ஈஷா ருசி

இப்போ அடிக்கிற வெயிலுக்கு வெள்ளரிக்காயும், பூசணிக்காயும் சேர்த்துக்கிட்டா உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி உண்டாகும். வெள்ளரிக்காய அப்படியே சாப்பிடாதவங்க யாருமே இருக்க முடியாது. ஆனா சமையலா செய்திருக்கீங்களா? இதோ இப்படி மோர் கறியா உங்களுக்கு அறிமுகப்படுத்துறோம், சாப்பிட்டு பாருங்க.

பூசணிக்காய் ரசவாங்கி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பாசிபயறு - 1 கப்
வெள்ளை பூசணிக்காய் - 1 கீற்று
புளி - நெல்லிக்காய் அளவு
வேர்க்கடலை - கால் கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

அரைக்க:
சிவப்பு மிளகாய் - 10
தேங்காய் - அரை மூடி
சீரகம், மிளகு - அரை டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:

பூசணிக்காயை சுத்தம் செய்து நறுக்கி, வெறும் வாணலியில் வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலையை முதல்நாள் இரவே ஊறவைக்க வேண்டும். சீரகம், மிளகு, மல்லி, மிளகாய் ஆகியவற்றை வாணலியில் வறுத்து, அதில் தேங்காயை சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முளைகட்டிய பாசிப்பருப்பை வேகவைத்து, அதில் ஊறிய வேர்க்கடலையையும் போட வேண்டும். பாதி வெந்ததும் தக்காளியை நறுக்கி போட்டு, வதக்கிய பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்து வேகவைக்க வேண்டும். கமகமவென மணம் வரும். இப்போது இறக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கொட்டி, மல்லி தழை சேர்த்து பரிமாறலாம்.

சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொறுத்தமாய் இருக்கும். இந்த ரசவாங்கி ஆரோக்கியத்திற்கு உகந்தது.

வெள்ளரி மோர் கறி

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 3
தக்காளி - 1
தேங்காய் - அரை மூடி
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
சீரகம் - 1 ஸ்பூன்
தயிர் - 500 மிலி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கசகசா - அரை ஸ்பூன்
பச்சரிசி - அரை கைப்பிடி
முந்திரி - 10
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசி, கசகசா, முந்திரி ஆகியவற்றை ஊறவைக்க வேண்டும். அதில் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை நன்றாக அடித்த தயிருடன் கலந்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காயுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியபின் வேக வைத்த வெள்ளரிக்காயை சேர்க்கவும். பின் தயிர்க் கலவையை அதில் கலக்கவும். சிம்மில் வைத்து சமைக்கவும். கொதிவரக் கூடாது. நுரை கட்டியவுடன் இறக்கவும். அவியல் பதத்தில் இறக்கினால் சுவையான வெள்ளரி மோர் கறி ரெடி.

இதில் தண்ணீர் சேர்த்து குழம்பு பதத்தில் இறக்கினால் மிகச் சுவையான வெள்ளரி மோர் குழம்பு ரெடி.