"கேரளாவில் மழையாம்! குற்றாலத்தில் சாரலாம்! இங்கே வெயில் வாட்டி எடுக்கிறது." இதுபோன்ற புலம்பல்களைத்தான் தமிழகமெங்கும் ஏகமாகக் கேட்கிறோம். தமிழகத்தில் எதிர்வரும் மழைக்காலத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால், வரும் காலங்களில் மழையின் அளவும் பசுமையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு, ஈஷா பசுமைக்கரங்களின் சில வழிகாட்டுதல்கள்!

கோடை காலம் ஒரு வழியாக விடைபெற்றாலும் இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. காலம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது, தட்பவெப்ப மாறுதல்கள் சீராக மாறுவதில்லை. பூமி வெப்பமடைவதாகச் சொல்லி அறிவியலாளர்களும் ஊடகங்களும் அவ்வப்போது அபாயச் சங்கை ஒலித்தவண்ணம் உள்ளனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்க்கையில், இரண்டு முக்கிய காரணங்கள் கிடைக்கின்றன. ஒன்று, மக்கள் தொகைப் பெருக்கம். இன்னொன்று, மக்கள் தொகைப் பெருக்கத்தால் அழிக்கப்பட்ட காடுகள்.
இந்நிலை தொடர்ந்தால், அடுத்த சில வருடங்களில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ஆனால், நாம் இப்போது நினைத்தால் கூட இந்நிலையை மாற்றி தமிழகத்தை பசுமையாக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்வரும் மழைக்காலத்தை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். வருகின்ற மழைக்காலத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்கிட வேண்டும். அதற்கு ஈஷா பசுமைக் கரங்கள் உங்களுக்கு துணை நிற்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா பசுமைக் கங்கள் திட்டம்
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளை, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5.00) வழங்கி வருகிறது.

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை,இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.
ஈஷாவின்வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள்.

வரப்பு ஓரத்தில் வருவாய்

விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்புள்ள, அதிக நிழல் விழாத மரங்களை நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கனிசமான வருவாயை ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். 10 வருடங்களில் ஒரு மரம் ரூ.5,000/- என்று மதிப்பு வைத்தால் கூட, ரூ. 4 லட்சம் வருவாயாக கிடைக்கும். அனைவரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் நமக்கு வருவாயும் நாட்டிற்கு பசுமைப்பரப்பும் அதிகரிக்கும்.

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது. எதிர்வரும் மழைக்காலத்தில் இன்னும் அதிகமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள்.

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே. 94425 90062