சத்குருவுடன் சாமுண்டி மலைப் பயணம்
வாருங்கள் நாமும் பயணிப்போம்... எங்கே? மக்கள் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் கண்டு தரிசிக்க வேண்டும் என்று தணியா தாபம் கொள்ளும் சில இணையற்ற தலங்களுக்கு! ஈஷாவுடன் புனிதப் பயணம்... கைலாஷ் மற்றும் சாமுண்டி
ஈஷா புனிதப் பயணங்கள் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களுக்கும் நமக்கும் இருக்கும் திரையை விலக்கி நமக்கும் இம்மலைகளுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வெறும் பயணங்களாகவோ அல்லது வெறும் சுற்றுலா போன்றோ அல்லாமல் ஒவ்வொரு மனிதருக்கும் மிக அற்புதமான ஆன்மீக பலன்களை வழங்குவதாய் அமைக்கப்பட்டுள்ளது.
கைலாஷ் யாத்ரா
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை ஒருவர் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களில் எல்லாம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு சென்று வருவோரின் அனுபவங்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத உன்னதமாய் அமைந்துவிடுகின்றன. பல்வேறு கலாச்சாரங்கள் கைலாய யாத்திரையை தங்கள் உச்சபட்ச நோக்கமாகவே கொண்டுள்ளன. ஆதியோகியாம் சிவன், புத்தர், ஜைன மத தீர்த்தங்கரர்கள் போன்றோர் தங்கள் ஞானத்தை தேக்கி வைத்த கலை களஞ்சியமாகவும் இதனை நாம் சொல்லலாம்.
சத்குருவின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இப்பயணத்தில் சக்தி வாய்ந்த தியானங்களும், குருவுடனான சத்சங்கங்களும், மலையேற்றங்களும் அடக்கம். சத்குருவின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இப்பயணங்களின் மூலம் இவ்விடங்களின் சக்தி சூழ்நிலையை ஒருவர் உள்வாங்குவது நிச்சயம்.
Subscribe
நீங்களும் இப்பயணத்தில் கலந்து கொள்ளலாம். கைலாய யாத்திரைக்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. ஜுலையில் துவங்கும் இப்பயணத்தில் 5 விதமான குழுக்கள் இயங்கும். தமிழ் அல்லது ஆங்கில மொழி இரண்டில் ஏதாவது ஒரு மொழியை பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்து அக்குழுவுடன் பயணிக்கலாம். முன்பதிவு அவசியம்.
சாமுண்டி மலை
ஈஷாவிற்கும் சாமுண்டி மலைக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. இந்த தொடர்பையும் அங்கே நிலவி வரும் சக்தி சூழ்நிலையையும் ஒருவர் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக சாமுண்டி புனிதப் பயணம் அமையும். சாமுண்டி மலைக்கான புனிதப் பயணம் முதன்முதலாக, வருகின்ற ஜுன் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த வருடத்திற்கான பயணத்தில் மட்டும் சத்குருவுடன் பங்கேற்பாளர்களும் பயணிக்கலாம்.
சாமுண்டி மலை, சத்குருவின் வாழ்வில் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதியாகவே திகழ்ந்திருக்கிறது. 1982ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அன்று, ஒரு வெற்றிகரமான வணிகராய் வலம் வந்த ஜெகதீஷ், சத்குருவாய் உணர்ந்து உருமாறிய அற்புதம் நிகழ்ந்தது. சாமுண்டி மலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தபோது திடீரென்று அவருக்கு, தனக்கும் தன்னைச் சுற்றி உள்ளவைகளுக்கும் எவ்வித வேறுபாட்டையும் பிரித்துணர முடியாமல் எல்லாமும் தானாக, தானே எல்லாமுமாக உணர்ந்தார். பின்னாளில், சத்குரு இந்த அனுபவத்தை விவரிக்கும் போது, "ஏதோ ஒன்று என்னுள் நிகழ்ந்தது... அது என்னவென்று தெரியாது. ஆனால் அந்த தங்கப் புதையலை நான் இழக்க விரும்பவில்லை," என்றே குறிப்பிடுகிறார்.
சாமுண்டி புனிதப் பயணத்தில் மலையேற்றம், கோவில்கள், அரண்மனைகள், நீர்வீழ்ச்சிகள் இவற்றை கண்டுணரும் வாய்ப்பினையும் ஈஷா வழங்குகிறது.
சாமுண்டி மலைக்கான பயணம், ஞானியின் சரித்திரப் பாதையினை அறிந்துக் கொள்ளவும், அதனை உள்வாங்கிக் கொள்ளும் சாத்தியத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.
இந்நிகழ்ச்சிக்கான பதிவு மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தேதியின்படி இப்பயணம் மைசூரில் தொடங்கி மைசூரில் முடிவடையும். பங்கேற்பாளர்கள் இப்பயணத்தில் பங்கேற்க கோவையிலோ, பெங்களூருவிலோ அல்லது மைசூரில் இருந்தோ தங்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க முடியும். முன்பதிவு அவசியம்.
ஈஷாவின் புனிதப் பயணங்களை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் மிகத்தகுதி வாய்ந்த மருத்துவர்கள் ஆகியோர் கொண்ட குழுவால் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன், வெகுநேர்த்தியாக ஒவ்வொரு வருடமும் இப்பயணங்கள் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.
சத்குருவுடனான பயணம் பன்முகத் தன்மை கொண்டதாகவும் அவரின் வழித்தடங்களில் நாம் பிறவிப் பயனை அடையும் வாய்ப்பாகவும் அமைகிறது.
வாழ்வின் உயர் பரிமாணங்களை உணர்ந்து போக, தன்னையுணர்ந்த ஞானியின் அருளுடனும் ஆசியுடனும் இணைந்து போக, ஈஷாவின் புனிதப் பயணங்களுக்கு வாருங்கள்! புண்ணிய பூமியை தரிசித்து தெய்வீகத்தை உணர்ந்து நிறையுங்கள்!