சேலம் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர்களுக்கு ஈஷா யோகா
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு பரவலாக எல்லோருக்கும் உள்ளது. தொன்றுதொட்டு வரும் இந்த பாரம்பரிய கலாச்சார அறிவியல் முறை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சற்றும் திசைமாறாமல் தன் முழு நிலையில் இன்றளவும் பேணப்பட்டு லட்சக்கணக்கான மக்களால் அன்றாடம் பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. உள்நிலை ஆனந்தத்திற்கு மிகப்பெரிய உந்துதலாய் அமையும் யோக முறை ஆன்மீக அனுபவத்தையும் தருகிறது. யோக அறிவியலை சாமான்ய மக்களுக்கும் எடுத்துச் சென்றதில் சத்குரு மற்றும் ஈஷா யோக மையத்திற்கு பெரும் பங்கு உண்டு.
இது ஒருபுறமிருக்க யோகாவை சிறைக் கைதிகளுக்கும் கற்றுத்தர முடிவெடுத்த சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளிலும் ஈஷா யோக மையம் சார்பில் யோக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள எவரும் இதில் பங்கெடுக்க முடியும். இந்த வகுப்புகளில் பங்கெடுத்து தங்களின் வாழ்க்கைச் சூழலில் மாற்றம் கண்டவர்கள் ஏராளம்.
இதன் ஒரு பகுதியாக சிறைத்துறைக்கு புதிதாக தேர்வாகி பயிற்சி பெறும் 2-ம் நிலை காவலர்கள் 137 பேருக்கு சிறப்பு யோக வகுப்புகள் ஈஷா யோக மையம் சார்பில் சேலம் மத்திய சிறையில் நடத்தப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி துவங்கி ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த வகுப்பில் முதல் நாளிலிருந்தே சிறைத்துறைக் காவலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விளையாட்டு, சத்குருவின் காணொளிகள் மற்றும் உள்நிலை தியானம் என வரிசைப்படுத்தப் பட்டிருந்த வகுப்புகளில் சில உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு யோகப் பயிற்சி பெற்றனர்.
Subscribe
பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து வந்திருந்தாலும் யோகா என்ற அடிப்படை புரிதலுடன் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கணத்தையும் துடிப்பாகவும் ஆற்றல் மிக்கதாகவும் கையாள்வது எப்படி என்று கற்றறிந்தனர். சத்குருவின் காணொளிகளுக்கு சத்குருவே அவர்கள் முன்னால் இருப்பது போல் பதிலளித்தனர், அவரை குறித்து ஒரு குழந்தையைப்போல ஆர்வமாக பலவற்றை கேட்டறிந்தனர்.
வகுப்பை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் "இந்த வகுப்பு நடப்பதற்கு பல உயர் அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். பங்குபெற்ற சிறை அதிகாரிகளில் பலர் ஆசிரமத்திற்கு தொண்டாற்றுவதை தங்களின் விருப்பமாக தெரிவித்தனர். வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் பல தடைகள் இருக்குமோ என்று அஞ்சினோம். சத்குருவின் ஆசியினால் எல்லாம் சுமுகமாக முடிந்தது. இந்த வகுப்பைப் பொறுத்தவரை நான் ஆதியோகி ஆலயத்தில் தன்னார்வத் தொண்டாற்றுவது போலவே உணர்ந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது."
இந்த யோக வகுப்பு குறித்து பலர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர், சிலரது பகிர்வை கீழே காண்போம்.
ஜான் விஜய்
சேலம்
மன அமைதியை உணருகிறேன், பணியில் பொறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது, அனைவருடனும் அன்பாக இருக்க உதவுகிறது, எந்த மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன், மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளேன். கோபம் மற்றும் துன்பம் வந்தால் எவ்வாறு கையாள்வது என்றும் தெரிந்து கொண்டேன்.
M. மகேந்திரன்
சேலம்
எந்த ஒரு நாளும் இல்லாத அமைதி இந்த ஏழு நாட்களாக என்னுள் இருந்தது, அந்த அமைதி என்னை மகிழ்ச்சியாக இருக்க வைத்தது. இந்த ஏழு நாட்கள் உடல் வலி மற்றும் மனவலியைப் போக்கி ஒரு நல்ல மாணவனாக செதுக்கியது இந்த ஈஷா யோக வகுப்பு.
J. மகேந்திரன்
தூத்துக்குடி
ஏழு நாட்களும் நான் மிகவும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டேன். என் மனம் அமைதியை எப்போதும் எதிர்பார்க்கும். இந்நிகழ்ச்சியும் அதேபோல் அமைதியாக அமைந்தது. நான் மிகவும் கோபப்படும் தன்மை கொண்டவன், ஆனால் இப்போது என் மனதில் கோபத்தன்மை படிப்படியாய் குறைகிறது. நான் பிறர் கோபப்படும்போது கடினமாக நடந்து கொள்வேன். ஆனால் இப்போது மனம் அமைதியாகப்போக நினைக்கிறது. இந்த வகுப்பை ஒருங்கிணைத்து அருமையாக நடத்தி தந்த ஈஷா யோக மைய நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.