“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 16
மும்பையில் இன்று 2ம் நாள். நேற்று சத்குரு பகிர்ந்தது போல், 7 மாநிலங்கள், 4700 கி.மீ, சிற்சிறு ஊர்களில் மண்டபங்களில் மக்களை சந்தித்தது உட்பட 15 நாட்களில் 42 நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மும்பை வந்திருக்கிறோம். இங்கு பொதுமக்கள் பேரணி இன்னும் சற்று நேரத்தில் என்.எஸ்.சி.ஐ உள்ளரங்கத்தில் ஆரம்பிக்க உள்ளது.
மும்பையில் இன்று 2ம் நாள். நேற்று சத்குரு பகிர்ந்தது போல், 7 மாநிலங்கள், 4700 கி.மீ, சிற்சிறு ஊர்களில் மண்டபங்களில் மக்களை சந்தித்தது உட்பட 15 நாட்களில் 42 நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மும்பை வந்திருக்கிறோம். இங்கு பொதுமக்கள் பேரணி இன்னும் சற்று நேரத்தில் என்.எஸ்.சி.ஐ உள்ளரங்கத்தில் ஆரம்பிக்க உள்ளது.
முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
6:00 மணி முதலே அரங்கத்திற்குள் செல்ல காத்திருக்கும் மக்கள்
அரங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது
எப்போது 7:30 மணி ஆகும்? எப்போது நிகழ்ச்சி துவங்கும்? என்ற மக்களின் ஆர்வமான தவிப்பையும் இனிமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது நம் சவுண்ட்ஸ்-ஆஃப்-ஈஷா வின் இசை.
அரங்கத்தில் சத்குரு
சிறப்பு விருந்தினர்கள் வருகை
- ஸ்ரீ வினீத் ஜெயின், நிர்வாக இயக்குநர் – பென்னட் கோல்மன் கோ லிட் (டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பல பத்திரிக்கைகளின் குழுமம்)
- ஸ்ரீ சுதான்ஷு வட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி – வைகாம்18 மீடியா (பி) லிட்
- ஸ்ரீ என்.பி.சிங் , தலைமை நிர்வாக அதிகாரி – சோனி பிக்சர்ஸ் இந்தியா
- ஸ்ரீ அனுபம் கேர் – நடிகர்
- ஸ்ரீமதி அம்ருதா ஃபட்னாவிஸ், முதல்வரின் மனைவி மற்றும் கிராம முன்னேற்ற ஆர்வலர்
- ஸ்ரீ சுதிர் முங்கன்திவார் – நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை அமைச்சர்
பிரஹ்லாத் ஆச்சார்யா – நிழல் ஓவியர்
மரங்களை வெட்டிவிட்டதால், இப்போது நாமும் மற்ற ஜீவராசிகளும் படும் துயரத்தை முதலில் காண்பித்தார். அதன்பிறகு “நதிகளை மீட்போம்” திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், அனைத்து ஜீவராசிகளும் சந்தோஷமாக இருப்பது போன்ற கதையமைப்பில் பிரஹ்லாத் ஆச்சார்யா அவர்கள் நிழற்படத்தை செய்து காண்பித்தார்.
கைலாஷ் கேர் அவர்கள் இசை நிகழ்ச்சி
கைலாஷ் கேர் அவர்கள், அவரே இசையமைத்த ஆதியோகி பாடலையும், பாஹுபலி படப் பாடலையும் பாடினார். பின் மக்கள் விரும்பிக் கேட்ட மற்றொரு பாடலையும் பாடினார். அரங்கமே எழுந்து நின்று ஆடத்துவங்கிவிட்டது.
ஷான், சச்சின் குப்தா மற்றும் குழு
Subscribe
முதலில் ஷான் அவர்கள் குழுவுடன் சேர்ந்து பாடினார். பின் சச்சின் குப்தா, ரீட்டுராஜ், சோனு காக்கர் ஆகியோரும் கலந்துகொள்ள, “ஹோ நதி… ஹான் நதி… ஹோ நதி… நதியான்” என்ற பாடலை எல்லோரும் சேர்ந்து பாடினர். இப்பாடல் நதிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதில் சத்குரு, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அவரது மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ், நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கன்திவார் ஆகியோரும் பாடியுள்ளனர். இப்பாடலைக் கேட்டு மக்கள் மட்டுமல்ல, சத்குரு, சிறப்பு விருந்தினர்கள் எல்லோருமே பாடி ஆடினர்.
“நதிகளை மீட்போம்” தலைப்பில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள்
கேம்லின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஸ்ரீராம் தண்டேகர் அவர்கள், கேம்லின் வர்த்தக தலைவர் சௌமித்ர பிரசாத் அவர்கள் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசளிக்கின்றனர்.
சத்குருவிற்கு “உலக அமைதி தூதர்” பட்டத்தை வாக்ஹார்ட் அறக்கட்டளை வழங்குகிறது
வாக்ஹார்ட் அறக்கட்டளை (Wockhardt Foundation) என்பது நம் தேசிய அளவிலான தொண்டு நிறுவனம். 105 நடமாடும் மருத்துவமனைகளைக் கொண்டு, 18 மாநிலங்களில் 20 லட்சம் கிராம மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதியை இது வழங்கி வருகிறது. மேலும் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், ஒடிஷா மாநிலத்தில் 60,000 கழிப்பறைகளைக் கட்டவும் பொறுப்பேற்றுள்ளது. இதன் அரங்காவலரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான “டாக்டர் ஹூஜ்” என்றழைக்கப்படும் ஹுஜைவா கொராக்கிவாலா அவர்கள் சத்குருவிற்கு “உலக அமைதி தூதர்” பட்டத்தை வழங்கினார்.
சத்குருவிற்கு பட்டம் வழங்கியது பற்றி டாக்டர்.ஹூஜ் அவர்கள்
உலக அமைதி என்பது தனிமனித அமைதியில்தான் பிறக்கிறது. அந்த வகையில் உள்நிலை விஞ்ஞானம் மூலம் பல கோடி மக்களுக்கு உள்நிலை அமைதி கிடைக்க வழி செய்திருக்கும் சத்குருவிற்கு இது மிகமிகப் பொறுத்தமான விருது. இப்போது சத்குரு ஆரம்பித்திருக்கும் இந்த “நதிகளை மீட்போம்” பேரணியும் மிக ஆழமாக, நுணுக்கமாக திட்டமிடப் பட்டிருக்கிறது. விழிப்புணர்வு ஏற்பட்டால், செயல் தானாக பிறக்கும். அதற்கு இப்பேரணி பிரமாதமாக வேலை செய்திருக்கிறது. நீர் தான் உயிருக்கு வாழ்வாதாரம். உயிர்கள் இருக்கும் இடத்தில்தான் எதுவும் நடக்கமுடியும். இதையறிந்து சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த மாபெரும் இயக்கத்தில் நாங்களும் பங்கெடுப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
பிரபல நடிகர் வருண் தவான் அவர்கள்
உண்மையைச் சொல்லவேண்டுமெனில், நான் தற்செயலாக சத்குருவின் பேட்டி ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் நம் நதிகள் அழிந்து கொண்டு வருவதைப் பற்றிக் கூறி, அதற்கான தீர்வாக இப்பேரணி பற்றியும் விளக்கினார். இது மிகப் பிரம்மாண்டமான முன்னெடுப்பு. இது பற்றிய விழிப்புணர்வை நாம் எல்லோருக்கும் பரப்ப வேண்டும். இளைஞர்கள் ஒன்றிணைந்து இதில் செயல்பட வேண்டும். நம் நதிகளையும், நீரையும் காக்கும் நேரம் இது. நதிகள் நம் வாழ்வாதாரம். அவையின்றி நாமும் இல்லை. 80009 80009 என்ற எண்ணிற்கு நான் மிஸ்டு-கால் கொடுத்துவிட்டேன். நீங்கள்?
ஸ்ரீ வினீத் ஜெயின் அவர்கள்
நிர்வாக இயக்குநர் – பென்னட் கோல்மன் கோ லிட் (டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பல பத்திரிக்கைகளின் குழுமம்)
- துரதிர்ஷ்டவசமாக, இன்று ஆறு என்றால் – அசுத்தம், வறட்சி, காணவில்லை. நிலம் என்றால் – வளமின்மை, தரிசு, பயனற்றுப் போனது என்றுதான் கேள்விப் படுகிறோம்.
- முன்காலத்தில் நம் ஆறும், நிலமும் இப்படி இருந்திருந்தால் நம் நாகரிகம் வளர்ந்திருக்குமா?
- நம் முன்னோர்கள் நம்மைப் போல் வாழ்ந்திருந்தால், இங்கு நாம் வாழத்தான் முடிந்திருக்குமா?
- நதியில் நீர் வேண்டும், நிலத்தில் மரம் வேண்டும். இவையிரண்டிற்கும் “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரை சரியான தீர்வு.
- நடப்பதை மட்டும் செய்தியாக வாசிப்பதைவிட, நடக்கவேண்டியவற்றிற்கு முன்னோடியாக இருப்பதே எங்கள் கொள்கை.
- அதன் அடிப்படையில், இப்பேரணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் எங்கள் குழுமத்தின் முழு ஆதரவும் உண்டு.
ஸ்ரீ சுதான்ஷு வட்ஸ் அவர்கள்
தலைமை நிர்வாக அதிகாரி – வைகாம்18 மீடியா (பி) லிட்
- இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்த அரங்கம் நிரம்பியிருப்பதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
- இப்பேரணி வலியுறுத்தும் திட்டப் பரிந்துரை மாபெரும் வேலை. எளிதில் அதை செயல்படுத்த முடியாது. அதுமட்டுமல்ல அது பலன் தருவதற்கும் பல வருடங்கள் ஆகும்.
- என்றாலும், இதை செயல்படுத்தியே ஆகவேண்டும். நம் எதிர்காலம், நம் பிள்ளைகளின் எதிர்காலம், நம் சந்ததியினரின் எதிர்காலம் எல்லாமே இதைச் சார்ந்துதான் இருக்கிறது.
- இப்பேற்பட்ட முயற்சியின் அங்கமாக இருப்பதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
ஸ்ரீ என்.பி.சிங் அவர்கள்
தலைமை நிர்வாக அதிகாரி – சோனி பிக்சர்ஸ் இந்தியா
- நதிகளின் பேர்களைக் கேட்கும்போது, எனக்கு மிகப் பிடித்த பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது – “எங்கு கங்கா, யமுனா, கிருஷ்ணா, காவேரி நதிகள் ஓடுகிறதோ, அதுவே என் பாரத நாடு”.
- இன்று காவேரியின் நிலையை அந்த வீடியோவில் பார்க்கும்போது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.
- சுத்தமான, பசுமையான உலகம் வேண்டும் என்பது எங்கள் சமுதாயப் பொறுப்பில் (CSR) முதன்மையானது.
- அந்த வகையில், “நதிகளை மீட்போம்” பேரணிக்கு எங்களால் முடிந்தவகையில் கைகொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு எங்களுக்கு நீங்கள் வழிகாட்ட வேண்டுகிறோம் சத்குரு.
ஸ்ரீ அனுபம் கேர் அவர்கள் – நடிகர்
- சத்குருவிடம் ஒரு வசீகரிக்கும் தன்மை உள்ளது. இதனால் அவர் எதைக் கையில் எடுத்தாலும், அதை முடித்து விடுவார்…சர்வ சாதாரணமாக.
- நமக்குள் இருக்கும் மனிதம் விழித்தெழவும், மேலும் பண்படவும் வேண்டுமெனில், மெல்லிய காற்று, மழைத்தூரல், மலரும் பூக்கள் ஆகியவற்றை நாம் உணரும் விதமான சூழ்நிலைகளை நாம் உருவாக்க வேண்டும்.
- அதுபோன்ற சூழலில் வளர்ந்தது எனக்குப் பெரும் நன்மைகளைக் கொடுத்திருக்கிறது.
- அப்படிப்பட்ட சூழ்நிலையை நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லவேண்டும். அவ்வாறு நாம் செய்தால், வருங்காலத்தில் நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நம்மை மெச்சுவார்கள்.
- இதன் முதற்கட்டம், மிஸ்டு-கால் கொடுப்பது. தவறாமல் எல்லோரும், உங்கள் குடும்பம், நண்பர்கள் உட்பட எல்லோரும் மிஸ்டு-கால் கொடுங்கள்.
திருமதி.அம்ரிதா ஃபட்னாவிஸ் அவர்கள்
- நதிகளும் நேரமும் ஒன்று என்பர். “நம் கையில் இருக்கும் துளி, முன் சென்றவற்றின் கடைசித்துளி, இனி வரப்போவதன் முதல்துளி” – இது நதி, நேரம் இரண்டிற்குமே பொருந்தும்.
- துரதிர்ஷ்டவசமாக, இப்போது நதிகளில் நீரில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. நதியில் நீரில்லையென்றால் நமக்கு வாழ்வில்லை என்பதால், நதியின் நீர்த்துளி தீரும்போது, நம் நேரமும் முடிவிற்கு வந்துவிடும்.
- அதனால் நதிகளில் நீர் ஓடுவதற்கு நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.
- மற்றுமொன்று, இந்த நிலம் நம் பாட்டனார் சொத்தல்ல… நம் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் பரிசு (அ) அவர்களிடம் இருந்து நாம் பெற்றுள்ள கடன். இதை நன்றாகப் பராமரித்து அவர்கள் கையில் நாம் ஒப்படைக்க வேண்டும்.
- இதற்கு வழிகாட்டியாக சத்குரு நம்முடன் இருக்கிறார். வேறென்ன வேண்டும் நமக்கு? இப்போது மிஸ்டு-கால் கொடுக்கவும், பின் மரம் நடவில் முங்கன்திவார் அவர்களுக்கு உறுதுணையாகவும் நாம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கன்திவார் அவர்கள்
மஹாராஷ்டிரத்தில் வனத்துறை என்று ஒரு துறை உள்ளது என்பதே இவர் வந்தபிறகுதான் பலருக்கும் தெரிகிறது என்று சொல்கிறார்கள். சென்ற வருடம் 2.83 கோடி மரங்களும், இந்த ஆண்டு 5.43 கோடி மரங்களும் நட்டு, அவற்றைப் பராமரித்துக் கண்காணிக்கத் தேவையானதை இவர் செய்து வருகிறார். 3 வருடங்களில் 50 கோடி மரம் நடும் திட்டத்தில் இவ்வருடம் 4 கோடி, 2018ல் 13 கோடி, 2019ல் 33 கோடி என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் இவர், இவ்வருடத்திலேயே 5.43 கோடி மரநடவு செய்துள்ளார். இவர் கூறியதாவது:
- இந்த மாபெரும் முயற்சியை மேற்கொண்டதற்கு, எங்கள் அரசாங்கத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி சொல்வதற்கே நான் இங்கு வந்திருக்கிறேன் சத்குரு.
- இப்பணியில் நாங்கள் உங்களுடன் சேர்ந்து நிற்போம். இது நதியைக் காக்கும் பேரணியல்ல, தாயைக் காக்கும் பேரணி. ஒவ்வொரு ஊரிலும் ஓடும் நதிதான், அங்கு உயிர்களை சிருஷ்டிக்கும் தாயாக உள்ளது.
- இந்த முயற்சி, நாம் இப்பூமிக்கு பட்ட கடனை திருப்பிக் கொடுக்கும் சகாப்தத்தின் ஆரம்பம்.
- எல்.ஐ.சி மட்டுமல்ல, நதிகளும் நம் வாழ்விற்கான காப்பீடுதான்.
- பூமியை மீட்க மரங்கள் நடவேண்டும், நதியை மீட்க 80009 80009 ற்கு மிஸ்டு-கால் கொடுத்தால் போதும்.
- நதிகளை மீட்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள், அதை செய்வதற்கு நாங்கள் உங்களுடன் இருப்போம்.
சத்குரு அவர்கள் பேச்சு
- அமைச்சர் முங்கன்திவார் ஒரு பசுமை வீரர். தெரியாமல் அவர் கையில் நிதித்துறையையும் கொடுத்துவிட்டார்கள். இப்போது அவர் அதை வனங்களுக்கு நல்லவிதமாகப் பயன்படுத்துகிறார்
கங்கையின் நிலை:
- நம் நாட்டில் நதிகளை தெய்வத்திற்கு ஈடாக வணங்குவோம். அதிலும் கங்கை நதிபோல் புனிதம் கிடையாது என்று இறக்கும் தருணத்திலும் "கங்கா ஜலம்" குடித்தே உயிர் விடுவோம்
- ஆனால் இன்று அதன் நிலை?
- எனக்கு 19-20 வயதிருக்கும்போது சிப்கோ மூவ்மெண்ட்-ஐ ஆரம்பித்த சுந்தர்லால் பஹுகுணா அவர்களை சந்திக்கச் சென்றேன். ஆனால் முடியவில்லை. அவர் இமய மலையின் நிலை பற்றிய கோவத்தோடு இறந்தும்போனார்
- அக்காலத்தில் நம் இரயில் தண்டவாளம் அமைக்க கிட்டத்தட்ட 5 கோடி வளர்ந்த மரங்களை இமய மலையில் இருந்து வெட்டி எடுத்தார்கள்
- சிறிது காலத்தில் கான்கிரீட் வைத்தும் அதை சுலபமாக செய்யலாம் என்று புரிந்து கொண்டார்கள். ஆனால் வெட்டிய மரங்களுக்கு ஈடுசெய்ய விட்டுவிட்டார்கள்
- அப்பகுதியில் மட்டும் கங்கை நதிக்கு 800க்கும் மேற்பட்ட கிளைநதிகள் இருந்தது.
இதன்பிறகு அதில் 470 கிளைநதிகள், பருவகாலத்தில் மட்டும், அதாவது 3-4 மாதங்கள் மட்டும் ஓடுவதாக ஆகின - கங்கையின் நதியின் வடிநிலம், நம் நாட்டின் 25% நிலப்பரப்பளவு. இங்கு 30 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இது கிட்டத்தட்ட அமெரிக்க நாட்டின் மக்கட்தொகை. நம் நாட்டு விவசாயத்தில் 33% இங்குதான் நடக்கிறது.
- இந்த நதியின் நீரோட்டம் கடந்த 50 வருடங்களில் 44% குறைந்திருக்கிறது. அதன் நிலை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. அதற்கு பூஜைகள் செய்கிறோம். அடுத்த நிமிடம் எதுவும் யோசிக்காமல் அதிலேயே துப்புகிறோம். அதில் அழுக்கும், அசுத்தமும் நிரம்பி உள்ளது
- இதையெல்லாம் மாற்றும் நேரம் வந்துவிட்டது
மாசு, அசுத்தம்:
- நதிகளில் மாசும், அசுத்தமும் பெரும் பிரச்சினையாக மக்கள் பேசுகிறார்கள். அது பிரச்சினைதான்.
- ஆனால் அரசாங்கம் மனம் வைத்தால் மூன்றே வருடங்களில் எல்லா நதிகளையும் சுத்தம்செய்ய முடியும். அதற்குத் தேவையான திட்டங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளன
- இப்போதிருக்கும் பெரிய பிரச்சினை நீரோட்டம் குறைந்திருப்பதுதான்.
- வெறும் 15 ஆண்டுகளுக்குமுன் 1 மைல் அகலத்திற்கு பிரம்மாண்டமாக ஓடிய காவிரி நதி, இன்று சிற்றோடைபோல் ஓடுகிறது - மழைக்காலத்திற்குப் பின்!
- இது பொழுதுபோக்க பேசும் விஷயமல்ல. மிகமிகப் பெரிய பிரச்சினையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம்
- நடந்திருக்கும் சீர்கேடு, சிதைவு மிக அதிகமாக உள்ளது. இதை ஒருநாளில் சரிசெய்துவிட முடியாது. சில வருடங்கள் ஆகலாம். ஆனால் அதற்குத் தீவிரமான செயல்பாடு தேவை.
நம் நிலம் மிக வேகமாக புத்துயிர் பெற வல்லது:
- நம் நாட்டில் இருக்கும் உயிரின வகைகள், உயிரின அடர்த்தி மிக அதிகம்.
- இதனால்தானோ நம் நிலங்கள் மிக வேகமாக புத்துயிர் பெற்று மீண்டு வருவது சாத்தியமாக இருக்கிறது
- இவ்வுலகில் நம் நாட்டின் நிலப்பரப்பு வெறும் 4%. ஆனால் நம் நாட்டில் தென்படும் உயிரின வகையில் 10%கூட வட அமெரிக்காவில் கிடையாது
- இது ஏன் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் இதனால் நம் நிலங்கள் வேகமாக மீண்டு வருவது சாத்தியப்படும்
- நம் முனிவர்கள் இதை புண்ணியபூமி என்று சொன்னது இதனால்தானோ?
- உலகில் வேறெங்குமே இந்தளவிற்கு இயற்கை வளம் சீர்குலையவில்லை. அதேபோல் வேறெங்குமே இவ்வளவு எளிதாக அதை நாம் சீர்செய்யவும் முடியாது
அரசியல்வாதிகளுக்கு நன்றி:
- கடந்த ஆறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி, நதிகளை மீட்கும் எண்ணத்தில் அவர்கள் ஒரே குரலாக ஒலிக்கிகிறார்கள்.
- அடுத்து ஆட்சி அமைப்பது யாராக இருந்தாலும், இந்தத் திட்டப்பணியை தடையின்றி நாங்கள் எடுத்துச் செல்வோம் என்கிறார்கள்.
- சிறுசிறு பிரச்சினைகளுக்கு சண்டை போட்டுக் கொண்டாலும், தேசம் என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நிற்பது அபாரம். இதுவே நம் பாரதம்.
தீர்வு:
- நதிகளின் இருபுறமும் 1 கிமீ மரநடவு செய்தால் போதுமா? நிச்சயம் போதாதுதான்.
ஆனால் முதற்படியாக இதையேனும் முதலில் செய்வோம் என்கிறேன். - நம் நாட்டில் நதிகள் 20,000 கிமீ ஓடுகின்றன. இதில் அரசாங்கத்தின் வசம் 25% உள்ளது. அதில் எவ்வித சமரசமும் இன்றி காடுகள்தான் வளர்க்கவேண்டும்.
- 6-8% டெல்டா நிலம். அதை நாம் ஒன்றும் செய்யவேண்டாம்.
- மீதமுள்ள 67%, 14,000 கிமீ விவசாயியின் கையில் உள்ளது. நதியின் இருபுறம் என்றால் 28,000 சதுர கிமீ. இதில் விவசாயிகளுக்கு பொருளாதார இலாபம் கிடைக்கும் விதமான பழமரங்கள், மருத்துவ மரங்களை சரியான பாசன வழிகாட்டுதலோடு பயிரிடலாம்
- இதில் விவசாயிகள் இறங்குமுன், அப்பழம், மருத்துவச் செடிகளை விற்பனை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் வரவேண்டும். அதற்காக இந்திய தொழிற் சங்கத்தில் (CII) பேசியிருக்கிறோம். விவசாயிகளுக்கு முன்பாக, அவர்கள் இதில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதால், விவசாயிகள் தயக்கமின்றி தெம்பாக இதில் இறங்கலாம்.
- இதனால் விவசாயிகளின் வருமானம், 5-6 வருடங்களில் 3-8 மடங்கு அதிகரிக்கும்.
- ஆந்திரப் பிரதேசத்தில் விவசாயிகளுக்கு காப்பீடாக, குளிர்வைப்பறைகளை அரசாங்கம் நிறுவியுள்ளது. இதுபோல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கத் தேவையான வசதிகளை நாம் செய்யவேண்டும்.
வேண்டுகோள்:
- செப் 24: சர்வதேச நதிகள் தினம்
- அன்று மத்தியபிரதேசத்தில் மஹேஷ்வர் நதிக்கரையில் இருப்பேன்.
- நீங்களும் உங்கள் அருகில் ஓடும்/ஓடிய நதி எதுவாக இருந்தாலும் அதைக் காண யாத்திரை செல்லவேண்டும்
- இன்றைய இளைய சமுதாயத்தில், 20 வயதிற்குக் கீழ் இருப்பவர்களில் 80% பேர் நதிகளைப் பார்த்ததில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன.
- இதை நாம் மாற்ற வேண்டும். இது மிகவும் முக்கியம்
- இப்போது அந்த நதிகள் சாக்கடை போன்று அசுத்தமாக இருக்கலாம். ஆனால் அது மீண்டும் உயிர்பெற்று சுத்தமான நதியாக ஓடும். அதுவரை இதை வருடாந்திர யாத்திரையாக செய்யுங்கள்
- இரவு உண்பதற்கு முன் 20 நொடி
- உங்கள் தட்டில் இருக்கும் உணவும், குடிக்கத் தண்ணீரும் இன்றி இன்று பலர் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் செய்துகொள்ளுங்கள்
- இது உங்கள் உணவைக் கெடுப்பதற்கு அல்ல. மற்ற விலங்கினங்கள் போல் இல்லாமல், ஒரு முழு மனிதனாக உங்கள் உணவை நீங்கள் உண்ணவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்
- அக்டோபர்-2 வரை உங்கள் அளவில் சிறிய பேரணிகள்
- அக்டோபர் 2 வரை இப்பேரணியை மிகத் தீவிரமாக எடுத்துச் செல்லவேண்டும்.
- நடந்தோ, ஓடியோ, சைக்கிளிலோ. மோட்டார் சைக்கிளிலோ உங்கள் பேரணியை நீங்களே தேர்வுசெய்து நடத்துங்கள்
- உலக வங்கியில் பேசி நிறுவன சமுதாய பொறுப்பிற்கு(CSR) தவணைகளில் கொடுக்கப்படும் நிதியை ஒரேதவணையில் கொடுக்கக் கேட்டிருக்கிறோம்
- 3 நதிகளுக்கான நிதித் தேவையை வழங்க சில நிறுவனங்கள் ஏற்கெனவே உறுதியளித்துவிட்டன
- ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் எனக்கு 100 இளைஞர்கள் தேவை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருவேளை உணவு, படுக்க இடம் தருகிறேன். எனக்கும் அவ்வளவுதான் கிடைக்கிறது. இதைச் செய்வதற்கு எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள்
- மும்பை பெரிய நகரமாயிற்றே! இங்கிருந்து எனக்கு 200 இளைஞர்கள் வேண்டும். வருவீர்கள் தானே?
இதை நிகழச் செய்யுங்கள் மும்பை!
பேரணிக்கு ஆதரவு
சத்குரு விடைபெற்றுக் கிளம்புகிறார்
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, சத்குரு கிளம்புகிறார். நாளை அதிகாலை அஹமதாபாத் நோக்கி பயணம் ஆரம்பம். அஹமதாபாத்தில் 20ம் தேதி மாலை பேரணி. வழியில் சுவாரஸ்யமான விஷயங்களுடன் உங்களை சந்திக்கிறோம்!