ஈஷா ருசி

நம் பலரின் வீட்டில் எளிதில் தயாரிக்க முடிந்த உணவு. இதனுடன் கடலை கறியும் சேர்த்து உண்டால் அதன் சுவையே தனிதான்! இவை இரண்டையும் தயாரிக்கும் முறையை இங்கே காண்போம்..

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புட்டு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

  • பச்சரிசியை ஊறவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ள வேண்டும்.
  • அதை லேசாக வாணலியில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஆற வைத்து, அதில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பொலபொலவென்று கிளற வேண்டும்.
  • பின்னர் புட்டு குழாயில் ஒரு கரண்டி மாவு அதன் மேல் துருவிய தேங்காய், பிறகு மீண்டும் மாவு, அதன்மேல் தேங்காய் இப்படியே குழாய் முழுவதும் வைத்து ஆவியில் அவிக்க வேண்டும்.
  • எளிமையான இந்த உணவு அவிக்கப்படுவதால் சத்தாகவும், சுவையாக இருக்கும்.
  • இதில் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
  • வேகவைத்த பாசிப்பயிறு மற்றும் பப்படம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
  • இனிப்பு விரும்புபவர்கள் மாவை கிளறும்போதே சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

கடலை கறி

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 150 கிராம்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்திடுங்கள்.
  • அதை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை சேர்த்து வதக்கி எடுத்துக்கொண்டு, இன்னொரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் கடலையை சேர்த்து கிளறி அதில் வதக்கிய இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.
  • இறக்கப்போகும் நேரத்தில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
  • இந்த கறி புட்டுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.