வேற்றுகிரக வாசிகள் பற்றி மேலும் பல ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள் இந்த வாரப் பகுதியில் தொடர்கிறது. தங்க அன்னப்பறவை, ஏரியில் விழும் நட்சத்திரங்கள் என சத்குரு சொல்வதைக் கேட்கும்போது, எப்படியும் நம் வாழ்நாளில் ஒருமுறையாவது கைலாஷ் யாத்ரா மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாகிறது...

கைலாஷ் யாத்ரா - பகுதி 7

டாக்டர்.ராதா மாதவி:

மானஸரோவர் கரையில், மாலை நேர சத்சங்கத்தில், சத்குரு அடுத்த நாள் காலை சத்சங்கத்துக்குத் தயார்படுத்த பெண்கள் அனைவரையும் இடது கை மோதிர விரலால் விபூதியை எடுத்து முழங்கை வரை ஒரு கோடாக வைத்துக்கொள்ளவும், ஆண்களை அதே விதமாக வலது கையில் வைத்துக்கொள்ளவும் சொன்னார். பின்னர் அமர்ந்து, முத்ரா எதுவும் இல்லாமல் கைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ளுமாறும், அடுத்த 20 நிமிடத்துக்கான குறிப்புக்களையும் சத்குரு கூறினார். குறிப்புகள் தந்த பின், கேள்வி பதில்கள் தொடர்ந்தன.

“மானஸரோவர் கரையில் உடன் வந்த பாரதிக்கு ஏற்பட்ட அனுபவம் எங்களுக்கும் சாத்தியமா?” என்றார் ஒரு அன்பர்.

“இரவில் இந்த ஏரியில் தங்க அன்னப் பறவைகள் வந்து செல்கிறதாமே! நாங்கள் அவற்றைக் காண முடியுமா?” என்றார் ஓர் அன்பர். “ஆமாம்!” என்றார் சத்குரு.

“அதுதான் நோக்கமே! அந்த சூழ்நிலையைக் கையாள, பலவற்றைச் செய்ய வேண்டிவரும். ஆனால், பாரதி பல ஆத்ம சாதனைகளைச் செய்து தயார் நிலையில் இருப்பவர். எப்படி வேண்டுமானாலும் பரீட்சித்துப் பார்க்க இயலும்.

எல்லோரையும் அப்படித் தயார்படுத்த எனக்கு விருப்பம்தான். ஆனால் அதற்கு பலவற்றைச் செய்தாக வேண்டும். இருந்தாலும் எதையும் உணராமல் இங்கிருந்து நிச்சயமாக நாம் நகரப்போவதில்லை. எந்த அளவுக்கு என்பதை, பாதுகாப்பு எல்லைகளைக் கொண்டு நிர்ணயிக்கலாம்“ என்றார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மானசரோவரில் தங்க அன்னப்பறவை…!-1

அடுத்துப் பேசிய அன்பர் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். கண்களில் கண்ணீர் வெள்ளம். “சத்குரு, உங்கள் அருளால் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம். உங்களோடு வந்தது மிகப் பெரும் பாக்கியம். உங்களோடு இங்கே வர வேண்டும் என்று என் இதயம் கதறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். என்னை அழைத்தும் வந்துவிட்டீர்கள். நன்றி... நன்றி” என்று நமஸ்கரித்தார். சத்குரு அவரை ஆசீர்வதித்தார்.

மிகப்பெரும் அளவில் அவை இங்கே வந்து செல்வதை இப்போதே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது வாழ்வின் மிகப் பெரும் நடனம். அவை நம்மைப் போன்றவை அல்ல.

அடுத்த கேள்வி புறப்பட்டது... “இரவில் இந்த ஏரியில் தங்க அன்னப் பறவைகள் வந்து செல்கிறதாமே! நாங்கள் அவற்றைக் காண முடியுமா?” என்றார் ஓர் அன்பர்.

“ஆமாம்!” என்றார் சத்குரு. “ஆனால் தங்க அன்னங்கள் வந்து செல்கின்றன என்ற கதையைச் சிறிது கவனிக்க வேண்டும். தங்கம் என்பது மனிதர்களுக்கு மதிப்பானது. சொர்க்கம் முழுக்க தங்கத்தால் ஆனது என்பது மனிதர்களின் கற்பனை. தங்கம் என்றாலே மனிதனைப் பொறுத்தவரை மதிப்பானதுதான். உலகின் பல கலாச்சாரங்கள் தங்கத்தை அறிந்திருக்கவில்லை.

அவர்கள் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். தங்கம் மிக அழகானது என்பதால் நீங்கள் அதை மதிப்பதில்லை. அது மிகவும் விலையுள்ளது என்பதால் மதிக்கிறீர்கள். இது பொருளாதாரச் சூழல் சார்ந்தது. ஏனென்றால் உலகின் பெரும்பகுதி வறுமையாய் சூழப்பட்டிருக்கிறது. எனவே தங்கம் மதிப்பானதாகிவிட்டது.

வானின் நீலமும், மலையின் வெண்மையும், புல்லின் பசுமையும் தங்கத்தைவிட அழகானவை இல்லையா? உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். நீங்கள் பேராசை பிடித்தவர் என்றால் தங்கம் மட்டுமே அழகு. எனவே தங்க அன்னங்கள் என்று எதுவும் இல்லை.

ஆனால் கதையில் அன்னங்கள் என்று குறிப்பிடப்படுவதால், அவை தூய்மையான உயிர்களாக இருக்கலாம். இந்த பூகோளத்துக்குச் சொந்தமில்லாதவையாக இருக்கலாம். அவை எங்கும் உள்ளன. சிலர் அவற்றை அன்னங்களாகச் சித்தரித்திருக்கலாம்.

எனவே, நள்ளிரவில் எழுந்து போய் ஏரியில் அன்னத்தைத் தேடாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் நாளை காலை நடக்கும் சத்சங்கத்துக்கு வர வேண்டாம். கற்பனையில் மிதப்பவர்கள் எனக்குத் தேவைப்படுவதில்லை. பெறுகிற தன்மை மிகுந்தவர்களே தேவை.

அன்னங்களையும் தேவதைகளையும் தேடுபவர்களும், சிவனும் பார்வதியும் மேகத்தில் மிதப்பதாகக் கற்பனையில் சிறகடித்துப் பறப்பவர்களும் நமக்குத் தேவை இல்லை,” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.

மற்றொரு அன்பர், ‘‘தங்க அன்னங்கள் வந்து செல்வதைப் போல, இரவில் ஏரியில் நட்சத்திரங்கள் விழுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்,’’ என்றார். சத்குரு, ‘‘அது சாத்தியம்தான்’’ என்றார். “இங்கே  நடப்பதைப் பார்க்கும் திறன் உள்ளவர்கள், ஏரியில் தொடர்ந்து வந்து செல்லும் உயிர்களை நட்சத்திரங்களாகப் பார்த்திருக்கலாம்“ என்று கூறினார்.

“மிகப்பெரும் அளவில் அவை இங்கே வந்து செல்வதை இப்போதே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இது வாழ்வின் மிகப் பெரும் நடனம். அவை நம்மைப் போன்றவை அல்ல. வேறு உலகுக்குச் சொந்தமானவை.

ஆனால் கடந்த காலத்திலும் இங்குள்ள நிகழ்வுகளைப் பலரும் பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த இடத்தை இவ்வளவு புனிதமானதாக, முக்கியமானதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

அடுத்த கேள்வி அவரைப்பற்றியதாக இருந்தது. “தியானலிங்கப் பிரதிஷ்டைக்குப் பின்னர், உங்கள் சக்தி உடல் சிதைவுற்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே இருப்பதால் அந்த உயிர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா?”

சத்குரு பேசத் தொடங்கினார், “பிரதிஷ்டை காலத்தில் உடன் இருந்தவர்கள் என் உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை நன்றாய் அறிவார்கள். என் உடல் இந்த உலகைச் சேர்ந்தது. ஆனால் இங்குள்ள உயிர்கள் இந்த உலகைச் சேர்ந்தவை அல்ல. எனவே சிதைவுற்ற என் உடலை மறு கட்டுமானம் செய்ய இவை பயன்படும் என எனக்குத் தோன்றவில்லை.

இவற்றால், மனிதர்களால் செய்ய முடியாததைச் செய்ய முடியும். ஆனால் அவற்றிலிருந்து சில உயிர்களைத் தேர்ந்தெடுக்க நமக்குப் பல காலம் ஆகலாம். ஏனென்றால் அவை கூட்டம் கூட்டமாய் வருகின்றன. மனிதர்கள் அப்படி வருவதில்லை.

நாம் பார்க்க வேண்டியதெல்லாம், இவை அற்புதமானவை என்பதைத்தான். சற்று முன்னர் தான், நான் காரில் பயணிக்கும் போது முருகரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவரை ஆறுமுகன் என்றும் சொல்வர். அவர் ஆறு உயிர்களும் ஒன்று சேர்ந்தவர்.

ஆனால் இங்கிருப்பவை அப்படியல்ல. கூட்டம் கூட்டமாய் ஒன்று சேர்ந்துள்ளன. ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்படித்தான் அவற்றால் பயணம் செய்ய முடியுமா, தெரியவில்லை. அவற்றை உபயோகப்படுத்தும் முன்னர், பெருமளவில் புரிதல் தேவை.

அவை மிக எளிதாகக் கிட்டிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஒருவார காலம் நான் இங்கே இருந்தால், அவற்றில் ஒன்றை என்னால் என்னோடு அழைத்துச் செல்ல முடியும். ஏனென்றால் நான் உருவாக்கிய அழைப்பை, அதன் அமைப்பை, அவற்றால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு கணம்கூட அவை தாமதிக்கவில்லை. எனவே அவற்றுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு சரியான ஒரு தரமான கொள்கலன்தான். அப்படி இருந்தால், அவற்றை அதில் தக்கவைக்க முடியும்” என்றவர், அடுத்த நாள் சத்சங்கத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, “தயவுசெய்து இன்று யாரும் என் அருகில் வரவோ, என்னோடு பேசவோ, என் காலில் விழவோ வேண்டாம். காலையில் சந்திப்போம்“ என்று விடைபெற்றார்.

நாங்கள் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட ஆத்ம சாதனையை ஆரம்பித்தோம்!

பயணம் தொடரும்...