திரு டி.ஆர்.கார்த்திகேயன் - குற்றம் மற்றும் நாட்டுப் பாதுகாப்பு விஷயங்களை ஆராயும் இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ'ன் முன்னாள் இயக்குனர். ஒரு தண்டனைக் கைதியை விசாரிக்கப்போய் ஈஷாவில் நுழைந்ததைப் பற்றியும், அதன்பின் தன் வாழ்க்கை எப்படி ஆசிர்வதிக்கப்பட்டதாக மாறியது என்பதையும் நம்முடன் நெகிழ்ச்சியாக இந்தக் கட்டுரையின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.

திரு டி.ஆர்.கார்த்திகேயன்:

2000ஆம் ஆண்டில், அப்போது நான் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்ததால், கோயமுத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஒரு கைதியுடன் உரையாட நேர்ந்தது. அவர் ஒரு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருப்பவர். ஆனால், சாந்தமாக, சந்தோஷமாகத் தெரிந்தார்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆச்சர்யமாக இருந்ததால், அவரை விசாரித்தேன். தான் ‘ஈஷா யோகா’ என்ற தியான வகுப்பை மேற்கொண்டதாகவும் அதன் மூலம் தான் செய்த தவறுகளை உணர்ந்து, கைது செய்த அதிகாரி மீதும் சாட்சியங்கள் மீதும், பல நாட்கள் தனக்குள் வளர்த்து வந்த வெறுப்பையும் கசப்பையும் விட்டொழித்ததாகக் கூறினார். யோகப் பயிற்சிகள் தனக்குள் ஏற்படுத்திய அதிசய மாற்றங்களைப் பற்றி கண்கள் விரியப் பேசினார்.

சிறை அதிகாரிகளை மேற்கொண்டு துளைத்ததில், வெள்ளைத் துணி உடுத்திய ஒரு எளிமையான மனிதரை என் முன் நிறுத்தினார்கள்.

சிறை அதிகாரிகளை மேற்கொண்டு துளைத்ததில், வெள்ளைத் துணி உடுத்திய ஒரு எளிமையான மனிதரை என் முன் நிறுத்தினார்கள். எந்தச் சம்பளமும் இல்லாமல் ஈஷா யோகா வகுப்புக்களை சிறைக் கைதிகளுக்கு அவர் சொல்லித்தருவதாகக் கூறினார்.

அடுத்தமுறை கோயமுத்தூர் செல்லும்போது, முதன்முதலாக ஈஷா மையத்துக்குச் சென்றேன். எங்கள் மூதாதையர் நிலத்திலிருந்து அது அதிக தூரமில்லை. பாதை மிக மோசமாக இருந்தது. ஜீப்பில்தான் செல்ல முடிந்தது. முதன் முதலில் சத்குருவைப் பார்த்தேன். அவரது எளிமையும் யாரிடமும் காணக்கிடைக்காத அவரின் பல நல்லியல்புகளும் என்னைக் கவர்ந்தன.

பின்னாளில் ஈஷாவின் முதல் ‘இலவச நடமாடும் மருத்துவமனையைத் துவக்கிவைக்க என்னை அழைத்தார்கள். அங்கே நான் கண்ட சில தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பு, வியப்பளித்தது. பின்னர் யோகப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டேன். ஈஷாவின் பல சமூகப் பணிகளிலும் பங்குகொண்டேன்.

கடந்த சில வருடங்களில் பல முறை ஈஷாவுக்குச் சென்று வந்துள்ளேன். சமூகப் பணியிலிருந்து யோகா வகுப்புக்கள் வரை, கடைசி குண்டூசியின் நுழைவு வரை திட்டமிடப்படுதலும் ஒவ்வொன்றும் பெரும் அர்ப்பணிப்புடன் செம்மையாகச் செயல்படுத்தப்படுவதும் பார்க்கிறேன்.

நகரவாசிகள், விவசாயிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், பல மதத்துக்காரர்கள், பல தேசத்துக்காரர்கள் என இப்படிப் பலரை ஈஷாவில் சந்தித்திருக்கிறேன்.

இந்த யோகா என்ற உள்விஞ்ஞானம், அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழக் கற்றுக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஈஷா மையம் கடந்த சில வருடங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தபோதும், அங்குள்ள காடுகளுடனும் மலைகளுடனும் இயைந்தே இருக்கிறது. "இந்தப் பொருட்களை இதுபோலும் பயன்படுத்த முடியுமா?" என்று நமக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் ஒரு சில பொருட்களைக் கொண்டு, சத்குரு அமைத்திருக்கும் கட்டடங்களும் பொருட்களும், அவருக்கே உரிய கலை ரசனையின் வெளிப்பாடு. சத்குரு கற்றுக்கொடுக்கும்போது, உயர்ந்த பீடத்தில் அமர்ந்து இருந்தாலும் மற்றபடி எல்லோருடனும் விளையாடுவதும் பேசுவதுமாக மிகச் சாதாரணமாக இருப்பார்.

எல்லாவற்றையும்விட கிராமப் புத்துணர்வு இயக்கமும் பசுமைக் கரங்கள் திட்டமுமே என்னை மிகவும் கவர்ந்தவை. இதன் மூலம் கிராமங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இந்தச் செயல்களை, மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்வது இன்றைக்கு மிக அவசியம்.

ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு மரம் இருக்கிறது என்பார் சத்குரு. ஈஷா பள்ளிகள் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையில் அற்புதமாக இயங்குகின்றன. எந்தச் சூழலிலும் உறுதியாக இருக்கும் ஆனந்தமான மனிதர்களை உருவாக்குகிறது.

நகைச்சுவை இழையோடும் சத்குருவின் பேச்சு எத்தனை பேரையும் எத்தனை மணி நேரமும் கட்டிப்போட வல்லவை. சிந்தனையிலும் பேச்சிலும் அவரிடமிருக்கும் தெளிவின் ஆழம் ஆச்சர்யமூட்டுபவை. அவருடன் பழகும் அனுபவமும் இத்தகைய மகத்தான இயக்கத்தின் பாகமாக இருப்பதும் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசிர்வாதம்!