ஐ.டி. இளைஞரின் பசுமை தாகம் !
கைநிறைய சம்பளம், சொகுசான வாழ்க்கை, சனிக்கிழமை இரவு பார்ட்டிகள் என காலத்தைப் போக்காமல், இந்த ஐ.டி. இளைஞருக்கு மரங்களின் மேல் எப்படி வந்தது ஆர்வம். தொடர்ந்து படியுங்கள்...
கைநிறைய சம்பளம், சொகுசான வாழ்க்கை, சனிக்கிழமை இரவு பார்ட்டிகள் என காலத்தைப் போக்காமல், இந்த ஐ.டி. இளைஞருக்கு மரங்களின் மேல் எப்படி வந்தது ஆர்வம். தொடர்ந்து படியுங்கள்...
தஞ்சாவூரைச் சேர்ந்த திரு.ராகவேந்திரன் ராமாச்சாரி, தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) எஞ்சினியர். 27 வயதான இவர், பணி நிமித்தமாக சென்னையில் உள்ளார். ஆனால், அவரது மனப்போக்கு, சென்னை இளைஞர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம்... ராகவேந்திரன் மூலம் சென்னையில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட மரக்கன்றுகள் 15000க்கும் அதிகமானவை. இந்த மரக்கன்றுகள் அனைத்தும், ராகவேந்திரனின் வழிகாட்டுதலின் பேரில், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமணங்களுக்கு வந்த மக்களுக்கு, தேங்காய் பழம் கொண்ட தாம்பூலப் பைகளுடன் பசுமைத் தாம்பூலமாக இலவசமாக வழங்கப்பட்டவை.
யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன்?
Subscribe
இங்கே இத்தனை இளைஞர்கள் தங்கள் வேலை, குடும்பம், பணம் என்று ஓடிக்கொண்டிருக்கையில், இவரது கரங்கள் மட்டும் மண்ணைப் பூசிக்கொண்டு மரங்கள் நடுவதேன்?!!!. அவரிடம் கேட்டபோது...
"எனக்கு தேவையான அளவுக்கு எல்லா வசதியும் இருக்குது. மூணு வருஷம் முன்னாடி வரைக்கும், நானும் மற்ற இளைஞர்கள் மாதிரி டி.வி பார்க்குறது, சாப்பிடுவது, தூங்குவது என்றுதான் என் ஓய்வு நேரத்தைச் செலவு செய்தேன். 2010 மார்ச் 3ம் தேதி நான் செய்த ஈஷா யோகா வகுப்பு, என் வாழ்வையே மாற்றியமைத்தது. பாலைவனமாக மாறி வரும் தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக ஈஷாவின் 'பசுமைக் கரங்கள் திட்டம்' மேற்கொண்டு வரும் பணிகளை, அந்த நிகழ்ச்சியின் போது எடுத்துரைத்தார்கள். அப்புறம் நான் அந்தத் திட்டத்தைப் பத்தி 'யூ ட்யூப்' வீடியோக்களில் தேடிய போது, ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் முயற்சிகளும் செயல்களும் என்னைச் சிந்திக்க வைத்தன.
நம் கையில் எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், இயற்கையிடமிருந்து தான் உயிர் வாழ்வதற்கு, மூச்சுக் காற்றைப் பெற்றாக வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலை நீடித்தால் இன்னும் 10 வருடங்கள் கழித்து வெறும் பணம் மட்டுமே நம் கையில் இருக்கும், மூச்சுக் காற்று இருக்காது எனபதைப் புரிந்து கொண்டேன்."
இப்படி உணர்வுப் பூர்வமாகப் பகிர்ந்துகொண்ட திரு.ராகவேந்திரனின் அடுத்த கட்ட முயற்சி, ஈஷா பசுமைக் கரங்களுக்காக அதிகப் படியான நாற்றுப் பண்ணைகளை உருவாக்கித் தருவதுதான். தற்போது, ராகவேந்திரனோடு கைகோர்த்து, அவருடன் பணிபுரியும் நண்பர்களும் மற்ற ஐ.டி. நிறுவன இளைஞர்களும் தன்னார்வத் தொண்டில் ஈடுபடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடம் கொடுங்கள்!
தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை ‘ஈஷா பசுமை கரங்கள் திட்டம்’ அமைத்துள்ளது.
தற்போது மரக் கன்றுகளின் தேவை அதிகரித்து வருவதால், புதிய நாற்றுப் பண்ணைகள் அமைப்பதற்கு நமக்கு இட வசதி தேவைப்படுகிறது. 5 வருடங்களுக்கு இடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இடத்தை நன்கொடையாகவோ அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ நீங்கள் வழங்கலாம். நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடமளித்து உதவுவதன் மூலம் ஈஷாவின் இந்த பசுமைப் பயணத்தில் நீங்களும் உடன் பயணியுங்கள்!
ஊருக்கு அருகாமையில் அல்லது முக்கிய சாலைகளிலிருந்து அருகில், ஓரளவு நீர் வளமுள்ள 50 சென்ட் வரை உள்ள இடத்தில் பண்ணைகள் அமைக்கப்படும்போது, கன்றுகளை நன்கு வளர்க்கவும் பண்ணைகள் மக்களை எளிதாகச் சென்றடையவும் வசதியாயிருக்கும்.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், புதிய நாற்றுப்பண்ணைகள் அமைக்க இட வசதி வழங்குவது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062