கைவிரித்த மருத்துவர்; காப்பாற்றிய குருவருள்!
சத்குரு வழங்கும் வாக்குறுதிகள் பொய்க்காது என்பதற்கு இங்கே ஒரு தன்னார்வத் தொண்டரின் அனுபவம் சான்றாக அமைகிறது. ‘தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் கரங்களை இழந்தால் என் கரங்களைத் தருகிறேன்; கால்களை இழந்தால் என் கால்களில் நடக்கலாம்!’ இந்த வாக்கு இவருக்கு எப்படி உண்மையானது...? தொடர்ந்து படித்தறியுங்கள்!
சத்குரு வழங்கும் வாக்குறுதிகள் பொய்க்காது என்பதற்கு இங்கே ஒரு தன்னார்வத் தொண்டரின் அனுபவம் சான்றாக அமைகிறது. ‘தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் கரங்களை இழந்தால் என் கரங்களைத் தருகிறேன்; கால்களை இழந்தால் என் கால்களில் நடக்கலாம்!’ இந்த வாக்கு இவருக்கு எப்படி உண்மையானது...? தொடர்ந்து படித்தறியுங்கள்!
திரு. ஜீவபாரதி:
என் பெயர் ஜீவபாரதி. ஈஷா யோகா மையத்தில் ஆசிரியர் பயிற்சியில் இருந்து கொண்டு முழுநேர தன்னார்வத் தொண்டராக செயல் செய்து வருகிறேன். இங்கே எனது சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
Subscribe
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்டு 30 அன்று விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சிறு விபத்தில் எனது வலது முழங்காலில் அடிபட்டு 3 சவ்வுகள் கிழிந்துவிட்டது. அதில் ஒரு முக்கியமான சவ்வு துண்டிக்கப்பட்டுவிட்டது. மருத்துவ பரிசோதனையில் 99 சதவிகிதம் ஆபரேசன் செய்ய வேண்டும் என கோவையிலுள்ள ஒரு பிரபல மருத்துவர் மிகவும் அழுத்தமாக கூறினார். மேலும், ஆபரேசன் செய்தாலும் முழுமையாக கால் சரியாகிவிடும் என்று கூற முடியாது என்றார். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை, எனது வாழ்க்கையே முடிந்து போனது போல் உணர்ந்தேன். நான், எனக்கு யோகா கொஞ்சம் தெரியும், அதில் ஏதாவது சரி செய்ய முடியுமா? அல்லது மாவு கட்டு போட்டு சரி செய்ய முடியுமா? என கேட்டேன்.
அதற்கு அவர் சிரித்துவிட்டு சற்று கருணையோடு கூறினார், "உங்களுக்காக வேண்டுமானால் சற்று ஆறுதலான பதில் கூறுகிறேன், 95 சதவிகிதம் ஆபரேசன்தான் செய்தாக வேண்டும்" என்றார். "அதுவும் இப்பொழுது செய்ய முடியாது. கால் மிகவும் பலமிழந்து வீக்கமாக உள்ளது. அதனால் 21 நாட்கள் கழித்து ஆபரேசன் செய்யலாம். அதற்கு குறைந்தது ரூ.60000 வரை செலவாகும்" என்று கூறினார்.
நான் இறுதியில் அவரிடம் கேட்டேன், ஏன் நீங்கள் முதலில் 99 சதவிகிதம் என்றுதான் கூறினீர்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் 100 சதவிகிதம் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறலாமே? என்றேன். அதற்கு அவர், மருத்துவ துறையில் நாங்கள் எப்பொழுதும் அவ்வாறு கூற மாட்டோம். ஏனெனில் சில நேரங்களில் அற்புதங்கள் கூட நிகழ்கின்றன (Medical Miracle). அது மருத்துவத்தில் புதிரான விசயம் என்றார். எனக்கு அந்த 1 சதவிகிதம் போதும், "என் குரு" இருக்கிறார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அப்போது, 'நமக்குள்ளிருக்கும் சக்திதான் இந்த உடலையே உருவாக்கியது. அதனுடன் சற்று தொடர்பில் இருந்தால் ஏன் சிறு குறைகளை சரி செய்ய முடியாது' என்னும் சத்குருவின் வாசகம் நினைவிற்கு வந்தஉடனே நம்பிக்கை பிறந்தது அடுத்த இரண்டு மாதம் பயிற்சி... பயிற்சி... மற்றும் தியானம், அதைத் தவிர என்னால் வேறு எதையும் செய்ய முடிய வில்லை. வீட்டை விட்டு வெளியே படி இறங்கி வரமுடியாது. இரண்டு மாதம் வீட்டிற்குள்ளேயே walker வைத்து நகர்ந்து கொண்டிருந்தேன்.
ஆபரேசன் செய்யாம இப்படியே சும்மா உட்கார்ந்திருந்தா எப்படி கால் சரியாகும்? என்று ஆளாளுக்கு அறிவுரைகள் வேறு. தலையே வெடித்திடும் போல் இருந்தது. என் வீட்டில் இருந்து நான் இருக்கும் இடத்திற்கு "லிங்கபைரவி குடி" எடுத்து வரச்சொல்லி அருகிலேயே வைத்துக் கொண்டேன். தேவியின் சக்தி அதிர்வில் புது உற்சாகம் கிடைத்தது. காலில் பலம் அதிகமாவது உணர முடிந்தது. இப்பொழுது முழுமையாக குணமடைந்து விட்டேன். ஆபரேசன் இல்லை, மருத்துவம் இல்லை, மருந்து இல்லை. நான் ஓடுகிறேன், விளையாடுகிறேன், நடனமாடுகிறேன். அனைத்து யோகாசனங்களும் செய்கிறேன். இது "அருளில் மலர்ந்த ஓர் அதிசயம்."
கடந்த நவம்பர் 3ம் தேதி அமாவாசையன்று வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்காக "சிவாங்கா சாதனா”வில் இருந்தேன். மனதிற்குள் வருத்தம்... என்னால் ஏழு மலை ஏறி இறங்க முடியுமா? என்று. மலையேறும் நாள் நெருங்க நெருங்க இது மிகவும் சிரமமான விசயம் என்று நினைக்கும்போது என்னால் தாங்க முடியவில்லை. தினமும் காலையில் குருபூஜை முடித்துவிட்டு கண்ணீரோடு பயிற்சிகள் தொடரும், மனதிற்குள் மலையேறும் தீவிரம் மட்டும் அதிகமானது. கடந்த அக்டோபர் 20 அன்று விளையாட்டின்போது (அதே கால்) கணுக்காலில் அடிபட்டு சற்று சவ்வு கிழிந்துவிட்டது. மருத்துவர் ஆலோசனையில் காலில் கட்டு போட்டு ஓய்வில் இருந்தேன். மலையேற இரண்டு வாரமே இருக்கும் நிலையில் மீண்டும் சோதனை. உடளலவில் மலையேறவே முடியாது என்று இப்பொழுது நன்றாகவே தெரிந்துவிட்டது.
நவம்பர் 3 வந்தது. ஒரு மலையில் பாதியாவது ஏறிவிட்டு இறங்கிவிடலாம் என்று ஏற ஆரம்பித்தேன். (காலில் கட்டோடு செருப்பு அணியாமல்) மனதிற்குள் மந்திரம் உச்சரித்தபடியே தனியாக நடந்தேன். ஒவ்வொரு படியும் அதில் நின்ற கற்களும் என் குருவின் பாதங்களாக நினைத்து தொட்டு தொட்டு தழுவி நடந்தேன், கண்ணீர் மல்கியது.
உடலில் திடீரென புது உற்சாகம் புது சக்தி பிறந்தது. வழியெங்கும் அமரவில்லை, ஓய்வெடுக்கவில்லை. முதல் மலை முழுவதுமாக ஏறி கடந்தேன். நம்பிக்கை மலர்ந்தது. திரும்பி வருவது பற்றி எனக்கு கவலையில்லை. ஏழாவது மலை உச்சி மட்டுமே என் இலக்காக இருந்தது.
நடந்தேன்... நடந்தேன் ... ஏழாம் மலை உச்சியில் போய் விழுந்தேன்! மேகங்களின் ஸ்பரிசம் என் உடல் உஷ்ணத்தை தணித்தது! தெய்வீகத்தின் அருள்மடி என் உள்ளத்தின் தாகத்தை குளிர்வித்தது.
தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் என் பாகமாக உணர்கிறேன்... "நீங்கள் இந்த செயலில் உங்கள் கரங்களை இழந்தால்... என் கரங்களைத் தருகிறேன். கால்களை இழந்தால்... என் கால்களில் நடக்கலாம்". என்ற சத்குருவின் வார்த்தைகள் என் வாழ்வில் நிதர்சனமான உண்மை. என் குருவின் பாதங்களில் என் இதயத்தை சமர்ப்பிக்கிறேன்.