்பதன் (Active Sucking) மூலம் மட்டுமே அவனுக்கு பால் கிடைக்கிறது. ஆனால், இந்த புட்டிகளின் ரப்பர் மூலம் பால் தானாகவே சொட்டுவதால், பிள்ளை தன் தாடையை அசைக்க தேவை இல்லை. ஹாயாக பொக்கை வாயை திறந்தாலே போதும், அவன் பசி அடங்கும். இதனால், ஒரு முறை புட்டிக்கு அவனைப் பழக்கப்படுத்தினால், தாயின் மாரிலும் அவன் பால் தானாக வரும் எனத் தாடை அசைவு ஏற்படுத்தாமல் இருப்பதால் பால் கிடைப்பதில்லை. இதனை மருத்துவ மொழியில் Nipple Confusion என்போம். ஆதலால், புட்டிகளை பணம் கொடுத்து வாங்கும்போது தாய்/சேய் இருவருக்குமே மன குழப்பத்தையும் விலைக்கு வாங்குகிறீர்கள் என அர்த்தம்.

  • 1 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற கிருமித் தொற்றுகளில், 90 சதத்திற்கும் மேல் ஏற்பட காரணம் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத புட்டிகளே என்பதை நினைவில் வையுங்கள்.
  • சுத்தப்படுத்தும் முறை: ஒவ்வொரு முறை பிள்ளை புட்டிப் பால் அருந்தும்போதும் புட்டி. அதன் ரப்பர், உள் மூடி, வெளி மூடி என அனைத்தும் 100 டிகிரி கொதி நீரில், குறைந்தது அரை மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். “இப்ப பாதி சாப்பிடுவான்.. அரை மணி கழிச்சு பாதி சாப்பிடுவான். அதையும் மிச்சம் வெச்சான்னாலும் சாயங்காலம் மீதிய சூடு பண்ணி அதே பாட்டில்ல குடுப்பேன்” என்கிற தாய்மார்களே உஷார்! உங்கள் பிள்ளையின் பேதிக்கு நீங்களே கூட காரணம் ஆகலாம்!
  • ஆக, புட்டியை முறையாய் உபயோகிக்கவும் அல்லது தேவையெனில் எவர்சில்வர் சங்கு/கிண்ணம் பயன்படுத்துவதையே அறிவுறுத்துகிறோம்.

தாய்ப்பால் அதிகரிக்க:

தாய்ப்பால் அதிகரிக்க

இன்று மகப்பேறு மருத்துவர்களிடம் புதுத்தாய்கள் வினவும் பொதுவான கேள்வி “தாய்ப்பால் தேவையான அளவு சுரக்கமாட்டேங்குதோ? பாப்பாக்கு பால் பத்தலயோனு டவுட்டா இருக்கு டாக்டர்...” என்பதே!

இந்தக் கேள்விக்கு எதிர்க் கேள்விகளாய் கீழ்கண்ட இரண்டையும் மருத்துவம் முன் வைக்கிறது.

  • குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாய் 6 முதல் 7 முறை சீராக சிறுநீர் கழிக்கிறானா?
  • பிறந்து 1 மாத முடிவில் குறைந்தபட்சம் 500 கிராம் எடை கூடி இருக்கிறதா?
    இரு கேள்விகளுக்கும் பதில் ‘ஆம்’ எனில் தாய்ப்பால் சரியான அளவில் குழந்தைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

குழந்தை அடிக்கடி அழுவது, குறைவான இரவுத் தூக்கம், விரல்/முஷ்டியை கவ்வியிருப்பது, அடிக்கடி தாய்ப்பால் அருந்துவது, தாய்ப்பால் அருந்துவதற்கு மிகக்குறைந்த அல்லது மிக அதிக நேரம் எடுத்துக்கொள்வது போன்றவை குழந்தையின் இயல்பான சமிஞ்கைகளே! ஆனால், இவற்றையெல்லாம் வைத்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளதோ? என குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.

பொதுவாக 90% தாய்மார்களுக்கு இந்த மனக்குழப்பத்தை முறையாய் தீர்ப்பது மட்டுமே மருந்து.

தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும்? (Thaipal Surakka Enna Sapida Vendum?)

அப்படியும், பால் சுரப்பு குறைவாய் உள்ளோர்க்கு, குழந்தை சரியான முறையில் மார்பை பற்றியிருப்பதை உறுதி செய்தும், வீட்டு சூழ்நிலையில் நிலவும் `ஸ்ட்ரெஸ்` குறைத்தாலே, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தமுடியும். மூலிகை மருத்துவ முறையில், அமுக்கரா சேர்ந்த `தாதுகல்ப லேகியம்`, தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த `சதாவரி லேகியம்` தாய்ப்பால் பெருக்கிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. தரமான, நம்பிக்கைக்குரிய இடத்தில் இவற்றைப் பெற்று உபயோகிக்கலாம்.

சாதாரண உடல் உபாதைகளின்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும்.

“தாய்க்கோ, சேய்க்கோ சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என ஏற்பட்டால் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிட வேண்டுமா?” என்றால், “இல்லை” என்பதே பதில். இன்னும் விளக்குவதெனில், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு சாதாரண நாட்களை விட இந்நாட்களில் அதிக அளவு தாய்ப்பால் தேவைப்படும். இதுவே, அவனுக்கு உயிர்காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வேலைக்கு செல்லும் மகளிருக்கான உபாயம்

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும். காலை ஆபீஸ் செல்லும் முன் ஓரிருமுறை பால் புகட்டியபின், ஒரு சுத்தமான கிண்ணத்தில் முடிந்த அளவு பாலை பீய்ச்சி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சுத்தமான ஸ்பூன் கொண்டு ஊட்டலாம். சாதாரண வெப்பத்தில் 3 முதல் 4 மணி நேரமும், ஃப்ரிட்ஜில் 24 மணி நேரமும், தாய்ப்பால் கெடாது. அலுவலகத்தில் குளிர் சாதன வசதி இருப்பின், இதே முறையில் ஓரிருமுறை இரு மார்பிலிருந்தும் பாலை வெளியேற்றிவிடுவது, மார்பில் பால்கட்டிகள் வராமல் தடுக்கும். ஃப்ரிட்ஜில் குளிர்ந்த தாய்ப்பாலை நேரடியாக சூடு படுத்தாமல், சுடுநீர் கொண்ட பாத்திரத்தினுள் வைத்து, கிண்ணத்தை இயல்பு வெப்பத்திற்கு கொண்டு வரலாம். இரவு நேரங்களில் அதிகமுறை பால் கொடுப்பதும் அவசியம்.

ஆறு மாத காலத்திற்கு பின்?

தாய்ப்பாலுடன் சேர்த்து துணை உணவுகள் துவக்கும் தருணத்தில், நம் பாரம்பரிய `மம்மு` சாப்பாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. ஆம், நம் அரிசி சாதம், பாசிப்பயரு, சுத்தமான உருக்கிய பசு நெய் கலவைக்கு `சூப்பர் ஃபுட்` என அறிவியல் சமூகம் தன் ரப்பர் ஸ்டாம்பை அழுந்த பதிந்துவிட்டது. நீர் ஆகாரமாய் கொடுப்பதைத் தவிர்த்து, பருப்பு சாதம் போல் குழைந்த நிலையில் கொடுக்க வேண்டும். மெல்ல, கோதுமை, கேழ்வரகு, தினை போன்ற தானியங்கள், கீரை வகைகள், எண்ணெய்யில் பொரித்த வகைகளை சிறிது, சிறிதாய் ஊட்டலாம். அசைவ வீடுகளில் மீன், முட்டை போன்றவற்றையும் மெல்ல அறிமுகப்படுத்தலாம்.

பசும்பால், குறிப்பாக பாக்கெட் பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். “அது எப்படி சார், மாட்டுப் பால குடுக்கக்கூடாதுனு சொல்லிப் போட்டிங்கோ?” என சண்டைக்கு வரும் பாக்கெட் பால் குடும்பங்களே, பச்சிளங் குழந்தைகளுக்கு ஒவ்வாமை (ஃபுட் அலர்ஜி) மற்றும் அடிக்கடி ஏற்படும் சளி தொற்றுக்கு, பாக்கெட்பாலின் மேல் ஆராய்ச்சியாளர்களின் சந்தேகம் வலுத்துவருகிறது என்பதை அறிக!

கருவில் பிள்ளை சுமை... மனதில் தொல்லை சுமை... இன்றைய தாய்மை

“உடல்நிலை அளவில், இந்தத் தலைமுறைதான் மிக பலவீனமான தலைமுறையாய் விளங்குகிறது” என சத்குருநாதர் கூறுவதை நினைவிற்கொண்டுதான் தாய்மையையும் அணுகவேண்டியுள்ளது.

நவீன மருத்துவத்தின் நுண்ணுயிர் எதிரி (ஆன்டிபையாடிக்) புரட்சியால் காலரா, ப்ளேக், மலேரியா என மக்கள் கொத்துக்கொத்தாய் கொத்துக் கொத்தாய் மடிந்த நிலை மாறி, மனிதனின் சராசரி ஆயுட்காலம் நீண்டிருக்கிறது. அப்படி இருந்தாலும் முந்தின தலைமுறையிடமிருந்த மன, உடல் திடத்தை கெஞ்சினாலும் இன்றைய தலைமுறை பெற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை.

இது பிள்ளை பெற்ற தாய்மார்க்கும் பொருந்தும்தானே! நிறை மாத நாளிலும், உலக்கை வைத்து நெல் குத்திக்கொண்டு, வயலில் களை பறித்துக் கொண்டு, வலி வந்ததும் போய் சுகமாய் பத்து பிள்ளை பெற்ற பாட்டிக் கதைகளுக்கு இன்றும் நம் தாய்/தந்தை தலைமுறை சாட்சி. ஆனால், இன்று ஒரு குழந்தை பெறுவதற்குள்ளேயே நவீனத்தாய்மார் படும்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

காலமாற்றத்தில், நவீன அறிவியல் உதவியுடன் பேறு கால மரணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டோம். ஆனால், குழந்தை பெறுவது, பராமரிப்பது எனும் இயற்கையாய் நிகழும் ஒரு நிகழ்வின் மீது பெரிய அளவு மனக்குழப்பம், அச்சம், மன அழுத்தம் தற்கால மகளிருக்கு பரவலாக ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டமே.

தாய்மை அடைந்த பெண்ணின் மனதைப் பக்குவப்படுத்த பாட்டி இல்லை, அச்சம் நீக்க அண்ணியோ, அத்தையோ, சித்தியோ கூட இல்லை. குழப்பம் களைய சிலருக்கு மாமியாரோ, தாயோ கூட அருகில் வாய்க்கும் பாக்கியம் இன்றி ஏழு மாதம் வரை (அதுக்கு பிறகுதானேங்க மெட்டர்னிட்டி லீவு!) தனிக்குடித்தனமும், ஐடி வேலையும் என தவிக்கும் பெண்கள்தானே இன்று அதிகம். இதை மீறியும் மன அழுத்தம் களைய அரை குறையாய் தெரிந்து கொண்ட தோழிகளின் செல்போன் கவுன்சிலிங், இன்டெர்னெட்டில் கொட்டிக் கிடக்கும் கோடித் தகவல்கள் என அவை பின் செல்லும்போது, "கொடும, கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க இன்னொரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்" கதையாகிவிடுகிறது.

ஈஷா தாய்மை வகுப்புகள் - வழிகாட்டியும், கைத்துணையும்

ஈஷா தாய்மை, Isha Thaimai

இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாய் சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷாவின் மகப்பேறு மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்டதுதான், ஈஷா தாய்மை வகுப்புகள்!

இன்னொரு உயிர் தன் கருவில் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு தாய்க்கும் உணர்த்தி, தாய் சேய் பந்தத்தை வலுப்படுத்துவதும், கர்ப்ப காலத்தை அத்தாய்க்கு ஓர் அற்புத அனுபவமாய் மாற்றுவதுமே ஈஷா தாய்மையின் நோக்கம்.

தாய்மை வகுப்புகள் கர்ப்பகால பாதுகாப்பு முதல் குழந்தை வளர்ப்பு வரையிலான அடிப்படை விஷயங்களை ஒலி, ஒளி பயிலரங்கங்கள் மூலம் எளிமையாக தெளிவுபடுத்துவதில் தொடங்குகிறது.

தொடர்ந்து இடுப்பு எலும்பு மற்றும் தசைகளை பலப்படுத்தும் எளிய முறை யோகா மற்றும் சக்திமிக்க பிராணாயம, தியானப் பயிற்சிகள் மனதைத் தளர்வாகவும், தனித்த ஆற்றலுடனும் விளங்கச் செய்கின்றன. இயற்கை முறையிலான உணவு குறித்த விழிப்புணர்வு மற்றும் சமையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் கலை மற்றும் கைவினை பயிற்சிகள், புத்துணர்வு தரும் குழு விளையாட்டுகளும் உண்டு. பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர் துணையுடன் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு குழுவாக தங்களுக்குள் பழகி, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு உருவாவதால் அச்சம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க வழிகோலுகிறது.

கர்ப்பகாலத்தில் பின்பற்றப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான பயிற்சி மற்றும் சிந்தனையினால், பிறக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிறப்பாக இருக்க உதவுகிறது.

ஈஷா தாய்மை வகுப்புகள் கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் 25 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால், தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் பலனடைந்து வருகின்றனர்.

தாய்மை வகுப்புகள் உங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என விருப்பம் உள்ளோர், மேலும் தாய்மை வகுப்பை ஏற்று நடத்தி இவ்வாய்ப்பை மேலும் பல தாய்களுக்கு பரிமாறும் விருப்பம் கொண்ட தன்னார்வத்தொண்டர்களுக்கு ஈஷா மையத்தில் குறுகிய கால ஆசிரியர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு: திருமதி. கோகிலாம்பாள் : 94878 95440
ஈஷா ஆரோக்யா: சென்னை : 94425 90099 கோவை : 83000 55555 சேலம் : 94425 48852

தாய்சேய் நலத்திற்காக சித்த மூலிகை மருத்துவம்!

பிரசவ லேகியம்: பாரம்பரியமாக "சௌபாக்ய சுந்தி லேகியம்" எனும் சுக்கு, கொத்துமல்லி, பனைசர்க்கரை, சதகுப்பை, நெய் சேர்ந்த "பிரசவ லேகியம்" 7 மாத கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை தாய்க்குத் தருவது வழக்கம். இதன் மூலம் கர்ப்பச்சூடு குறையும். இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.

பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப்பை மீண்டும் ஆரோக்கியமான முறையில் சுருங்க உதவுகிறது. மலக்கட்டை நீக்குகிறது. செரிமான பாதை தொந்தரவுகள் வராமல் காக்கிறது. இதன் நற்குணம் தாய்ப்பாலிலும் வியாபிப்பதால், குழந்தைக்கும் மாந்தம் முதலான செரிமான கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது. இதனை நம் தமிழக அரசே, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு “தாய்சேய் நல பெட்டகத்தில்” “சுந்தி லேகியம்“ எனும் பெயரில் வழங்குவது வரவேற்கத்தக்கது.

உரை மருந்து: சுட்ட வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கோஷ்டம், நுனா என பல மூலிகைகளை உரைத்து, தாய்ப்பாலுடன் குழைத்துக் கொடுப்பது குழந்தையின் இயற்கை தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. ஏழு நாளில் தொடங்கி 1 வயது வரை தொடர்ந்து கொடுக்க ஏற்றது.

இவை இரண்டும் ஈஷா மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.

நன்றி: சித்த மருத்துவ குறிப்புகள் - மரு. புவனேஸ்வரி, ஈரோடு; மரு.சக்தி, ஈஷா ஆரோக்யா, சேலம்.