உலகில் ஒவ்வொரு 6 நொடிக்கும், வயது, ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி யாரோ ஒருவர் பக்கவாதத்தால் இறந்து கொண்டிருக்கின்றார். 60 வயதைத் தாண்டியவர்களின் இறப்பிற்கு பக்கவாதம் இரண்டாவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த பக்கவாதம் வராமல் தடுக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம்.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

பொதுவாக உலகில் அதிகமான இறப்புக்கு மலேரியா, எச்.ஐ.வி., காசநோய் போன்ற நோய்கள்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த மூன்று நோய்களால் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கையை விட பக்கவாதத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதிலிருந்தே இந்த நோயின் கடுமையை அறிய முடியும். இதை நாம் சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தடுக்கவும் முடியும்.

பக்கவாதம் எவ்வாறு ஏற்படுகிறது?

இதை மூளைத் தாக்குதல் (Brain attack) என்றும் கூறலாம். பக்கவாதத்தை ஓரளவு மாரடைப்புடன் ஒப்பிடலாம். மாரடைப்பு எப்படி ஏற்படுகிறதோ கிட்டத்தட்ட அதே முறையில் மற்றும் அதே காரணங்களால் தான் இந்த வியாதியும் ஏற்படுகிறது.

மூளை திறன்பட செயல்பட சீரான இரத்த ஓட்டம் தேவை. மூளையிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்போ, வெடிப்போ ஏற்படும்போது மூளையின் அந்த குறிப்பிட்ட பாகத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளையின் அந்த பாகம் இறக்க நேரிடுகிறது.

பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்பு!

மூளையின் பாகம் மற்றும் அதன் செயல்திறனைப் பொறுத்து, உடல் பாதிப்பு பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ ஏற்படும். பக்கவாதம் ஏற்பட்ட ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கான மூளை செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படாத தன்மை கொண்டதால், பாதிப்பு நிரந்தரமாகிவிடுகிறது. அதனால் சிகிச்சை அளிக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மூளை அதன் செயல்களை இழப்பதால் பாதிப்பு உடலில் வெளிப்படுகிறது. உடலின் செயல்பாடுகள், சிந்தனைகள், கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு மற்றும் பேச்சுத் திறன் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

அறிகுறிகள்...

  • உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ கீழ்க்கண்ட அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்லவும்.
  • உடலின் ஏதாவது ஒரு பகுதியில் கால், கை மற்றும் முகத்தில் மரத்துப் போதல் அல்லது சக்தி இழத்தல்
  • மனக் குழப்பம், பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிரமம்.
  • ஒன்று அல்லது இரண்டு கண்களிலுமே பார்வை இழத்தல்
  • நடப்பதில் சிரமம், தள்ளாடுதல், மயக்கம் காரணமில்லாமல் பொறுக்க முடியாத அளவு அதிக தலைவலி!
உடனடி சிகிச்சையின் அவசியம்

இந்த அறிகுறிகள் ஆரம்பித்த மூன்று மணி நேரத்திற்குள் தகுந்த சிகிச்சை எடுத்தால், பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.

தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், மூன்றில் ஒரு பங்கினர், ஒரு மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் அடையமுடியும். இருப்பினும் நாட்பட்ட தொந்தரவுகள் ஏற்படலாம். நன்கு குணமடைய கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் ஆகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில சமயங்களில் மேற்கூறிய அறிகுறிகள் சில வினாடிகளோ அல்லது நிமிடங்களோ இருந்து, பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பலாம். இதுவும் ஒரு அவசர சூழ்நிலைதான். அலட்சியமாக இல்லாமல் மருத்துவரிடம் செல்லவும்.

பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகள்:
  • உடலில் வலி
  • உடம்பின் ஒரு பாதியில் வலுவின்மை அல்லது வாதம்
  • தள்ளாட்டமான நடை
  • விழுங்குவதில் சிரமம்
  • அசதி
  • தூங்குவதில் சிரமம்
  • மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துக் கொள்வதில் சிரமம் அல்லது இவர்கள் பேசுவதற்குச் சிரமப்படுதல்
  • எழுதப்படிக்க சிரமப்படுவது
  • பார்வையில் கோளாறு
  • மூளையின் செயல்களான ஞாபக சக்தி, மனக்கூர்மை, முடிவு செய்தல் போன்றவற்றில் பிரச்சனை
  • குடல் மற்றும் மூத்திரப்பை கோளாறுகள்
  • உணர்வுரீதியான பிரச்சனைகள், மனச்சோர்வு, பதற்றம், கோபம், சோகம், தன்னம்பிக்கை இழத்தல்
  • உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சமநிலை இல்லாமை

பக்கவாதத்திற்குப் பிறகு மேற்கூறிய அறிகுறிகளால் கோபம், பதற்றம், சோர்வு என கசப்பான பல உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. அவை உங்களின் உடல் மற்றும் மனநல முன்னேற்றத்தைப் பாதிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனத்தையும், சக்தியையும் செலுத்தவும். உங்களை கவனித்துக் கொள்ளும் குடும்பத்தினரிடம் கசப்பை வெளிப்படுத்தாமல் அன்பாக இருக்கவும்.

குடும்பத்தினர், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நோயாளி பின்பற்ற உதவவும்.

அவர்களுக்கு உணர்வுரீதியாக ஆதரவாக இருந்து அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் சோர்வடையாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

அவர்களின் பல செயல்கள் மிகவும் மாறி இருக்கும். (உதாரணம்) இயல்பை விடவும் மெதுவாக செயல் செய்தல் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் போன்றவை. எனவே அதைப் புரிந்து கொண்டு ஆதரவாகச் செயல்படுதல் ரொம்ப முக்கியம்.

தற்போது உங்களுக்கு அதிக பொறுப்புகள் கூடி இருப்பதால், உங்கள் நலனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

தடுக்கும் வழிமுறைகள்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கண்டிப்பாக பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கும்.

வயது அதிகரிக்க அதிகரிக்க பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிக இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணி. பொதுவாக இது எந்த பெரிய அறிகுறியையும் உடலில் ஏற்படுத்துவதில்லை. அதனால் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இதயம் மற்றும் இரத்த நாள நோய், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது முக்கியம்.

மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் உடம்பை பெருமளவில் பாதித்து பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

பெண்கள் கருத்தடை மாத்திரைகளையும் நாளமில்லா சுரப்பிகள் மாத்திரைகளையும், கவனத்துடன் மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே உட்கொள்ளவும்.

புகை பிடித்தல் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. மதுப்பழக்கம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் இந்த பழக்கத்தை நிறுத்துவது அவசியம்.

உணவு மற்றும் உடற்பயிற்சி

  • அதிக நார்ச்சத்துள்ள காய் மற்றும் பழம் உண்ணவும்.
  • ஆரோக்கியமான சமவிகித உணவை உட்கொள்ளவும்.
  • உப்பு மற்றும் கொழுப்பு குறைவான உணவு வகைகளை உட்கொள்ளவும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். இதில் அதிக உப்பு இருக்கும். தொடர் உடற்பயிற்சி பக்கவாதத்தை உண்டாக்கும் காரணிகளைச் சீராக்க உதவும்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனப் பயிற்சிகள் மேற்கொண்டபோது அவர்களின் உடல் ஸ்திரத்தன்மை மற்றும் உடலசைவுகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றொரு ஆய்வு, பக்கவாதத்தால் ஏற்படும் பின் விளைவுகளைக் குறைப்பதற்கு யோகப் பயிற்சிகள் உதவுவதாகக் கூறுகிறது.

முக்கியமாக யோகப்பயிற்சிகள், பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளான அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகக் கொழுப்பு, சர்க்கரை நோய், அதிக உடல் எடை, மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.